மனிதருள் மாணிக்கம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்தது முதல் இந்த மண்ணில் இருந்து விடை பெற்றது வரை அப்பழுக்கற்ற-ஒழுக்கம் சார்ந்த நேர்மைமிக்க – எளிமையான – அறம் தழுவிய வாழ்க்கையைத் தாமும் வாழ்ந்து இலட்சக்கணக்கான தோழர்களை உருவாக்கிச் சென்றார்கள். வாய்ப்புக் கிடைத்தால் தன்னை முன்னிலைப்படுத்தத் துடிக்கும் மனிதர்கள் மலிந்த இந்த உலகில் தம்முடைய உருவப்படம்கூட மக்களுக்கு அடையாளமாக இருந்து விடக்கூடாது எனக் கூறியவர் நபிகள் நாயகம். மனித குல வாழ்விற்கு இவர்கள் காட்டியது போன்ற சிறப்பான வழியை எவரும் காட்டித் தரவில்லை. இவர்களின் வாழ்க்கையை இன்றைய நவீன விஞ்ஞான உலகமும் போற்றுகிறது. இவர்களின் அசைக்க முடியாத கொள்கைப்பற்று, சுயநலம் கருதாமை, பிறர் நலம் பேணல் அடுத்தவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, தன்னடக்கம், தயாளம், தூய சிந்தனை, முதலான உயர்ந்த நற்குணங்கள், மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடந்த அந்த மக்களின் வாழ்வில் ஓர் ஒளியை ஏற்படுத்தி, அம்மக்களை மற்றவர்கள் பின்பற்றக்கூடிய உயர்வான வாழ்க்கையைக் கொடுத்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒப்பற்ற தலைவரின் சிறப்புகளை ஆதாரத்துடன் மக்கள் விளங்கிட சகோதரர் முஹம்மது சுலைமான் அவர்கள் இந்நூலை யாத்துள்ளார். |