எப்போதும் சூழல்தான் நம்மை, நிலவுகிற கலையின் விஸ்தீரணங்களை தீர்மானம் செய்கிறது. பழம்பெருமையில் ஊறித் திளைத்து கெட்டி தட்டிப் போகிற மூடின மனங்கள் இந்தப் படத்தில் வருகிற ஒரு தலைமையாசிரியரை போலத்தான் நடந்து கொள்ளும். யாரேனும் எதையாவது சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஒரே சீரில், “கோ, கோ…” என்று ஒரே சொல்லை பல தொனிகளில் சொல்லி எதையோ சொல்ல வந்தவரை விரட்டியடிக்கும். இப்படியாக இங்கே இறக்கி விடப்பட்ட ஷட்டர்கள் ஏராளம். அப்படி நமது சினிமாவும் பலவற்றிற்கும் பழக்கப்படவில்லை. உலகம் முழுக்க சோப்பு, சீப்பு, செல்லு எல்லாம் ஒரே மாதிரி விற்கிறார்கள், பிராந்திய மனிதன் உலக மனிதனாகி விட்டான் என்று அறைகூவல் விடுக்கிறார்கள். ஆனால் சினிமா இப்போதும் பாட்டி வடை சுட்ட கதை சொல்கிறது. ‘சூப்பர் டீலக்ஸ்’ உண்டாக்கின அதிர்வலைகள் படம் சரியா, தப்பா- கலையா, கண்றாவியா என்பதில் இல்லை. பிரச்சனைகள் முழுக்க இதை எதற்கு சொல்ல வேண்டும், சொல்ல வேண்டாம் என்பதில் இருந்தது. படத்தின் எதிர்ப்பாளர்கள் அல்ப லாஜிக்குகளைக் கேள்வி கேட்டு சிணுங்கிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு இவர்கள் இப்படி கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்து பல படங்களை அது வந்த நேரத்தில் தோற்கடித்திருக்கிறார்கள். ஒருபோதும் இந்த மரபு முடிந்து போவதேயில்லை.