மார்க்ஸின் கருத்துகளின், போதனையின் முழுத் தொகுப்பு முறையே மார்க்ஸியம், 19ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மூன்றும் மனிதகுலத்திடையே முன்னேற்றத்தில் தலைசிறந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம், மூலச்சிறப்புள்ள ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சுப் புரட்சிப் போதனைகளுடன் கூடவே பிரெஞ்சு சோஷலிஸம் என்பனவாம். இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து அவற்றிற்கு முழுநிறைவு அளித்த மேதைதான் மார்க்ஸ். மார்க்ஸின் கருத்துகள் குறிப்பிடத்தக்க முறையில் முரணற்ற தன்மையும் முழுமையும் பெற்றிருப்பவை, அவரது எதிரிகள்கூட இதை ஒப்புக் கொள்கின்றனர். இந்தக் கருத்துகள் முழுவதுமாகச் சேர்ந்துதான் நவீன காலத்திய பொருள்முதல்வாதமாகவும் நவீனகாலத்திய விஞ்ஞான சோஷலிஸமாகவும் உள்ளன. இவ்விரண்டும் உலகிலுள்ள நாகரிக நாடுகளிலெல்லாம் தொழிலாளர் இயக்கத்தின் தத்துவமாகவும் வேலைத் திட்டமாகவும் திகழ்கின்றன.