கி. ராஜநாராயணன் காட்டும் உலகம் விந்தையானது அதில் நடமாடும் மனிதர்களும் விந்தையானவர்கள் அதிலும் அவர் உயிரூட்டி உலவவிடும் பெண்கள் அதி விந்தையானவர்கள். இந்த இவளும் அவர்களில் ஒருத்தி. 96 வயதை நிறைவு செய்திருக்கும் கரிசல் காட்டு கலைஞரின் புதிய படைப்பு இந்தக் குறுநாவல். கி. ராஜநாராயணன்: கி. ராஜநாராயணன் (பி. 1923) கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜம் – லக்ஷ்மி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர். இவரது முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு தேசத்திலிருந்து வந்து இங்கே குடியேறியவர்கள். கி.ரா. வின் படிப்பு எட்டாவது வகுப்புடன் நின்றுவிட்டது. ஆனால் நிறைய புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். கரிசல் பூமியும் அதன் மக்களும் இவரை எழுதத் தூண்டின. தந்தையிடமிருந்து கேட்ட நிறைய கதைகள் அதற்கு உரமிட்டன. கி.ரா.வின் எழுத்து நடை கிராமிய மணமும் கரிசல் மண்ணின் அழகும் கொண்டது. பாமர மக்களின் பேச்சுவழக்கையும் சொலவடைகளையும் லாவகமாகக் கையாள்பவர். முதல் நாவல் ‘கோபல்ல கிராமம்’ பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நாடோடி இலக்கியம், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று முப்பதுக்கும் மேற்பட்ட நூற்கள் வெளிவந்துள்ளன. இவரது வட்டார வழக்குச் சொல்லகராதி ஒரு முக்கியத் தொகுப்பு. ‘கதைசொல்லி’ என்ற இதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இப்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். அங்குள்ள பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். சாகித்ய அகாதெமி விருது உட்பட பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.