அணிந்துரை : ஜெயபால் இரத்தினம் (வரலாற்று ஆய்வாளர்)
(அப்துல் அஹத் குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற குறுநாவல்)
புனைகதை இலக்கியங்களின் உள்ளடக்கங்கள் அழகியல் சார்ந்த உரையாடலாக மட்டுமல்லாமல்,, பெரும்பான்மையானவை, சமுதாயச் சிக்கல்களின் சித்தரிப்பாகவே அமைபவை. சமூகத்தில் நிலவும் அவலங்களை குறிப்பாக விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளையும், அவற்றின் சிக்கல்களையும் மையக் கருவாக்கி ஏராளமான புனைவுகள் வெளிவந்து கொண்டிருப்பதையும், வீரியமிக்க படைப்புக்கள் சமூகத்தில் சில தாக்கங்களை ஏற்படுத்தி வருவதையும் கண்டு வருகிறோம்.இம்மாதிரியான படைப்புக்கள் இல்லையென்றால், பொருளையும் வளமான வாழ்வையும் மட்டுமேத் தேடி, வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய மேட்டிமை மக்களுக்கு, தாங்கள் வாழும் இச்சமூகத்தில் விளிம்பு நிலை மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடும் என்ற அளவுக்கு ஒரு சூழல் நிலவுகிறது என்பதே எதார்த்தம்.
அதே நேரத்தில், விளிம்புநிலை என்ற வரையறைக்குள்ளும் சேர்க்கப்பாடமல்,
அதற்கும் கீழான நிலையில் தள்ளப்பட்டுள்ள மக்களும் இந்த சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது மற்றொரு எதார்த்தம். உறவுகளோ உடமைகளோ இல்லாமல்
ஒரு வேளை உணவுக்கும்கூட அல்லல்பட்டுக் கொண்டு சாலையோரங்களில்
அடைக்கலம் புகுந்து, திறந்தவெளிகளையே இருப்பிடமாக்கிக்கொண்டு, வெயிலில்
காய்ந்தும், மழையில் நனைந்தும், வாட்டும் குளிரில் நடுங்கியும் வாழ்ந்துவரும்
எளியவர்களே அந்தத் தாழ்நிலை மக்கள். இந்த குரலற்றவர்களின் பிரச்சனைகளும்
பேசப்பட வேண்டியவைகளே. இந்த ஏதிலிகளின் வலிகளை சில எழுத்தாளர்கள்
தங்களது படைப்புக்களில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர் என்பதும், ஆனாலும்
அவை உரியவர்களால் கவனம் கொள்ளப்படவில்லை என்பதும் நடைமுறை
உண்மை…
என்றாவது ஒருநாள், குறிப்பாக சாலையோர வாகன விபத்துக்களில்
இம்மக்களில் சிலர் பலியாகி இறக்கும் நேர்வுகளில் மட்டும் ஓரிரு நாட்கள் இவர்கள்
ஊடகங்களின் முக்கிய பேசுபொருளாக, சமூக வலைதளங்களில் வேகமாகப்
பகிரப்படும் காட்சிப் பொருளாக, இருப்பார்கள். ஆனால் அடுத்தநாள் திரும்பும்
இயல்புநிலை அனைத்தையும் மறக்கச் செய்து விடும்.
எளிய மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடங்களின் சில துளிகளை,
கதைகளாய் படைத்து அதன் மூலம், அவர்களின் வலியை, அவர்கள்பால் உள்ள
நியாயத்தை வாசகனுக்குள் முழுமையாகக் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற
எழுத்துக்குச் சொந்தக்காரர் நிழலி. கதை ஆசிரியராக மட்டுமல்லாமல்
கவிதாயினியாகவும் அறியப்படும் இவரது ஐந்தாவது படைப்பு இது. ஏற்கனவே
இரண்டு கவிதைத் தொகுப்புக்களையும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களையும்
வெளியிட்டு பல்வேறு அமைப்புக்களின் பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற்றவர்.
இவரது படைப்புக்கள் ஒவ்வொன்றும் விளிம்புநிலை மக்களை மையப்படுத்தியே
உருவாக்கம் பெற்று வருகின்றன. எளிய பெண்களின் வாழ்க்கைப்பாடுகளை
நுணுக்கமாக வெளிப்படுத்தும் இவர், திருநங்கைகளின் வாழ்வியல் வலிகளையும்,
குறிப்பாக இயல்பு நிலையிலிருந்து பால்மாற்ற உணர்வு மேலோங்கும் காலத்தில்
அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் உளவியல் தாக்கங்கள் அகியவற்றையும்
உணர்வு பூர்வமாகவும் எளிய நடையிலும் வெகுநேர்த்தியாக தனது சிறுகதைகளில்
காட்சிப்படுத்தியுள்ள படைப்பாளி இவர்.
