அத்தியாயம் – 1
வணக்கம்.
எழுத்தாளர் கல்பனா சன்னாசி அவர்கள் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதுவதுடன் பல போட்டிகளில் – சிறுகதை, நாவல் – வெற்றி பெற்றிருக்கிறார். கேலக்ஸி இணைய தளத்தில் இது இவரது இரண்டாவது தொடர்கதை. முதல் தொடர் – காதல் திருவிழா – போல் இதுவும் காதலை மையமாகக் கொண்ட தொடர்கதைதான் என்பதால் காதலாய் உங்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும். வாசித்து தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் எழுத்தாளருக்கு மகிழ்வைக் கொடுப்பதுடன் அவரது எழுத்தை மெருகேற்றிக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.
நன்றி.
******************

“பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்…”
நினைவுகளை உருக்கி நெஞ்சத்தை மிதக்க விடுகிற இசை. உணர்வுகளின் மென்மைப் பிரதேசங்களை உயிர்ப்பிக்கிற ஓசை. இதய இழைகளை இன்பத்தில் நெய்யும் சங்கீத மாயம்.
“விண்மீன் எல்லாம் நிலவாய்ப் போனது எந்தன் வானத்தில்…”
அசைந்து கொண்டிருந்த தலைகளின் பாராட்டு ஆமோதிப்பில் கிறங்கிப் போய்ப் பாடிக் கொண்டிருந்தான் சரண்.
ஆடிட்டோரியம் நிரம்பிக் கிடந்தது.
முதல் வரிசை தீப்தியின் பாதங்களில் லயம் மாறாத மெல்லிய தாளம்.
அடிக்கொரு தரம் மேடையிலிருந்த சரணின் பார்வை தீப்தியிடமிருந்து ஒரு புன்னகையை வாங்கிச் சேகரித்துக் கொண்டிருந்தது.
கடைசிப் பாடல் முடிந்து, ஒன்ஸ் மோர்களும் ஒரு வழியாக முடிவு பெற்றன.
“நாளைக்கு நான் கொல்கத்தா போறேன்” – பைக்கில் சரணின் பின்னால் தொற்றியபடி அறிவித்தாள் தீப்தீ.
“ப்ரோகிராம் முடிஞ்சு வர்றேன். அசத்தலாப் பாடினே. வெளுத்து வாங்கிட்டே அப்டின்னு நல்லதா நாலு வார்த்தை சொல்லாம ஸ்ட்ரெயிட்டா நீ கொல்கத்தாப் போறதைப் பத்திச் சொல்றியே? என்ன பொண்ணும்மா நீ?”
“உன் பாட்டை நான் கச்சேரிலதான் கேட்கணுமா? அதான் ஓயாமக் கேட்டுக்கிட்டு இருக்கேனே. வீட்டை மாத்தினாதான் எனக்கு உன் பாட்டிலேருந்து விடுதலை.”
சரண் வீட்டு ஜன்னலிலிருந்து தீப்தி தோட்டத்து ரோஜாவை, சுலபமாகப் பறித்து விடலாம். இருவரது வீடுகளும் அடுத்தடுத்தவை. நெருக்கமானவை. தீப்தி சரண் போலவே.
நான்கு வருஷத் தோழமை அவர்களுடையது. நாற்பது வருஷத்தைப் போன்று ஆழமானது. அதிகாலை நேரத்துப் புல் நுனி பனித்துளியைப் போல் அதி தூய்மையானது அவர்களுடைய நேசம்.
“பார். என் குரலும் இளையராஜா, ரஹ்மான் ம்யூசிக்கில் கேக்கத்தான் போகுது. நீ என்கிட்ட ஆட்டோகிராஃபுக்கு வரத்தான் போறே.”
“ரொம்ப அலட்டாதே. போனாப் போகுது. சொல்லித் தொலைக்கிறேன். நீ நல்லாப் பாடினே. போதுமா?”
“பாராட்டைக் கேட்டு வாங்கிக்க வேண்டியிருக்கு. ம்… சரி விடு, நீ ஏன் கொல்கத்தாவுக்கு?”
