அந்த மாம்பழ நிற பட்டுப்புடவையை எடுத்தேன். விரித்துப் பார்த்தேன். பள்ளங்களாகிவிட்ட மடிப்புகளை நீவிவிட்டேன். அப்படியே இருந்தன. நான்கு வருட மடிப்புகளல்லவா. அவ்வளவு சீக்கிரம் நிரம்பிவிடுமா என்ன? வாங்கும்போதே அது பிடிக்கவில்லை. ஆனாலும் அவர் விருப்பத்திற்காக வாங்கிக் கொண்டேன். பொதுவாக பட்டுப்புடவைகளே பிடிப்பதில்லை. அதன் கனமும், அதன் மினுக்கும் ஜரிகையும், உடுத்தும்போது உண்டாகும் கசகசப்பும் அதன் மீது வெறுப்பையே உண்டாக்குகின்றன. அதன் விலை வேறு. விலையைச் சொல்லியே உடுத்த கட்டாயப்படுத்துவார்.
“பத்தாயிரத்துக்கு வாங்கித் தந்துருக்கேன். அத உடுத்தாம பழய பாடாதிய உடுத்திட்டு வாரிய… அறிவிருக்கா? லூசு… லூசு” அவர் குரல் கேட்டது. லூசாகவே இருந்துவிட்டேன்.