எனக்கு நீச்சல் வராது என்பதால்
நண்பர்கள்
என்னைக் குளத்தில் இறங்கி
நீச்சலடிக்க விடவில்லை
அவர்கள் குளத்தில் குதித்து
விளையாடத் தொடங்கினார்கள்
அங்குமிங்கும் மனசு பறந்தலைந்தது.
யாருக்கும் தெரியாமல்
மனசு மீன் ஒன்றாக மாறி
குளத்தில் குதித்து
அவர்களுக்கு மேலால் குதித்துக் கொண்டிருந்தது
அவர்கள் மீனைப் பிடித்துவிட வேண்டுமென
பல முயற்சிகள் செய்தும் முடியவில்லை
நீரினுள் ஒருமுறைக்குப் பலமுறை
அமிழ்ந்து மேலெழும்பியது மீன்
ஐயோ இந்த மீனைப் பிடிக்க முடியவில்லை என்றார்கள்
சுவாரஸ்யமாக அங்கு நேரம் கழிந்தது
நண்பர்கள் மீனைப் பிடிக்க முடியாதவர்களாகவே
கரையேறினார்கள்
மீன் என்பது கற்பனை என்பதால்
அவர்களுக்கு முன்
குளத்திலிருந்து கரையேறி விட்டேன்.