இந்தப் புத்தகத்தைப் படித்த பிரபலங்கள் பலரும் விழுந்து, விழுந்து சிரித்ததாகச் சொன்னார்கள். சொந்த ஊரில் போக்கிரித்தனங்கள் காட்டிவிட்டு, குடும்பத்தாரால் பணிக்காக அரபு நாட்டுக்கு விமானமேற்றி விடப்பட்ட ஆப்ரகாம் என்ற ஆவரான் என்ற ஒரு சவடால் பேர்வழி, சவூதி அரேபியாவின் கொடும்பாலைவனத்தில் தனிமையில் கிடந்து, துக்கித்து, வெந்து, நொந்து போன ஒரு துன்பியல் சம்பவம் எப்படி மேற்படி பிரகஸ்பதிகளின் சிரிப்புக்குக் காரணமானது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எப்படியாகிலும் ஒரு மனிதனுக்கு இயற்கையோ, இறைவனோ ஒரு வாய்ப்பைக் கொடுப்பார். அதை மனிதன் பயன்படுத்தத் தவறினாலும்கூட காலம் அந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்துமாறு ஒரு சூழலை உருவாக்கி விடுகிறது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் நம்மைச் சுற்றியிருக்கிற சக மனிதர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள். நம்முடைய ஒவ்வொரு துன்பத்திலும் நம்மை நேசிக்கிறவர்களை நாம் அடையாளம் காண முடியும். சகமனிதர்களை நேசியுங்கள். அதுவே நீங்கள் செய்யும் ஆயுட்கால தவம். நன்றி. – பிரபு தர்மராஜ்