தற்போது, சமூகத்தின் கவனம் பெறாத சாலையோரங்களில் வாழும் மக்களின்
அன்றாடங்களின் சில துளிகளை கருவாகக் கொண்டு, “மழை நின்ற பொழுது”
என்னும் தலைப்பில் ஒரு குறுநாவலைப் படைத்து, நாம் அன்றாடம் கடந்து
செல்லும் சாலைகளாக இருப்பினும், நாம் அறிந்திராத அல்லது நமது கவனம் பெற்றிடாத சாலையின் ஓரத்தில் வாழும் எளிய மக்களிடம் நம்மை அழைத்து
சென்று அவர்களின் பாடுகளை நம்மிடம் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் நிழலி.
பொதுவாகத் தனது படைப்புக்களில், பெண்களின் துயரங்களை எளிமையாக
ஆனால் நுட்பமாக வெளியிடும் திறன் கொண்ட இந்தக் கவிதாயினி, இந்நூலில்
சமூக அவலங்களின் குப்பையாக சாலையோரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, அங்கேயேத்
தங்களது வாழ்நாட்களைக் கழிக்கும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின்
துயரங்களுக்கு வாசகர்களை சாட்சியமாக்குகிறார்.
சாலையோரவாழ் மக்கள், உணவுக்கும் இருப்பிடத்துக்கும் மட்டுமல்லாமல், பால் பேதமின்றி. ஆண், பெண் அனைவருமே பாலியல் வன்கொடுமையாளர்களுடனும் தினசரி போராடுகிறார்கள் என்ற உண்மையை வலி மிகுந்த சொல்லாடல்களால் வெளிப்படுத்துகிறார்.
’மழை ஓய்ந்த பொழுது’ என்ற சொற்றொடர் கதையின் தலைப்பாக
அமைந்திருந்தாலும், இக்கதையில் பேசப்படுவது என்னவோ நிற்காமல் மழைபெய்த
ஒரு பெருமழைக் கால நிகழ்வுகள் தாம். கதையின் முக்கிய பாத்திரங்கள், பரட்டச்சி,
ராசாக்கிழவி, சாக்குப்பொறுக்கி ஆகிய சாலையோர வாசிகள் மற்றும் சக
மனிதர்களது துயரத்தில் பங்கெடுக்கும் அருளாளராய் துயருரும் மக்களுக்கு
வலியச்சென்று உதவுபவராக அப்துல் அஹத் மற்றும் அன்பின் ஊற்றாய் அவரது
தாயார் பாத்திமா ஆகியோர். சாலையோர வாசிகளான மூவரும் ஒருவருக்கொருவர்
சம்பந்தம் இல்லாதவர்கள். எங்கேயோ ஒரு மூலையில் தங்களது உறவுகளாலோ
அல்லது வேறு யாராலோ தூக்கி வீசப்பட்டு சாலையோரம் வந்து விழுந்தவர்கள்.
இவர்கள் எங்கிருந்து எப்படி இந்த சாலையோர உலகத்திற்கு குடிபுகுந்தார்கள் என்பது
யாருக்கும் தெரியாத கணக்கு; அதை ஆராய்ச்சி செய்து தீர்த்து வைக்கவும் யாரும்
முன்வந்தது இல்லை என்று கூறும் நூலாசிரியர், ராசாக்கிழவியின் மூலக்கதையை
மட்டும் விவரிக்கிறார். அது சமூகத்தில் நிலவும் சாதிய ஆணவக்கொடுமையின்
மற்றொரு அத்தியாயம்.
கவிதாயினி என்பதால் கவித்துவமான வரிகளால் நிரம்பிகிடக்கும் படைப்பு
இது. ”சற்றும் இடைவிடாது தூறல் போட்டுக்கொண்டிருந்த வானம், தன்
வேதனைகளைக் கொட்டித்தீர்க்கும் பெண்ணைப்போல, மழை பொழிந்தபடியே
இருந்தது” – மழை குறித்த இவரது வரிகள் இவை. ஒரு திரைப்பட பாடலாசிரியர்
போல, தன்னுடைய கதையின் சூழலுக்கு ஏற்ப பாடல்களை சொந்தமாக இயற்றி,
அவற்றைக் கதாபாத்திரங்களின் வழியே பாடவைப்பது இந்நூலாசிரியரது படைப்பு
நுணுக்கங்களில் ஒன்று. இவரது முந்தைய படைப்புக்களில் இவரது தெம்மாங்கு
பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்நூலில் சூழலுக்கு ஏற்றவாறு ஒப்பாரிப் பாடல்
இடம் பெற்றுள்ளது.
