கடல் கடந்த வாணிபம் என்பது பல நூற்றாண்டுகளாக தமிழரின் தொழில்முறைகளில் ஒன்று. அவ்வகையில், தமிழகத்திலிருந்து வட்டி தொழில் புரிய, மலேசிய – பர்மா பகுதிகளுக்கு கடல் கடந்து சென்றவர்கள் பலர். அதில் செல்லையா, வயிரமுத்து பிள்ளை, மரகதம், காமாட்சியம்மாள், மாணிக்கம், நாச்சப்பன் போன்ற கதைமாந்தர்களும் அடங்குவர். அப்படி சென்றதில் சில இளைஞர்கள் நேதாஜியின் இந்திய ராணுவத்திலும் சேர்ந்து போரிட்டுள்ளனர். கதைமாந்தர்களுக்குள் நடக்கும் பல அடுக்கு உணர்வுப்பூர்வமான மனவோட்டங்களின் கூறுகளையும், ஆங்கிலேயே, ஜப்பானிய, இந்திய துருப்புகளுக்குள் நடக்கும் போர்களையும் உணர்வுபூர்வமான வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. செல்லையா-மரகதம் இவர்களுக்குள்ளான அன்பும், அது பிடிக்காத மரகதத்தின் தந்தை வயிரமுத்து, அவர்களின் திருமணத்திற்கு தடங்கலாக இருப்பதும் என்கிற பின்கதை உணர்வுக் குவியலாக எழுதப்பட்டிருக்கிறது.
அதுபோக, அப்போதைய வட்டிக்கு விடும் தொழிலில் நடக்கும் நெளிவு சுளிவுகளும், கால்சராய் போட்டவன் அந்த தொழிலுக்கு சரிபடமாட்டான் போன்ற பத்தாம் பசலித்தனமான விஷயங்களும் அக்காலங்களில் இருந்து வந்ததை அறியமுடிகிறது. பக்கத்து ஊருக்கு சென்று வருவதை போன்று பினாங்(மலேசியா)/பர்மா /இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அக்காலங்களில் இவர்கள் சென்று வந்ததாக காட்டப்படுவது, வெகுவான உண்மையே ஆனாலும் ஆச்சரியத்தை தருகிறது.காரைக்குடி செட்டிநாடு வீடுகள் ஏன், எப்படி , எந்த வரும்படியை கொண்டு அரண்மனை அளவிற்கு கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு இந்நாவல் ஒரு சான்று.
Reviews
There are no reviews yet.