“பெங்காலிக்காரன் ஒருத்தன் எங்க கம்பெனி சாஃப்ட்வேர் வாங்கினாம்ப்பா. அது என்ன ஏது எப்படி உபயோகிக்கிறதுன்னு அவனுக்கு எதுவும் புரியலையாம். சொல்லிக் கொடுக்கிறதுக்காகப் போறேன். நாளைக்கு எர்லி மார்னிங்கே கிளம்பறேன். அதுக்கு முன்னாடி உன்னைப் பாக்கணும்னுதான் கச்சேரிக்கே வந்தேன்.”
“ஏன்? வீட்டுக்கு வரவேண்டியதுதானே?”
“உன் பாட்டைக் கேக்கணும்னு வந்தேன் பாரு. என்னை..”
“சரி… சரி.. விஷயத்தை சொல்லு.”
“என் கம்பெனி கிளையண்ட் ஒருத்தர். அவருக்கு ரஹ்மானோட அஸிஸ்டெண்ட்டைத் தெரியுமாம். நீ அவரைப் போய் பாக்கிறே. இந்தா அட்ரஸ்” பில்லியனில் இருந்தபடியே சரணின் சட்டைப் பையில் ஓர் அட்டையைச் செருகினான் தீப்தி.
“ஒண்ணும் புரியலை தீப்தி. ஒரு சமயம் என்னை கழுதைக்கு வாத்தியாராப் போன்னு சொல்றே. அப்புறம் எனக்கு சான்ஸ் கிடைக்கணும்னு நீ அல்லாடறே.”
“உனக்கு என்னதான் புரியுது என் மக்கு நண்பா. வீடு வந்துடுச்சு பார். வண்டியை நிறுத்து.”
வழுக்கிக்கொண்டு நின்றது சி.பி.சி. இறங்கிக் கொண்டாள் தீப்தி.
“பை” என்றுவிட்டு திரும்பியவள், சட்டென்று நினைவு வந்தவளாக, “சரண், நான் கல்கத்தா போறதை உங்கம்மாக்கிட்ட சொல்லிடு. நாளைக்குக் காலையில் வாக்கிங் போறப்ப தேடப் போறாங்க” தன் வீட்டுப் படியேறிப் போனாள்.
“பாட்டு பாட்டுன்னு உயிரை விடுறான். எங்கூட வந்து பிஸினஸைக் கவனிச்சுக்கடான்னா கேக்கிறானா? கச்சேரி கண்றாவின்னு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கிறவனை எம்புள்ளைன்னு சொல்லிக்கவே வெக்கமாயிருக்கு” கத்திக் கொண்டிருந்தார் அப்பா.
“அதான் ராத்திரி பன்னிரண்டு மணி வரைக்கும் ‘’சரண் வரட்டும். அவனோட சாப்பிட்டுக்கிறேன்’னு காத்துக்கிட்டு கிடந்தீங்களாக்கும்” புன்சிரிப்போடு நொடித்தாள் அம்மா. தர்மசங்கடத்தை மறைக்கும் விதமாக ஒரு பாசாங்கு கோபப் பார்வை பார்த்து வைத்தார் அப்பா.
மென்னகை படர்ந்தது சரண் முகத்தில்.
டவலில் கையைத் துடைத்துவிட்டு மாடிப்படி ஏறுகையில், “அம்மா!” திரும்பினான் சரண். “தீப்தி கல்கத்தா போறாளாம். காலையில் வாக்கிங் போறப்ப அவளைத் தேடாதே. சொல்லச் சொன்னா.”
“கச்சேரிக்கு தீப்தி வந்திருந்தாளா?” அம்மாவின் முகத்திலும் குரலிலும் ஆர்வம் பந்தல் போட்டது.
“ஆமாம்.”
அம்மாவின் ஆர்வத்தைக் கவனிக்காதவன் போல், தீப்தியின் வருகை தனக்கு ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயமில்லை என்பது மாதிரி ஒற்றைச் சொல்லில் அசிரத்தையாக பதிலளித்துவிட்டுப் படியேறிப் போனான் சரண்.
புரிதலுடன் கூடிய புன்னகையைப் பரிமாறிக் கொண்டார்கள் சரணைப் பெற்றவர்கள்.
மாலையும் கழுத்துமா வந்து நிக்காம இந்த சரணும் தீப்தியும் நம்மகிட்ட இன்ஃபார்ம் பண்ணினா சரிதான்.
“ஹாய் தீப்தி, கொல்கத்தாலேருந்து எப்ப வந்தே? பெங்காலிக்காரனுக்கு ஒழுங்காப் பாடம் சொல்லிக் கொடுத்தியா?”
