இன்றைய காலகட்டத்தில் தனியார் ராணுவ நிறுவனங்களின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் முன்னோடியாகக் கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் ஸ்டிர்லிங் என்ற முன்னாள் ராணுவ வீரர். ஸ்டிர்லிங் ஆறறையடி உயரம் கொண்ட, சிறந்த விளையாட்டு வீரர். 1937, 38ல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இரண்டாம் உலகப் போர் தொடங்கவே பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து அப்போது உக்கிரமான போர்கள் நடந்து கொண்டிருந்த வடக்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்றார்.
இரண்டாம் உலகப் போர் ராணுவத் தொழில் நுட்பத்தில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியிருந்தது. விமானங்கள், நீர்மூழ்கிகள், ரேடார்கள் என நவீன கருவிகள் பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்திருந்தன. இவ்வளவு நவீன கருவிகள் இருந்தும் தாக்குதல்களை தளபதிகள் பழைய முறையிலேயே நடத்தி வருவதாக ஸ்டிர்லிங்குக்குத் தோன்றியது. ஒரு பெரிய படைப் பிரிவு மெதுவாக முன்னேறி தாக்கி ஏற்படுத்தும் சேதத்தை விட, நல்ல பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட ஒரு அதிரடிப்படைப் பிரிவு விமானம் அல்லது நீர்மூழ்கி மூலம் எதிரியின் பின்புலத்தில் இறங்கி திடீர் தாக்குதல் நடத்தினால் விமானத்தளங்கள், சாலைகள், தகவல் தொடர்பு நிலையங்களுக்கு பெரிய சேதம் ஏற்படுத்த முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். இப்போது இது சர்வசாதாரனம் என்றாலும் அப்போது பழமையில் ஊறிப்போன பிரிட்டிஷ் ராணுவத்திற்கு இது ஒரு புரட்சிகரமான திட்டமாகத்தானிருந்தது.