பெருமழைக்கால அவலங்களை மட்டும் அல்லாமல். சமூகத்தில் நிலவும்
பல்வேறு கொடுமைகளையும் நுணுக்கமாக காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர்.
வயதான ராசாக்கிழவி முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவில் இளமை மீதமிருக்கும் பரட்டச்சி உள்ளிட்ட சாலையோரத்தில் வாழும் பெண்கள், எல்லா
வயது ஆண்களிடமும் அன்றாடம் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள், மற்றும்
வன்கொடுமைகளையும், ஓரினச் சேர்க்கையாளர்களின் வெறிக்கு அடிக்கடி ஆளாகி
அவதிப்படும் சாக்குப்பொறுக்கி ஆகியவர்களின் உளவியல் மற்றும் உடல் ரீதியான
பாதிப்புகளையும் வெகு நுட்பமாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்துள்ளார்
நூலாசிரியர்.
முந்தைய பெருமழைக்கால வெள்ளத்தில் மூழ்கி இறந்த ராசாக்கிழவியின்
உடலை ஒரு உச்சுக்கொட்டலுடன் கடந்தவர்கள், அருவருப்புடன் பார்த்து திட்டிக்
கொண்டே விலகிச்சென்றவர்கள், கிழவியின் பிணத்தை படம் எடுத்து அத்துடன்
சோக பொம்மை படத்தையும் இணைத்து நண்பர்களுக்கும் ஊடகங்களுக்கும்
பகிர்ந்தவர்கள், என்று பொழுது நகர்ந்த்தே தவிர உடலை அடக்கம் செய்ய யாரும்
முன்வரவில்லை என்பதை பரட்டச்சியின் துயரமாக பதிவு செய்கிறார்.
சாலையோர வாழ்க்கையில் தனக்கிருந்த ஒரே ஆதரவான ராசாக்கிழவியை
முந்தைய பெருமழைக் காலத்தில் இழந்திருந்த பரட்டச்சி, இந்த பெருமழைக்
காலத்தில் கைக்குழந்தையுடன் படும் அல்லல்களே கதையின் மையக்களம்.
மழையால் பாதிக்கப்படுவோர்களைத் தேடித் தேடி கண்டுபிடித்து தேவையான
உதவிகளை செய்து வரும் அப்துல் அஹத் ஒருபுறம்; உதவி செய்வாரின்றி கைக்
குழந்தையுடனும் காய்ச்சலுடனும், தங்குமிடம் மற்றும் உணவு தேடி அலையும்
பரட்டச்சி ஒருபுறம்; என்று திரைப்படக் காட்சிகள்போல மாறி மாறிக் காட்சிப்படுத்தி,
பரட்டச்சி எப்போது அஹத் கண்ணில்படுவாள் என்ற பதைபதைப்புடன் கூடிய
எதிர்பார்ப்பை வாசகர்கள் மத்தியில் உருவாக்கும் நூலாசிரியர், கடைசியில்
எதிர்மறையான முடிவைக் கொடுக்கிறார்.
உயிரோட்டமான படைப்பான இக்குறுநாவல், ’கேலக்ஸி’ நிறுவனம் நடத்திய
”அப்துல் அஹத் முதலாம் ஆண்டு நினைவு உலகலாவிய குறுநாவல்
பரிசுப்போட்டி’ யில் இரண்டாம் பரிசுக்குரிய படைப்பாகத் தேர்வு
செய்யப்பட்டிருக்கிறது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்தி சிறந்த படைப்புக்களை
யாக்கச் செய்து, இலக்கிய மற்றும் சமூகநலப் பணியாற்றும் ’கேலக்ஸி’
நிறுவனத்தாருக்கும், நடுநிலையோடு அணுகி சிறந்த படைப்புக்களைத் தெரிவு
செய்யும் தேர்வுக்குழுவினருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்
இதன் மூலம் பதிவு செய்கிறேன். சாலையோர ஏதிலிகளின் பாடுகளை
நுணுக்கமாகப் பதிவு செய்து காட்சிப்படுத்தியுள்ள இந்த படைப்பு
வெற்றிபெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.
நூலாசிரியர் மேலும் மேலும் சிறப்புக்கள் பெறவேண்டும் எனவும்
வாழ்த்துகிறேன்.
—————————————-
மழை ஓய்ந்த பொழுது (குறுநாவல்)
எழுத்தாளர் நிழலி
கேலக்ஸி பதிப்பகம்
விலை. ரூ. 100 /-
புத்தகம் வாங்க
வாட்சப் எண் : +91 9994434432
—————————————-
Add comment
You must be logged in to post a comment.