கேள்வி கேட்ட சரணிடம் இருந்த உற்சாகம் அடுத்த வீட்டு வாசலில் அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்த தீப்தியிடம் இல்லவே இல்லை.
“ம்” ஒற்றை எழுத்தில் பதில் சொன்னாள். “உங்கிட்ட பேசணும். ஈவ்னிங் ஆபிஸுக்கு வர்றியா?” குரலும் முகமும் இறுகிக் கிடந்தது.
“ஷ்யூர்” என்றான் சரண்.
தாயற்றக் குழந்தையினுடையது மாதிரி, தீப்தியின் முகம் களையைத் தொலைத்துவிட்டு பொலிவற்றுக் கிடப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? – சரணின் சிந்தனையை அரித்தது கேள்விக் கறையான்.
அலுவலக வாசலில் தயாராகக் காத்திருந்தாள் தீப்தி.
“எங்கே?”
“பீச்.”
விரட்ட விரட்டக் கொஞ்சம் கூட கோபித்துக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப வந்து கரையைக் காதலித்துக் கொண்டிருந்தன அலைகள்.
“வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க சரண்” அறிவித்த தீப்தியின் வெளுத்த முகம் சரணுக்குப் புதிது.
“சரி.”
“யாருன்னுதான் கேளேன்.”
“யாரு?”
“என் அத்தையும், மாமாவும்.”
கர்நாடக கச்சேரி கேட்கப் போன இடத்தில் கானாப் பாட்டு கேட்க நேர்ந்தது மாதிரி எதுவுமே புரியவில்லை சரணுக்கு. மெளனமாக இருந்துவிட்டான்.
தீப்தி தொடர்ந்தாள்.
“அவங்களுக்கு ஒரு மகன். என்னை மாதிரி கம்ப்யூட்டர் இன்ஜினியர். ஆஸ்திரேலியாவில் இருக்கானாம்.”
புரியாதது புரியத் தொடங்க நிமிர்ந்து அமர்ந்தான் சரண்.
“சொல்லு” என்றான் தடுமாற்றத்தோடு.
“என்னத்தை சொல்ல? நீ நினைக்கிறதேதான். அவங்க மகனுக்கு என்னைப் பெண் கேட்டு வந்திருக்காங்க.”
சரணிடம் ஆழமான அமைதி. விநாடிகள் கனமாக நகர்ந்தன. காற்றுக் கலைத்த கேசத்தை சரி செய்து கொண்ட சரண், தீப்தியை ஏறிட்டான். அவள் பார்வையில் ஆயிரம் விசாரணைகள். விழிகளில் தெரிந்த உணர்ச்சிகளின் கேள்விகள் சரணைக் கலைத்தன.
தொண்டையைச் செருமிக் கொண்டான்.
“ஒரே தொழில். பர்ஃபெக்ட் மேட்ச். கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே தீப்தி?”
சன்னமாக அடித்துக் கொண்டிருந்த சிற்றலைகள் மறைந்து உலுக்கிப் போடும் பேரலை வீசியது தீப்தியின் பார்வையில். அதன் தாக்கம் சரணைக் கிழித்தது. தீப்தியைத் தவிர்த்தான். கடலை வெறித்தான்.
அழுத்தமான மௌனத்தில் கரைந்தன நிமிஷங்கள்.
ஒற்றைக் கண்ணீர்த் துளி தீப்தியின் விழியோரத்தில் எட்டிப் பார்த்தது.
சரண் தன் பார்வையைக் கடலிடமிருந்து திருப்பினான்.
நங்கூரம் பாய்ச்சியது போல் பார்வையை அகற்றாமல் அப்போதும் அவள் ஈரக் கண்களோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்க…
வலித்தது சரணுக்கு. சட்டென்று திரும்பிக் கொண்டான். அவனின் தவிப்பு தீப்தியின் இதழோரம் ஒரு நம்பிக்கைப் புன்னகையை மலர்த்தியது.
அருகில் ஊன்றிக் கிடந்த சரணின் கரத்தை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டாள்.
“சரண், டோண்ட் யூ திங்க் வீ ஆர் இன் லவ்?” மிருதுவாகக் கேட்டாள்.
விருட்டென்று தன் கைகளை தீப்தியிடமிருந்து உருவிக் கொண்டான் சரண்.
