காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் அறிமுகம் தேவைப்படாத படைப்பாளி. தமிழ்கூறும் நல்லுலகெங்கும் தனது படைப்புகளால் புகழ் பரப்பி நிற்பவர். கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், மொழிமாற்று இலக்கியம், குறும்படம் என்று பல்துறையிலும் இயங்கி 18 பனுவல்களையும், 13 காவியங்களையும் தந்திருப்பவர்.

வான்முறையான வரலாற்றுக் காவியங்களை தொடர்ந்து எழுதி சாதனை புரிந்தவர் என்ற அடையாளம் அவருக்கு உண்டு. இப்பொழுது அவர் கொண்டு வரும் ‘இயேசு எனும் ஈஸா நபி காவிய’மும் முந்தையக் காவியங்களைப் போன்று தமிழ் இலக்கியத்திற்க்குக் குறிப்பாக இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பிதா புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீனின் ஆசீர்வாதம் பெற்ற மைந்தன் ‘காப்பியக்கோ’வின் இலக்கியப் பணி தொடர வேண்டும்.