இஸ்லாமியர்களின் படையெடுப்புகளால் தான் இந்தியாவில் முகமதிய மார்க்கம் பரவியது என்ற கருத்து பரவலாக உண்டு. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் முகமதிய மார்க்கம் கடல்வழி வாணிகத்தால் தான் வேரூன்றியது.
தமிழகத்துக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கும் இடையிலான தொடர்பு, ஹிஜ்ரி ஆண்டு பிறந்த சில ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. இதற்கான ஆதாரம், கோட்டாறிலுள்ள ஈராக் நாட்டு கர்ஸிம் அவர்களது அடக்கவிடம். அதில் அவர் அடக்கமான ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது (ஹிஜ்ரி 4- கி.பி. 624).
தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்படும் யவனர்கள், சோனகர்கள் ஆகியோர் அரபு தேசத்தவர்களே என்று கூறும் நூலாசிரியர், துலுக்கர், ராவுத்தர், மரைக்காயர், லெப்பை, அஞ்சுவண்ணம், பட்டாணி போன்ற முஸ்லிம்களைக் குறிக்கும் சொற்களின் பின்புலத்தையும் ஆராய்கிறார்.
இஸ்லாமிய இறைநேசர்களின் அடக்கத் தலங்களான தர்க்காக்களின் செல்வாக்கு பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்புகள், சமுதாய விழாக்கள், முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளான கல்வெட்டுகள், செப்பேடுகள், வழக்காறுகள் தொடர்பான தகவல்களை தனது கடும் உழைப்பால் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.
முஸ்லிம் தமிழ்ப் புலவர்களது காணிக்கைகள் என்ற தலைப்பிலான பின்னிணைப்பு, 700-க்கும் மேற்பட்ட நூல்களின் பெயர்களை, அவற்றின் இலக்கிய வகையுடன் பட்டியலிட்டிருக்கிறது.
ஒரு சமுதாயம் குறித்த ஆய்வேடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இந்நூல் விளங்குகிறது.