“ரப்பிஷ். உளறாதே!” என்றான்.
“நான் பாட்டு, சினிமான்னு அலையறவன். என் திசையே வேற. உன்னுது வேற. நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா வண்டிக்கு முன் பக்கம் ஒரு குதிரையும் பின்னாடி ஒரு குதிரையையும் மாட்டி ஓட்டற மாதிரி இருக்கும். ஒரே சாலையில் போக வேண்டிய ரெண்டு பேர் இணைஞ்சாதான் சாதனைகள் சாத்தியம். இல்லேன்னா எதையுமே சாதிக்க முடியாம இரண்டுபேரும் ஏமாந்து போக வேண்டியதுதான். இரண்டு பேரோட அலைவரிசையும் ஒண்ணா இருக்கணும். அப்பதான் வாழ்க்கை இனிக்கும்.”
தீப்தி மெளனமாக இருந்தாள்.
“வீ ஆர் ஜஸ்ட் ஃபிரெண்ட்ஸ். அவ்வளவுதான். நீ உன் அத்தைப் பையனைக் கல்யாணம் பண்ணிக்க. ஆஸ்திரேலியா போ. ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸில் ஆராய்ச்சிப் பண்ணுங்க. டாலரில் சம்பாதிங்க. அதுதான் சரி.”
தீப்தி மௌனம் கலைந்தாள்.
“ம்… அலைவரிசை…! சரண், நீ ரொம்ப தெளிவாப் பேசுறே” என்றாள் மெதுவாக.
சரணை நிம்மதி சூழ்ந்தது. மனசு குதூகலம் கண்டது. தீப்தியின் மனத்தை மாற்ற முடிந்துவிட்ட குதூகலம். அவளுக்கு அமைய இருக்கிற நல்லதொரு வாழ்க்கைக்கு அவளை ஒப்புக் கொள்ள செய்துவிட்ட திருப்தி.
ஒரு நண்பனாக ஆனந்தப்பட்டான் சரண். ஆனால் ஒரு காதலனாக… இதயத்தில் அக்னிப் புள்ளிகள். நான்கு வருடங்களாக இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் உச்சரித்த உணர்வு மந்திரம் எரிந்துப் பொசுங்கியது. வேதனைகளை உள்ளேயே புதைத்துக் கொண்டான்.
“ஒண்ணு மட்டும் சொல்லு சரண்” தீப்தியின் கேள்வியில் வரவழைக்கப்பட்ட நிதானம். அதீதமாக.
“என்ன?”
“பாரதியார் எந்த அலைவரிசை? செல்லம்மா எந்த அலைவரிசை?”
தடுமாறினான் சரண்.
“தெரியாமத்தான் கேட்கிறேன். சொல்லு சரண். பெரியார் எந்த அலைவரிசை? மணியம்மை என்ன அலைவரிசை?”
சரணிடம் பதிலில்லை.
“சரி. அதை விடு. இருபத்தியஞ்சு வருஷத்துக்கு மேல ஒண்ணாக் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காங்களே… உன்னைப் பெத்தவங்களும், என்னைப் பெத்தவங்களும். அவங்க அலைவரிசையெல்லாம் எந்த ரகம்?”
“ஜாதி, மதம், அந்தஸ்து, தொழில், ரசனை, இதெல்லாம் ஒரே மாதிரி இருக்கணும்னு அவசியமே இல்லை சரண். கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே மாதிரி இருந்தே ஆக வேண்டிய அலைவரிசை ஒண்ணு இருக்கு. அது என்ன தெரியுமா? அன்பு. அது நம்மகிட்ட இல்லேன்னா சொல்றே? நிஜத்தை சொன்னா நிறையவே இருக்கு. ஆழமா இருக்கு. அதைவிட வேற என்ன வேணும்? சும்மா அலைவரிசை மண்ணாங்கட்டின்னு பினாத்திக்கிட்டு உன்னை நீயே ஏமாத்திக்காதே. என்னையும் ஏமாத்திடாதே.”
மனசுக்குள் மழையடித்தது சரணுக்கு. காதல் ஜெயித்துவிட்ட மகிழ்ச்சி மழை. அதன் ஈரம் பார்வையிலும் தெறித்தது. மறைத்துக் கொள்ளவில்லை அவன்.
திங்கள் கிழமை தொடரும்
நன்றி : படம் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.