கொரானா காலத்தில் என் மகள் ஆலீஸுக்கான கதைப் புத்தகங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப படித்த சொற்பம் சில கதைப் புத்தகங்களால் பதினாறு மாத வயதான ஆலீஸுக்கு பெரும் சலிப்பு ஏற்படவே, அவளுக்கான கதைத் தேடலில் இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இந்த ஆறு சிறுகதைகளும் வெவ்வேறு தருணங்களில் அவளுக்காகச் சொல்லப்பட்டவையாகும்.
இப்போது முப்பது மாத வயதுடைய ஆலீஸுக்கு மிகவும் பிடித்த இந்தக் கதைகள் சிறுவர் சிறுமிகள் உட்பட அனைத்து வயதினரையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என நான் நம்புகிறேன்.
ஊதுவர்த்தியின் சிறு புகையில் வண்ண உலகத்தை அடக்கி, இறகு முளைத்து சுற்றிப் பறந்து கனவு காணும் குழந்தைகளின் உலகத்தில் நுழைவது அவ்வளவு சுலபமில்லை என்பதை நான் நன்கு அறிவேன். அந்த உலகிற்குள் அழைத்துச் செல்ல ஒரு பிஞ்சு விரல் எனக்குக் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.
– கு.கு.விக்டர் பிரின்ஸ்