சொர்க்கத்தின் சொந்தக்காரர் என்று நபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் சொல்லப்பட்டவராய் இருந்தும் இறையச்சத்தில் எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தாத உன்னத வாழ்க்கையை வாழ்ந்தவர். நெஞ்சில் பெருமை மறைந்து இறையச்சம் மட்டுமே நீங்கா இடம் பெற்றிருந்தது அவரது வாழ்வில்… சரிசமமான மனித நேயமிக்க சமத்துவ ஆட்சியை உமரவர்கள் இப்பூவுலகிற்கு அளித்தது இன்றும் ஓர் ஆச்சரியக்குறி. கவர்னர் முதல் கடைக்கோடி சாதாரண குடிமகன் வரை அனைவரையும் ஒன்றுபோல் பாவித்த உன்னத குணத்தை இறையருளால் பெற்றவர். கலீஃபா உமர் ஃபாரூக் (ரழி) அவர்களின் ஆட்சி காலம் பத்து ஆண்டுகள் ஆறு மாதங்கள் நான்கு நாட்கள். இதுவரை ஒப்பிட்டுச்சொல்ல முடியாத ஓர் சிறப்பான ஆட்சியை தந்து விட்டு மறைந்து விட்டார்கள். உஹது மலையிடம், “இங்கே என்னுடன் இரு ஷஹீதுகள் இருக்கிறார்கள் குலுங்காதே!” என்ற நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின்படி உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் ஷஹீதானார்கள். |