ஒரு சொல் ‘கொன்னுட்டேடா’. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கோவத்தில் உக்கிரம். கலவிக்குப்பின் அர்ப்பணம். நண்பர் கவிஞர் வதிலைபிரபாவின் ‘மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்’ கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையும் அப்படித்தான், படிப்பவர்களின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்ற கண்ணாடிகள். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் மனிதகுல வரலாற்றின் ஒரு பகுதி ஒளிந்து கிடக்கிறது. நாம் வாழ்ந்த, வாழும் வாழ்வின் ஒரு கதை வார்த்தைகளால் சித்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பிளிறல் யானைகளின் பிளிறல் அல்ல. மனித மனத்தின் வலி மிகுந்த பிளிறல். இந்தக் கவிதைகள் படிம வார்ப்புகள்.
மரத்தை வெட்டிச் சாய்த்தான் இரண்டு பெரிய தந்தங்களோடு ஒருயானை வீழ்ந்தது. வயிறு பிளந்து வீழ்ந்து கிடந்த யானைகளை பெரும் லாரிகளைக் கொண்டு அப்புறப்படுத்தினான். தலைமீது தும்பிக்கை வைத்து அவனை ஆசீர்வதித்த யானைகள் அவை. ஒவ்வொருமுறையும் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான் வெட்டி வீழ்த்துகிறான். இன்னமும் வனம் முழுக்க மரங்கள் ஆசீர்வதித்தபடி’மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல் இப்போது உங்களுக்குக் கேட்கும். ஒருநாள் இந்தத் தொகுப்பு பல்கலைக் கழகங்களில் பாடப்புத்தகமாகும்.
அகத்தியன்
திரைப்பட இயக்குநர்