இலக்கிய அமைப்பாகவும் சரி, ஒரு பதிப்பகமாகவும் சரி, கூர்ந்து நோக்கினால் இந்தப் பயணத்தின் வழியே ’வாசகசாலை’ எவ்வளவு பக்குவப்பட்டிருக்கிறது என்பது புரியும். வழக்கமாக எடுத்துக்கொள்கிற கால அளவை விடவும் இந்நூலுக்கு கூடுதலான காலம் தேவைப்பட்டது. நமது ‘தமிழ்ச் சிறுகதைக் கொண்டாட்டம்’ நிகழ்ச்சிக்காக (அந்த நிகழ்ச்சி நடந்ததே அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்தான்) அண்ணாவின் கதைகளைத் தேர்ந்தெடுத்தபோதே இன்றைக்கும் அவரது கதைகள் எவ்வளவு பொருத்தமாக உள்ளன என்பதை உணர முடிந்தது. ஆனால் இன்றைய இளம் வாசகர்களிடத்தே குறிப்பாக இலக்கிய வாசகர்களிடத்தே ‘எழுத்தாளர் அண்ணா’வின் இடம் என்னவாக இருக்கிறது என்ற கேள்வி தொடர்ந்து நம்மைத் துரத்தியபடி இருந்ததன் விளைவே இந்நூல்.