இத்தொகுப்பில் உள்ள சில கதைகளை விலகி நின்றும், பிற கதைகளை அணுகி நோக்கியும் கூறியுள்ளதாக எண்ணுகிறேன். இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, புறத்தை அகத்தின் மூலமும் அகத்தை புறத்தின் மூலமும்தான் விவரிக்க முடியும் என்ற மரபின்படி, மனதுக்கு மிக அணுக்கமானதை விலகி நின்றும், மனதிற்கு விலக்கமானதை அணுகிச் சென்றும் கூற வேண்டியதாகி விடுகிறது என்பது.
எழுதியதை மீண்டும் செப்பனிட வேண்டும் என நண்பர்கள் சிலர் கூறுகிறார்கள். மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒன்றை வெளியேற்றவே எழுதுகிறேன். எழுதி முடித்தவுடன் உறுத்தலிலிருந்து வெளியேறி ஆசுவாசமடைகிறேன். திரும்பவும் அதனுள் நுழைய மனம் விரும்புவதில்லை. நண்பர் சுனில் கிருஷ்ணன் ஒருமுறை கூறியதுபோல எப்படி வந்துள்ளதோ அதை அப்படியே விடுவதும் பிழையில்லையென்று எனக்குத் தோன்றுகிறது. மனதின் ஏதோவொரு உந்துதலில்தானே அவையும் வெளிவந்திருக்கிறது. அத்தனை கடுமையாக அதனை நீக்க வேண்டாமென்பது என் எண்ணம். கம்பி வேலிக்கு வெளியே தலை நீட்டும் செடிகளும் அழகாய்த்தானே உள்ளது..?
– கா. சிவா