நடை சாத்திய பிறகு
இருட்டில் நெளியும் குப்பையாய்
அங்கிங்கெனாதபடி
கோவிலெங்கும் கொட்டிக் கிடக்கின்றன
சொற்கள்… சொற்கள்… சொற்கள்…
அவரவரின் அபிலாஷைகள்
ஒன்றையொன்று விழுங்கிச் செரித்து
உலகுண்ண வரும் மலைப்பாம்பென
உண்டியலுக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கின்றன.
அர்ச்சகரும் அபிஷேகமும் அற்ற
மந்திரமும் ஆராதனையும் இல்லாத
வெறுமையின் மைதானத்தில்,
சற்று முன்பு
தன்னை லட்சியமே செய்யாத குழந்தை
தவற விட்டுச் சென்ற
உறையாத புன்னகையை
எடுத்த பொற்பாதமென பற்றியபடி
குப்புறக் கிடக்கிறார்
யாருமேயில்லாத கடவுள்.
– மானசீகன் ❤️