மாப்ளா (Moplah அல்லது Mappilla) என அழைக்கப்படும் முஸ்லிம் சமூகத்தவர் கேரளாவில் வசிக்கும் மக்களாவர். இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய முஸ்லிம் மதத்தவர் இவர்களே. எட்டாவது நூற்றாண்டில் சேர நாட்டுடன் அரபு நாட்டு மக்கள் நீண்ட கால வணிக உறவு கொண்டுருந்தார்கள் என்பது வரலாறு. அரேபிய மண்ணில் தோன்றியதே இஸ்லாமிய மதம். இஸ்லாமிய மதத்தின் கடைசி இறைத் தூதரான முகமது நபியின் தலையாய போதனைகளான “உருவமற்ற இறைவன். இறைவன் ஒருவனே” போன்றவற்றால் கவரப்பட்ட சேரநாட்டு மக்கள், இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள். கடல் தாண்டிய வணிக உறவு என்பதன் பின்னணியில் பார்க்கும் போது, கேரளாவின் மேற்குக் கடற்கரைப் பிரதேசமான மலபாரில் இஸ்லாமிய மதம் பரவியதும் அப்பிரதேசத்தின் மக்கள் அம்மதத்தைத் தழுவியதும் இயற்கையாக நடந்தேறிய ஒன்றாகயிருந்தது. இம்மக்களே மாப்ளாக்கள். 16 மற்றும் 17 ஆம நூற்றாண்டில் மலபார் பிரதேசத்தில் நுழைந்த போர்த்துக்கீசியர்கள் அங்கு தமது ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்தப் போராடியதோடு அங்கேயிருந்த இஸ்லாமிய சமூகத்தவரை (மாப்ளா) கிறித்துவத்தைத் தழுவ வற்புறுத்தியபோது மாப்ளாக்களுக்கும் அவர்களுக்கும் சண்டை மூண்டது. தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனியின் (பிரிட்டிஷ்) ஆட்சியதிகாரம் அங்கே நிறுவப்பட்டபோது, கேரளாவின் பாரம்பரிய நிலப்பிரபுத்துவ சக்திகளான (இந்து உயர்சாதி) ஜென்மிகளுக்கும் மாப்ளா மக்களுகும் இடையே தொடர்ந்து நிலவிய போராட்டத்தின் இடையில், பிரட்டிஷ் ஆட்சி என்ற ஏகாதிபத்திய சக்தி, மதத்தையும் மலபார் மண்ணின் தனிப்பட்ட சமூகப் பொருளாதாரக் கூறுகளையும் எவ்வாறு தனக்குச் சாதமாக மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது என்பது மிக முக்கியமான ஆனால் அதிகமாகப் பதிவு செய்யப்படாத வரலாறு. இந்த வரலாற்றைத் தமிழ் மக்களிக்கு அறிமுகம் செய்யும் முயற்சியே இந்த நூலாகும்.