அத்தியாயம் – 3
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
“இனிமேல் நடக்கப் போவது எனக்கொன்றும் தெரியாது. ஆனால், “இக்கணம் என் கடமை நம்பிக்கையை விதைப்பது என சொல்லாமல் சொல்லியபடி விடியலை அழைத்துக் கொண்டிருந்தான் ஆதவன்.
அடுத்த வீடுதான் என்றாலும் சரணின் அம்மா, பட்டுப் புடவை சகிதம் கிளம்பினாள்.
“என்ன எல்லாம் பட்டு மயமா இருக்கு?” கேள்வி கேட்ட சரணிடம், “நல்ல விஷயம் பேசப் போறோண்டா. கல்யாண விஷயம். மங்களகரமான விஷயம். அதுக்குதான் ஸ்பெஷலா பட்டு ட்ரெஸ். எப்டி இருக்கு?” சிரித்தாள் சரண் அம்மா.
“நீயும் நல்ல ஷெர்வானி ஏதாவது போட்டுக்கோ. உன் ம்யூசிக் கச்சேரிக்கு போட்டுப்பியே? அது மாதிரி.”
சரணுக்கும் யோசனை சொன்னாள். சொன்ன அம்மாவை சின்னதாக முறைத்துவிட்டு ப்ளூ ஜீன்ஸ், வொயிட் டி ஷர்ட்டில் தயாரானான் சரண்.
மகிழ்ச்சியும் கொஞ்சம் பயமும் அவன் முகத்தில் அப்பிக் கிடந்தது.
கலவையான உணர்ச்சிகளுடனே மாடிப்படி இறங்கியவன் கண்களால் வீட்டை அளந்தான்.
“அப்பா எங்கேம்மா?” அம்மாவைக் கேட்டான்.
“கடைக்கு. ஷாப்பிங்.”
அம்மாவின் பதிலைக் கேட்ட சரணிடம் சின்ன எரிச்சல்.
“இந்த நேரத்துல என்ன ஷாப்பிங் வேண்டிக் கிடக்கு உன் வீட்டுக்காரருக்கு?”
“விவாக விஷயம் பேசப் போறோம். வெறுங்கையோடவா போவாங்க?” பதில் கேள்வி வந்தது அம்மாவிடம் இருந்தில்லை.
அப்பாவிடமிருந்து வந்தது. அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார். அவரும் பட்டு வேட்டியில் கை கொள்ளாமல் பைகள். பைகள். பைகள். மேலும் பைகள்.
“என்னப்பா இதெல்லாம்?” சரண் கேட்டான்.
“ஜஸ்ட் ஃப்ருட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்தான்ப்பா” இம்முறை பதில் வந்தது அம்மாவிடமிருந்து.
அப்பா வாங்கி வந்ததை தயாராக எடுத்து வைத்திருந்த வெள்ளித் தாம்பாள தட்டில் எடுத்து வைத்தாள்.
அலுப்புடன் தலையசைத்துக்கொண்ட சரண், “இதெல்லாம் விட முக்கியமான விஷயம். நான் உங்ககிட்ட சொன்னது ஞாபகம் இருக்குல்ல?” அம்மாவையும் அப்பாவையும் ஏறிட்டான்,
அவர்கள் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பார்த்துக்கொண்டனர்.
தீப்தியின் பெற்றோர் சம்மதம் சொல்ல மாட்டார்களோ? தனக்கிருக்கும் பயம் தன்னைப் பெற்றவர்களுக்கும் இருக்குமோ எனத் தோன்றியது சரணுக்கு.
ஒரு கணம் அங்கே ஒரு அசௌகரியமான அமைதி நிலவியது. ஒரு நொடிதான். சட்டென்று சகஜமான சரண் அப்பா, மகனை நெருங்கி அவன் தோள்களில் கையைப் போட்டுக்கொண்டார்.
“நீ சொன்னதெல்லாம் நல்லா ஞாபகமிருக்குப்பா எங்களுக்கு. எதுவும் கோபமா பேசக் கூடாது. கல்யாண விஷயம் கண்ணாடி மாதிரி. கவனமா, பொறுமையாப் பேசணும். தீப்தி அம்மா, அப்பா என்ன சொன்னாலும் அமைதியா இருந்துடணும். அவ்வளவுதானே? டோண்ட் வொர்ரி மை சன். நாங்க பாத்துக்கிறோம்” மகனின் முதுகில் ஆதரவாக தட்டிக் கொடுத்தார்.
