அண்டன் செகாவ் அற்புதமான சிறுகதைக் கலைஞன். ஆனால் அவன் வாழ்க்கையோ ஒரு துயர நாடகம். மளிகைக்கடைக்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் செகாவ், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ள அப்பா, கண்டிப்பானவர். அடி பின்னிவிடுவார். கதை சொல்லும் கலையை அம்மாவிடமிருந்து கற்றார் செகாவ். அம்மா ஒரு துணி வியாபாரியின் மகள். வியாபாரத்திற்காகத் துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகப் போன அவர் கதை மூட்டையைச் சுமந்து கொண்டு திரும்பினார். அவர் சொன்ன கதைகள் செகாவ்வை உலகின் ஓர் சிறந்த எழுத்தாளனாக உருவாக்கியது. ஒப்பற்ற சிறுகதைகளுக்காகவும் நாடகங்களுக்காகவும் உலகப் புகழ் பெற்ற அவர் படித்தது மருத்துவம். ”மருத்துவம் என் மனைவி; எழுத்து என் காதலி” என ஓரிடத்தில் எழுதுகிறார் செகாவ். அவரது மரணம் சிறுகதைகளுக்குரிய முரண்களோடும், நாடகங்களுக்குரிய திருப்பங்களோடும் நேர்ந்தது. காசநோயால் அவர் நாளுக்கு நாள் நலிந்து வந்த நேரத்தில், ‘இனித் தேற மாட்டார்’ என எல்லோரும் கைவிட்ட நாள்களில் கூட அவர் நிறையவே எழுதினார். ஆனால் ஓய்வெடுக்கப் போன ஊரில், ஓர் அதிகாலை நேரத்தில் ஒரு கோப்பை ஒயினை அருந்திவிட்டு ஒரு குழந்தையைப் போல் ஒருக்களித்துப் படுத்த அவர் உறங்குவது போல் இறந்து போனார்.