திரைப்படம் என்பது மாபெரும் கனவுத் தொழிற்சாலை. அவற்றை பணம் சம்பாதிக்கும் தளமாகப் பார்ப்பவர்களும் உண்டு, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வெகுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல முனைப்போடு உழைப்பவர்களும் உண்டு. இந்தப் பின்புலத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஊடகங்களை பொதுவான முறையில் கூட விமர்சனம் செய்ய மறுக்கிறோம் அல்லது விமர்சனம் செய்பவர்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுகிறோம். இது தன்னையே தான் சுயவிமர்சனம் செய்து கொள்ள நாம் தயாராக இல்லை என்பதும் உணர வேண்டியது இருக்கிறது. அப்படிச் செய்தால் திரையும் எதார்த்த வாழ்வும் வெவ்வேறானவை. நேரெதிர் தன்மை கொண்டவை என்பதும் விளங்கும்.
திரை பெரும் வணிக நோக்கத்தோடு செயல்படும் ஒரு வியாபார சந்தை. அதில் ஒருபோதும் உண்மை முகங்கள் அடையாளப்படுத்தப்படாது. திரையில் தோன்றும் பல கொடூர முகங்களுக்கு திரைக்கு வெளியே மனிதநேயமிக்க மனமும் உண்டு என்பதை பெரும்பாலும் நாம் ஏற்றுக் கொள்வது கிடையாது. அதோடு நம்முடைய சொந்தப் பணத்தை செலவழித்து திரையில் காணும்; காட்சிகளை விமர்சிக்கும் உரிமை நமக்கு உண்டு. அதற்கான சுதந்திரமும் நமக்கு இருக்கிறது. அதே நேரத்தில் நாம் தான் அதற்கு தயாராக வேண்டும். அதற்கான தேடலோடு இந்நூலில் அமைந்திருக்கிற கட்டுரைகள் இருக்கும் என நினைக்கிறேன்.