“உன் காதலை சக்ஸஸ் செய்ய வேண்டியது. எங்க பொறுப்பு.” சரணிடம் சொன்ன அப்பா, ”ஜமாய்ச்சுடலாமில்லம்மா?” சரண் அம்மாவைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். அம்மாவும் சிரித்தபடி தனது கையை உயர்த்தினார்.
சரணின் முகம் மலர்ந்தது.
மலர்ந்த மலர்கள் போன்ற மகிழ்ச்சி தடவிய முகங்களுடனே தீப்தி வீட்டில் நுழைந்தனர் சரண் மற்றும் அவன் அம்மா, அப்பா.

தீப்தி வீடு. கதவு மூடியிருந்தது. அழைப்பு மணியை அழுத்தினான் சரண். உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை. ஜன்னல் திரை விலகி தீப்தியின் அம்மா மட்டும் வாசலில் நிற்பது யாரென எட்டிப் பார்த்தது போலிருந்தது. கண்டுகொள்ளாமல். மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினான் சரண். வீட்டுக்குள் இருந்து எந்த அரவமுமில்லை.
வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் சற்றே எரிச்சலனான் சரண். நல்ல வேளையாக அவன் அழைப்பு மணியை உடைத்துவிடும் முன்பாக கதவு திறந்தது.
தீப்தியின் அம்மா.
“வாங்க…வாங்க…”
மனிதர்களால் இப்படி பொய்யாக கூட புன்னகைக்க, சிரிக்க முடியுமா என்ன?
“வாங்க – உக்காருங்க” தீப்தியின் அம்மா உபசரித்தாள்.
“சௌக்கியமா சிஸ்டர்?” நிலைமையை சகஜமாக்கும் முயற்சியுடன், கேள்வி ஒன்றை வீசியபடியே சோபாவில் அமர்ந்தார் சரணின் அப்பா.
சரணும், அம்மாவும் கூட அமர்ந்ததும், “அவர் குளிச்சிட்டு இருக்காரு. இப்ப வந்துடுவாரு” அறிவித்தாள் தீப்தியின் அம்மா.
“இப்ப வந்துடுவாரு” என்பதன் பொருள் “கொஞ்சம் அதிக நேரம் ஆகும்” என ஆகும் என்பது சரண் குடும்பம் உணர்ந்த ஒரு உண்மை.
ஒரு வழியாக வந்து சேர்ந்த தீப்தியின் அப்பாவின் பார்வை அங்கே மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டின் மேல் விழுந்தது.
அவரின் கண்களும் தீப்தியின் அம்மாவின் கண்களும் சந்தித்துக் கொண்டன. அவை பரிமறிக் கொண்ட வார்த்தயற்ற அந்த உரையாடல் சரணுக்கு பிடித்தமாக இல்லை.
“பக்கத்து பக்கத்து வீட்லதான் இருக்கோம். ஆனா உங்க மகளைப் பார்க்கிற அளவுக்கு உங்களைப் பாத்துப் பேச வாய்ப்பு அமையலை”, சரணின் அப்பாதான் பேச்சைத் தொடங்கினார்.
தொடங்கிய பேச்சு தொடர முடியாமல் அறுந்து விழுந்தது.
“இனிமே எங்க மகளையும் உங்களால பாக்க முடியாது. ஆஸ்திரேலியா போறா. கல்யாணம் முடிஞ்சதும்” என்ற தீப்தி அப்பாவின் அறிவிப்பால்.
தடுமாறிப் போனார்கள் சரணைப் பெற்றவர்கள்.
“மாப்பிள்ளை ஒரு வகையில சொந்தம்தான். கண்ணுக்கு லட்சணமா இருப்பார். தீப்தியை ரொம்பப் புடிச்சிருக்கு அவங்களுக்கு. கல்யாணத்தை சீக்கிரம் வச்சிக்கலாம்னுட்டாங்க” தீப்தியின் அம்மாவின் வார்த்தைகளில் அளவற்ற பெருமிதம்.
“நாங்க வந்ததும் கல்யாண விஷயமாதான்” ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு பேசினார் சரண் அப்பா.
“சரணுக்கு கல்யாணமா? பத்திரிக்கை வைக்க வந்தீங்களா? அதான் இந்த பழம் ஸ்வீட்டெல்லாமா?” தீப்தி அப்பாவின் இந்தக் கேள்விகளில் நக்கல் தெறித்ததோ இல்லையோ, அவரின் அடுத்தக் கேள்வியில் அதன் வாசனை கண்டிப்பாக இருந்தது.
