அமெரிக்காவின் கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கரின் குறுகிய வரலாற்றையும் இந்திய ஒடுக்கப்பட்ட தலித் இன மக்களின் நீண்ட நெடுங்காலத்து வரலாற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் வேறுபடுத்திப் பார்க்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அடக்குமுறை, அவமானம், வன்கொடுமை, வேதனை, பசி, பட்டினி, இழிதொழில், கல்வி மறுப்பு, சேரி வாழ்வு, வழிபாட்டுத் தலங்களிலும் தனிமைப் படுத்தல், தீண்டாமை, நிறவெறிக் கொடுமை, சமூகப் புறக்கணிப்பு என அனைத்தும் இருவருக்கும் பொதுவானவையே.
அமெரிக்கக் கறுப்பின மக்களின் அடிமை வாழ்வு வெறும் 400 ஆண்டுகளே. ஆனால் இந்திய தலித்துகளின் அடிமை வரலாறு 3000 ஆண்டுகள் நீண்டவை. அமெரிக்காவின் நிறவெறி நவீன முதலாளித்துவத்தின் விளைவு. செல்வ வெறி, லாப வேட்கை, உழைப்புச் சுரண்டல், நிறவெறி, அடிமைமுறை, காலனியாதிக்கம் ஆகியன முதலாளித்துவப் பணவெறியின் பல்வேறு முகங்கள்.
ஆனால் இந்திய கறுப்பின தலித்துகளின் காலம் காலமான விலக்கலும், ஒடுக்குமுறையும், அடக்குமுறையும், உழைப்புச் சுரண்டலும் தொன்மைக்கால ஆரியப் படையெடுப்பின் இனவெறி யின் விளைவு. இந்து இந்தியாவின் கறுப்பு, வெள்ளை நிற பிரிவினை யும், கொடுமைகளும் புனித சட்ட விதிகளால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. வர்ணாசிரம தர்மம் எனப் புனித மதப் போர்வையில் சமூக அடக்குமுறைக்கான சட்டமாக மனு நீதி உருவாக்கப்பட்டது. இத்தகைய மதரீதியிலான ஒடுக்கு முறைச் சட்டத்தை உலகில் வேறெங்கும் காணமுடியாது.