தமிழ்மொழி, மக்கள் மொழி! பண்டித மொழி அன்று!
முன்னெப்போதைவிடவும் இப்போது தமிழ்மொழியியல், அறிஞர்களைக் கடந்து, மக்களிடையேயும் பரவத் துவங்கியுள்ளது. தமிழ் இலக்கியம், தமிழ்த் தொல்லியல், தமிழ் வரலாறு -யாவும் பொதுமக்களே பேசத் துவங்கிவிட்டனர்.
அன்று சமஸ்தானங்களில் ஒரு சிலரிடம் மட்டும் சிறைப்பட்டிருந்த தமிழ், இன்று வீட்டுக்கும் வீதிக்கும் வரத் துவங்கிவிட்டது. கீழடித் தொல்பொருள் அகழாய்வில், அறிஞர்கள் மட்டுமல்லாமல், பொது மக்கள் காட்டும் அன்பும் ஆர்வமும் கண்டு, தமிழ்த்தாய் உள்ளபடியே மகிழ்வாள். “அன்பு ஈனும் ஆர்வம் உடைமை; அது ஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு” என்பது ஐயனின் குறள். அன்பு ஆர்வத்தை ஈனும்; ஆர்வம் நட்பை ஈனும். மக்களுக்கும் மொழிக்குமான அந்த அழகிய நட்பு பூக்கத் துவங்கிவிட்டது!
மக்கள்-மொழி நட்பு இன்னும் வளர்ந்து ஆழங்கால் பட வேண்டும். அறிய அறியத்தான் அறியாமை அகலும். தெரியத் தெரியத்தான் தெரியாமை விலகும். மக்களுக்குத் தெளிவு பிறக்கும். இனத்துக்கு மானம் பிறக்கும்!
மொழியை நோக்கிய நம் பயணங்கள், வெற்றுப் பெருமை பாட அல்ல! வேர்களை அறிய! பல்லாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள், சமூகநீதியால் மேல் எழும்புதல் போல், பல்லாண்டுகளாக மறைக்கப்பட்ட மொழியியலும், சமூகநீதியால் மேல் எழும்பும்!
மொழி நோக்கிய பயணத்தில், பிழையான கற்பிதங்களை விலக்கி, அறிவியல் தரவுகளோடு பாதைகளை வகுத்துக்கொள்வதே மொழி நலம். பல கற்பிதங்கள், மாற்றார் சதியால் விளைந்திருக்கலாம்; சில கற்பிதங்கள், நம் போலிப் பெருமையாலும் விளைந்திருக்கலாம்; சில கற்பிதங்கள் அறியாமையால் விளைந்திருக்கலாம். அவை யாவும், அறிவியல் துணைக்கொண்டு திருத்திக்கொள்வோம். இனி வரும் நூற்றாண்டுகளில் அறிவியலே, தமிழின் நண்பன்!
தரவுகளால்தான் அறிவியலின் சீர்மை! அதே போல் தரவுகளால், நம் கற்பிதம் பலவற்றைச் சோதித்துப் பார்த்து, பிழைகளைக் களைந்து கொள்வோம். “இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம் எழுதினான் ஓலை பழுது” என்பது நாலடியார் தமிழ் நெறி! பழுதான ஓலைகளை மாற்றி எழுதுவோம்!
____________
*கற்பிதம் விலக்கி, கேள்வி கேட்டுக்கேட்டுப் பரவியதே அறிவியலின் வெற்றி!
*கற்பிதம் விலக்கி, கேள்வி கேட்டுக்கேட்டுப் பரவலே தமிழ் வெற்றி ஆகட்டும்!
அந்த நோக்கில் வெளிவரும் கேள்விகளின் புத்தகமே இது! கேள்வி கேட்டோர், கேட்கின்றோர், கேட்போர் – யாவருக்கும் நனி நன்றி. கேள்வியால் வேள்வி செய்வோம் வாருங்கள்! -இது தமிழ் வேள்வி! தமிழ்க் கேள்வி!