இந்தப் புத்தகத்தில் இலக்கியத் தமிழ் கொஞ்சும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். நடைமுறை யதார்த்தங்களை முன்னிறுத்தி, கிட்டத்தட்டப் பேச்சு வழக்கிலேயே கையாளப்பட்ட குறுங்கவிதைகளே இதில் பெரும்பாலும் அடங்கும். இவற்றுள் ஏதேனும் ஒரு கவிதை உங்கள் மனதைத் தொட்டாலோ, பழைய நினைவுகளை உயிர்ப்பித்தாலோ அதுவே மிகப் பெரிய வெற்றியாய் கருதுகிறேன். பள்ளிப் பருவத்திலிருந்தே மொழிகள்மீது கொண்ட காதலை பேச்சுப்போட்டிகளிலும் எழுத்துப்போட்டிகளிலும் வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் அமைந்தன. பொருளாதாரத் தேவையால் பல வருடங்கள் மென்பொருள் பொறியாளராய் பணிபுரிந்தாலும் மொழி மீதான வேட்கை உள்ளுக்குள் தணியாமலே இருந்தது. ஒரு கட்டத்தில் மொழியுடன் இயைந்த வாழ்க்கை தேடல் தீவிரமாகவே, ஜெர்மன் மொழி கற்று, அம்மொழி பயிற்றுவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பயணித்தும், அகில இந்திய வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகத் தமிழ் மீதான காதலை வளர்த்தும் வருகிறேன்.