குமாரசெல்வாவின் முதல் நாவல் இது. பெண்மையின் தகுதி வளமை எனக் கொண்டாடும் உலகில் அது இல்லாத இருளியின் கறுத்த அனுபவத்தை ஊடுருவுகிறது நாவல். உலகை வளமாக்க அவள் மரங்களை நட்டுப் பள்ளிக் குழந்தைகளின் பசி தீர்க்கிறாள். தன்னை மணந்து கொண்டவனுக்கு இன்னொரு பெண்மூலம் பிறந்த குழந்தையைத் தனது மகளாக வளர்த்து அவளுக்கொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு, தனக்கு இல்லாத வாழ்க்கை நோக்கி தனிமைப் பாதையில் நடப்பதாக நிறைவுறாமல் தொடர்கிறது கதை. குமரி மண்ணின் மத அரசியல், பின்னணி நிழலாகப் படரும் வகையில் வரையப்பட்ட இந்த நாவல் சித்திரம் இதுவரைக்கும் சொல்லப்படாத பல பக்கங்களை நமக்குத் திறந்துகாட்டுகிறது. குமாரசெல்வா: குமாரசெல்வா (பி 1964) குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் மார்த்தாண்டம் சொந்த ஊர். பெற்றோர் செல்லையன் நாடார் – செல்லத்தாய். இரண்டு ஆண்மக்களில் இவர் மூத்தவர். திருமணமாகிப் பத்து வருடம் குழந்தை இல்லாத பெற்றோர், இவர் பிறந்ததும் பெறற்கரிய செல்வமாக அழைத்த இயற்பெயர் செல்வகுமார். இலக்கியம் தனக்குள் பிடிபட ஆரம்பித்தபோது, யதார்த்தம் தலைகீழான உணர்வில் இவர் மாற்றி அமைத்த புனைபெயர் குமாரசெல்வா. ஐந்து வயதில் இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்டுத் தாயாரால் ஊர் ஊராகச் சுமந்து சென்று வைத்தியம் பார்த்து நோயின் சுவடுகூடத் தெரியாத அளவுக்குக் குணமடைந்தவர். ஏழுவயதில் தந்தையை இழந்து வறுமையை உண்டு ஊக்கம் பெற்றார். கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு அனைத்தையும் தாயின் கடின உழைப்பால் பெற்று, அதன் பலன் எதையுமே காணாமல் மறைந்த அந்த வாழ்வின் உன்னதத்தைப் பேறாய் அடைந்தவர். இவர் மனைவி டாக்டர் சரோஜாபாய், ஹோமியோபதி மருத்துவர். சீகன்பால்க், தியான்செல்வ் என இரண்டு மக்கள். கல்லூரி ஒன்றில் தமிழ்மொழி, இலக்கியம் கற்பிப்பது தொழில். முகவரி : 14-101கி, மக்கவிளாகம், வழுதூர், அம்சி, தேங்காய்ப்பட்டணம் 629173, கன்னியாகுமரி மாவட்டம். செல்பேசி : 9443808834