உலகில் கி.பி.570-க்குப் பின்னரும் மகான்கள், ரிஷிகள், முனிவர்கள், தத்துவஞானிகள் என பலர் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். இந்நிலையில், முஹம்மது (ஸல்) அவர்களை மட்டும் இறைவனின் இறுதித்தூதர் என குர்ஆன் கூறுவதேன்? முஸ்லிம்கள் அதை உறுதியாக நம்புவதேன்? இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தங்களின் உயிரிலும் மேலாக மதிப்பதேன் என்ற விவாதங்களும், ஆய்வுகளும் இன்று வரையிலும் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அவ்வகையில் இந்நூலும் சிறிதோர் ஆய்வே! முஹம்மத் (ஸல்) குறித்து அறியாதோர் அறிந்து கொள்ள இந்நூலில் மிகச்சுருக்கமான வரலாறு முதல் அத்தியாயமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முழுமையான வரலாற்றைப் படித்த திருப்தி வாசகர்களுக்கு ஏற்படக்கூடும். முஹம்மத் இறைத்தூதர் ஏன் என்பதற்கு விளக்கமாக, மனிதம், சமூகம், தேசம், ஆன்மீகம், அரசியல், கல்வி, பொருளாதாரம், அறிவியல் என பல துறைகளை ஆய்ந்து, தக்க சான்றுகளுடன் இந்நூலில் இரண்டாவது அத்தியாயம் தொகுக்கப்பட்டுள்ளது. இறைவன் இறைத்தூதர்கள், இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்), திருக்குர்ஆன், இஸ்லாம், முஸ்லிம் என்றால் என்ன என்பதை இந்நூலின் வாயிலாக மிகச் சரியாக அறியலாம். |