பிரச்னைகளைச் சமாளிக்கத் தெம்பில்லாமல் ஆண்கள்தாம் சாமியாராக ஓடிப்போவது வழக்கம். இந்நாவல், பெண்கள் அப்படி வெளியேறினால் என்னாகும் என்னவெல்லாம் ஆகும் என்பதைப் பேசுவதாக அமைந்துள்ளது இந்நாவலின் சிறப்பு எனலாம். அவருடைய முதல் நாவல் இது என்று சொல்லமுடியாதபடிக்கு விறுவிறுப்பான நடையிலும் எளிய நேரடியான மொழியிலும் கதை சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே நல்ல சிறுகதையாளராக அறியப்பட்டுள்ள வரத.ராஜமாணிக்கம் இனி நல்ல நாவலாசிரியராகவும் பயணத்தைத் தொடர்வார்.
பயணங்களின் நாவல் இது என்று சொல்லுமளவுக்குப் பலரும் தங்கள் வாழ்விடம் துறந்து தப்பிப் பயணிக்கிறவர்களாக வருகிறார்கள். கோவிந்துவின் அம்மா முதலில், அப்புறம் கோவிந்து, அந்தப் பாவப்பட்ட பெண் நேத்திராவதி, முத்தனின் மனைவி சரசு, கோவிந்துவின் மனைவி சசி என நீள்கிறது பட்டியல். கடைசியில் பார்த்தால் பசுபதியும் கூட அப்படித் தப்பி ஓடிவந்து ரயிலில் செட்டிநாட்டுக்காரரான நாகப்பனால் காப்பாற்றப்பட்டு பழனி வந்தவள்தான். நிறையப் பெண்கள் தப்பி ஓடுவதாக நாவலில் வருவது கவனத்தை ஈர்க்கிறது.