நேசமித்ரன் கவிதைகள் பலதளங்களில் இயங்கும் படிமங்கள் ஒன்று சேர்ந்து ஒரு அச்சில் சுழற்றும் போது பெறப்படும் முப்பரிமாணச் சிற்ப விசித்திரங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தத் தொகுப்பின் கவிதைகளில் காதல் என்னும் ஒழுங்கு ஒரு மைய அச்சாக இயங்குகிறது.பொதுவாகவே பிரமிளுக்குப் பிறகு படிமங்களை நெருக்கமாகவும், வார்த்தை விரயங்களின்றியும் தருபவை நேசமித்ரன் கவிதைகள். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்க் கவிதையில் நல்ல பல புதிய குரல்கள் கேட்கின்றன. அதில் நேசமித்ரனின் குரல் என்பது வலுவான குரல்.தமிழ் நவீன கவிதை உலகிற்கு பல புதிய கவிதைகளைச் சேர்க்கிறவராக இருக்கிறார் சகோதரர் நேசமித்ரன். அவருடைய கவிதைகளில் வருகிற அறிவியல் செய்திகளை, நல்ல தமிழில் தருவதற்காக அவரைப் பாராட்டுகிறேன். அவருடைய சில கவிதைகளைப் படிக்கையில் எனக்குப் பல புதிய பொறிகள் தோன்றி நான் சிறிய கவிதைகள் எழுதியிருக்கிறேன். என்னைப் புதுப்பிப்பதற்கு அவரது புதுக்குரல்களை நான் செவி மடுப்பதும் ஒரு காரணம். அந்தவகையில் நான் அவருக்கு நன்றி பாராட்டவும் செய்கிறேன். நல் வாழ்த்துகள் நேசமித்ரன்
– கலாப்ரியா