தன் கண்எதிரே குடியுரிமை குறித்த ஆவணங்களை துருப்புச்சீட்டாக வைத்துக் கொண்டு அரசதிகாரம் நிகழ்த்திய பெரும் வன்முறையின் துக்கமிகு மனிதவாதையை முகாம் எனும் நாவலாக கட்டித்தந்திருக்கிறார். அ.கரீம். நாவலுக்குள் மைமூன்,ஷாகிரா எனும் இரண்டு பெண்களின் வாழ்க்கைக்குள் முன்னும் பின்னுமாக அலைந்து அவர்களின் பூர்வ சரித்திரத்தின் கதைகளின் தொகுதியாகவும் நாவலை எழுதியிருக்கிறார்.அத்தோடு சமகாலத்தில் மதபயங்கரவாதம் அரசின் கருவியாகி சிறுபான்மையினரின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிடும் தந்திரத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார்.
– ம. மணிமாறன், முன்னுரையில்
எப்போது வேண்டுமென்றாலும் நாடுமுழுக்க அமுல்படுத்தப்பட போகும் குடியுரிமை சட்டம் எல்லோருக்கும் பெரும் பீதியை உண்டாக்கி உள்ளது. இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டால் யார் யாரெல்லாம் முகாமுக்குள் அடைக்கப்படுவார்கள் என்று எல்லோருக்கும் வெளிப்படையாகவே தெரியும். கால காலமாக உழைக்கும் சமூகத்திடம் நிலம் என்பது எந்த காலத்திலும் இருந்தது இல்லை. அவர்களிடம் நீங்கள் இந்த நாட்டை சேர்ந்தவரா? என்று நிருபிக்க ஆவணங்களை கொடுங்கள் என்றால் எங்கிருந்து எடுத்துவந்து தருவது. இந்த சட்டம் முதலில் இஸ்லாமியருக்கு எதிராகத்தான் அமுல்படுத்தப்பட போகிறது, அதை தொடர்ந்து எல்லோரும் இந்த சட்டத்தின்கீழ் முகாமுக்கு அனுப்பபடுவார்கள் என்பதை இப்போது அசாம் முகாமில் பத்தொன்பது இலட்சம் மக்களில் பதிமூன்று லட்சம் மக்கள் இந்துக்கள் என்பதை கவனப்படுத்துகிறேன். யாரும் கேட்பாரற்ற அறவையர்கள் என்ற நாதியற்றவர்களின் துயர்மிகு எதிர்காலம் குறித்துதான் வரலாற்று புனைவாய் இந்நாவல் பேசுகிறது- அ.கரீம்