இந்தக் கட்டுரைகளையெல்லாம் படித்து முடித்துவிட்டு நிதானமாக அமர்ந்து யோசிக்கையில், நம்முன் எத்தனை விதமான மனிதர்கள் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்கிற மலைப்புதான் ஏற்படுகிறது. எப்படியாகிலும் படம் பண்ண வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் சரி சொன்ன இயக்குநர்கள் இருந்த, இருக்கும் இடத்தில்தான் பாஸ்கரன் போன்றவர்களும் இருந்திருக்கிறார்கள். ருத்ரய்யா போன்ற One Film Wonderகள் இருந்த இடத்தில்தான் எத்தனை தோல்விப் படம் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்த இயக்குநர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சற்று உற்றுநோக்கினாலே பல வாழ்க்கைப் பாடங்கள் கிடைக்கும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.