இடத்துடன் மனம் இணையாதிருக்க, இந்தியத் துறவிகள் பொதுவாக எந்த ஒரு இடத்திலும் அதிக காலம் இருத்தலைத் தவிர்ப்பது வழக்கம். இதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகம், எங்கோத் தம்மைத் தொலைத்தது போல் உணரத் தொடங்கி, வெறுமையில் நிலையான ஒரு இடத்தை, தமக்கென அடையாளங்களைத் தேடுகிறது. துறவிக்கும் சாமானியனுக்கும் இடையில் நிகழும் இந்த முரணியக்கத்தை அடையாளம் குறித்த விவாதத்தின் தொடக்கமாகப் பார்க்கிறேன்.
இந்தப் புள்ளியிலிருந்து நம் யாத்திரையைத் தொடங்கினால், அடையாளங்களைக் களைவதும் அணைப்பதும் மனதின் மெல்லிய அசைவால் நிகழ்வதை உணரலாம். எழுத்தாளன் அடிப்படையில் அபத்த தரிசனவாதி என்பதால், இவ்வகை பாவனைகளுக்கு அப்பால் திகழும் 'அகம்' நோக்கி நகரவே விரும்புவான்!
பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒரு பக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன.
தூத்துக்குடி, திருக்குறுங்குடி, மணப்பாடு, பூவந்தி, மேலப்பாளையம், பூதப்பாண்டி, கழுகுமலை, சிங்கிகுளம், பேகம்பூர் எனப் பல திசைகளில் இருந்து சதுக்கை (ஜங்சன்) எனும் தாமிரபரணியின் தீரவாசத்திற்கு மனித உறவுகளை அழைத்து வந்து குன்னிமுத்து மாலை கையில் கொடுத்து ஆடவிட்டு, அவர்கள் விளையாட அதன் வாயிலாக கண்டடையும் நீலகண்டம் நகரம் தான் அரம்பை கதை.
இது அறிந்தவற்றைக் கொண்டு அறியாதவற்றின் மீது சுமத்தப்படும் கற்பனை முயற்சி.
செங்கேணி ஒருவாரம் தங்கினாள். பழகப்பழக அவளுடம்பின் ஆண் தடயங்கள் அறவே மறைந்துப்போயின. மனிதவுடம்பு தசை, நரம்பு, எலும்பு, குருதி இவற்றால் மட்டுமன்று, அது மொழி என்னும் சமூகக் கூட்டு அறிவாலுமானது. செங்கேணியின் மார்பில் கைப்பிடிக்குள் அடங்கும் ஆண் காம்பு அரும்பிய முலைகள் புடைத்திருந்தன; அவை மொழியாலானவை. ஆம், மொழியின் இயங்கியல் ஓர் உடம்பின் பால் தன்மையை மாற்றியமைக்க வல்லது. இது, கல்லை நட்டு தெய்வம் என்று வணங்கும் மனவேதிமையின் பாற்பட்டது. கல்லை உயிர்ப்பிக்கும் மொழி, உடம்பில் கெட்டிப்பட்டுப்போன பாலடையாளத்தை மாற்றியமைக்காதா? விலங்கு, மனிதர், கடவுள் இவை மூன்றிற்குமிடையே நிகழும் ரசவாதம் மொழியின் விளைவு. அவளொரு ரசவாதி. அவளால் இந்த உப்புக் கடலைப் பாற்கடலாக மாற்றமுடியும். அவளுடம்பு பகலில் ஒன்றாகவும் இரவில் வேறொன்றாகவும் உருமாற்றமடைந்தது. கோயில்கொண்ட செங்கழுநீர் அம்மனின் வாடை அவளுடம்பில் கமழ்ந்தது. தன் விருப்பமில்லாமல் அவளுடம்பை யாராலும் தொடமுடியாது என்றாள். மழைக்குள் நடந்தாலும் தன்னுடைய இசைவின்றி மழையால் தன்னை நனைக்க முடியாது எனச் சொன்னபோது என்னால் நம்பாமலிருக்க முடியவில்லை. ஆம், அவளொரு மாயயெதார்த்தப் பனுவல்.
உன் அம்மாவிடமிருந்து நான் பிரிந்ததில் என்ன தவறைக் கண்டாய் மகளே? நான் ஏன் இந்த நாவலை அணங்கிலிருந்து தொடங்கவேண்டும்? ஏன் ஓர் ஐஸ்கிரீமால் மதுரையை எரிக்க முடியாதா? வலியாக இருக்கிறது. தமிழர்கள் நெருப்பாலும் கொத்துக்குண்டுகளாலும் எரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏன் உன் நாவலை கண்ணகியிலிருந்துத் தொடங்குகிறாய்? தமிழ்த் தேசியத்தைக் கட்டமைத்த முதலும் கடைசியுமான ஒரே வேந்தன் மற்றும் பாவலன் இளங்கோதானே? அதிகாரத்தின் கொடுங்கோண்மையை எதிர்த்த முதல் குரல் கண்ணகியின் குரல்தானே? அதனால் கண்ணகியிலிருந்துத் தொடங்குகிறேன்.
உனது உதடுகளைத் தின்று தீர்ப்பது எப்படி மாதவி? கடல் அலைகள் எதிர்கொண்டு ஒன்றோடொன்று மோதிக்கொள்வதுபோல உனது மேல் கீழுதடுகள். உப்புச் சொற்களாக தமிழ் வெளியெல்லாம், புகாரின் கடல் வெளியெல்லாம் மிதக்கின்றன நம் முத்தங்கள். முத்தங்களை ஒன்றுகூட்டி செய்யப்பட்டவள் மாதவி. அணங்கே கொஞ்சம் வழிவிடு, என் நாவலை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இந்த அறிவியல் கட்டுரைத் தொகுப்பு வாயிலாக நான் என் ரசனையைத் தான் பகிர்ந்து கொள்கிறேன். அறிவியலை அத்துனை வியப்போடு அணுகுகையில் அதைத் தெரிந்து கொள்ளுதல் இலகுவாகும். நம்மில் பலர் அதை மிரட்சியோடே அணுகுகிறோம். மேலும் ஒவ்வொரு அறிவியல், தொழில்நுட்பத்திற்குப் பின்னும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு முக்கிய வரலாற்று நிகழ்வுக்குப் பின்னும் ஒரு அறிவியல் தொழில்நுட்ப மைல்கல் இருக்கிறது. பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் பின்னுள்ள அறிவியல் இரண்டையும் தேடி ரசிக்கிற என் ரசனையின் தொகுப்பே இப்புத்தகம். ஒரே ஒரு நபரை இந்தப் புத்தகம் பொருட்களின் அறிவியலை அதன் வரலாற்றை ரசிக்கும்படி மாற்றினாலும் அதை என் வெற்றியாகக் கருதுவேன்.
அகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகளே அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன. ‘மகனே கைப்பிடி அளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறேதுமில்லை. இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள். உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசியில்லை, மூப்பில்லை எனவே மரணமில்லை..
ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்சாகமளிக்கிறது.
– எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் முன்னுரையிலிருந்து