1967-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய நாணயமான ‘ரிங்கிட்’ தொடர்பில் எழுந்த சர்ச்சையும் அதற்கு முன்பிருந்த பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு வீழ்ச்சியும் பினாங்கில் ஓர் இனக்கலவரம் வெடிக்கக் காரணமாகின. பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு 15 விழுக்காடு வரை வீழ்வது மக்களுக்குப் பெரும் பணச்சுமையை ஏற்படுத்தும் என்ற கருத்தை முன்வைத்து பினாங்கில் இயங்கிய தொழிலாளர் கட்சி அரசு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. அக்கட்சி காந்திய நெறியில் ‘ஹர்தால்’ (கதவடைப்புப் போராட்டம்) நடத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற நிலையில் சில குழப்பங்களால் சட்டென்று ‘ஹர்தால்’ இனக்கலவரமாக மாறி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு மலேசிய மக்களின் இனவாதப் போக்கு முற்றுவதற்கு மேலும் ஒரு காரணமானது. பாண்டியன் எழுதியுள்ள இந்த நாவல் இவ்வரலாற்றினுள் பயணிக்கும் சில மனிதர்களைப் பற்றி பேசுகிறது. காலம் அவர்களைக் கொண்டு வந்து சேர்ந்திருக்கும் மற்றுமொரு எதார்த்த வெளியை நுட்பமாகப் புனைந்துள்ளது.