திருமணம், குழந்தை, நல்ல பொருளாதாரம் அவ்வளவுதான் வாழ்க்கை செட்டிலாகிவிட்டது என்கிற கருத்துள்ள ஊரில், இவை அனைத்தும் கிடைத்த பின்னும், தான் விரும்பியதைப் படித்தே ஆகவேண்டுமென்கிற போராட்டம். அதில் வெற்றி இப்படியான ஒரு வாழ்வியலை எந்தப்பூடகமும், தொங்கு சதையுமின்றி நேரடியாக இயக்குநர் பாலுமகேந்திரா ஸ்டைலில் எழுதி இருக்கிறார்
இஸ்லாமியக் குடும்பங்களில் அவர் படிக்கும் காலத்தில் கல்விக்கு இருந்த நெருக்கடி, கல்லூரி காலத்தில் காதலால் ஏற்படும் இடைநிறுத்தம், “நல்ல சுகத்தோடு இருக்கும்போதே உன்னை கரைசேர்த்துவிடவேண்டும்” என்கிற தந்தையின் குரல். அத்தனைக்கும் ஆட்பட்டு, அதன்பிறகும் படிக்க முயன்று, திருமண வாழ்வின் முறிவுக்கு அருகில் வரை சென்று, மீண்டிருக்கும் அவரது கதையில், ஏராளமானவற்றைச் சொல்லாமல் உணர்த்தியுள்ளார்.
கார் ஓட்டுவதற்கு அனுமதிக்காத கிராமத்தில் சொந்தமாக கார் வாங்கி வாசலில் நிறுத்தும் துணிச்சல் அவருக்கு வாய்த்திருக்கிறது. அதுதான் அவருக்கு கல்வி மீதான ஆவலை அவரது இலக்கை திருமணத்திற்குப்பிறகும், குழந்தைக்குப்பிறகும் பகீரதபிரயத்தனம் செய்து அடையவைத்திருக்கிறது.
இதை ஒரு நாவலாகவோ, இலக்கியத்தரம் வாய்ந்த படைப்பாகவோ கொண்டுவர அவர் துளியும் முயலவில்லை மாறாக தனக்கு நேர்ந்ததையும் அதிலிருந்து விடாப்பிடியாக தான்நினைத்த இடத்திற்கு நகர்ந்து வந்ததையும், எங்கோ ஓர் அரபு நாட்டில் வசித்துக்கொண்டு கல்வி கற்றுப் பட்டம் பெற்றதையும் அவர் நேரடியாக வாசகனுக்குச் சொல்கிறார்.
இஸ்லாமியக் குடும்பங்களில் மட்டுமல்ல தமிழ்ச்சூழலில் இருக்கும் முக்கியப்பிரச்சனையான பெண் கல்வி பற்றிய ஆவணம் இது. நாம் முயன்றால் அத்தனை நெருக்கடிகளையும் உடைக்கலாம் என்கிற ஊட்டம் கதை முழுவதும் கிடைக்கிறது. ஆண்களும் பெண்களும் வாங்கிப்படித்து, உங்கள் எண்ணங்களை வலுவேற்றிக்கொள்ளலாம்.