“ஆமாம், பொண்ணு யாரு?”
“சார், நாங்க உங்கப் பொண்ணு தீப்தியைதான் சரணுக்கு கேக்கலான்னு..” அதுவரை பேசாமல் இருந்த சரண் அம்மா வாயைத் திறந்து பேசினார்.
யாரும் எதிர்பாராமல் சடாரென ஒரு பெரும் சிரிப்புக்குப் போனார் தீப்தியின் அப்பா.
“எம் பொண்ணையா? சரணுக்கா?” விழுந்து விழுந்து சிரித்தார்.
சரண், அப்பா, அம்மா மூவருக்குமே அந்த சிரிப்பு வலியைக் கொடுத்தது.
“ஆமா சரண், உன் பேங்க் பேலன்ஸ் எவ்ளோ?” தீப்தியின் அப்பா கேட்க, அவன் அதற்கு பதிலளிக்காமல், “நான் தீப்தியை லவ் பண்றேன் அங்கிள். உங்க சம்மததுக்காகதான் அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்க.”
அவன் பேசியதைக் கேட்ட தீப்தி அப்பா அதை உதாசீனப்படுத்தினார்.
சரணை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு அவன் பெற்றோர் பக்கம் திரும்பினார்.
“உங்கப் பையனுக்குதான் புத்தியில்லன்னா உங்களுக்குமா? பெரியவங்க நீங்க எடுத்து சொல்ல வேணாமா?”
“இல்லை. சின்னஞ்சிறுசுங்க. ரெண்டு பேரும் ஆசைப்பட்டுட்டாங்க” சரண் அம்மா பிரயாசையுடன் பேச,
“உங்களுக்குப் பொண்ணிருந்தா டாலர்ல சம்பாதிக்கிற பையனுக்கு கொடுப்பீங்களா? இல்லை வேலை வெட்டி இல்லாதவனுக்கு சம்பந்தம் பேசுவீங்களா?” தீப்தி அம்மா பேசியது நஞ்சு தடவிய கனித் துண்டுகளாக வந்து விழுந்தது.
“சரணுக்கு வேலை இல்லன்னாலும் கச்சேரி அது இதுன்னு பாடிகிட்டுதான் இருக்கான். தீப்தியை நல்லா பாத்துப்பான் அவன்..”
மகனுக்கு ஆதரவாக வந்தார் அப்பா.
“என் பொண்ணுக்கு மூணு வேளை சாப்பாடாவது ஒழுங்காப் போட முடியுமா உங்கப் புள்ளையால?”
“சரணுக்கு வேலையில்லைன்னாலும் என் பிஸினஸ் இருக்கு. அதனால சாப்பாட்டுக்கு கஷ்டம் வராது. உங்கப் பொண்ணைப் பட்டினி போட மாட்டோம்.”
“என் பொண்ணுக்கு சாப்பாடு மட்டும்தான் உங்கப் புள்ளைக்கு பதில் அவன் அப்பா நீங்கப் போடுவீங்களா? இல்லை மத்தது எல்லாம் கூட எம் பொண்ணுக்கு புருஷனுக்கு பதில் மாமனார்தானா?”
தீப்தி அப்பாவால் வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. காரணம் அவர் கன்னத்தில் இடியாக இறங்கிய சரணின் அறை!
நாகரீகம் மூடி போட்டு மறைத்திருந்த அந்த இடத்து கண்ணியம் சரேலன காணாமல் போனது.
“என்னடா சரண், எங்களை அமைதியா இருங்கன்னுட்டு நீ..” சரண் அப்பாவுக்கு தாங்கிட முடியவில்லை.
விஷயம் சுலபமாக இருக்காது என்று தெரிந்திருந்தாலும் இப்படி கலவரமாக ஆகும் என அவர் எதிர்பார்க்கவில்லை.
“சார், சின்னப்பையன். ஏதோ தெரியாம..” என கை கூப்ப,
“வெளியே போங்கடா நாய்களா” சினம் கூடிவிட்டிருந்த தீப்தி அப்பா வெள்ளித் தட்டை எட்டி உதைத்தார்.
பழங்களும், இனிப்புகளும் சிதறின.
அப்பாவின் கூப்பிய கைகளை, “நீங்க ஏம்ப்பா?” தன் கைகளில் எடுத்துக்கொண்டான் சரண்.
“உங்கப் பாச டிராமால்லாம் உங்க வீட்ல வச்சிக்குங்க. இடத்தை காலி பண்ணுங்க முதல்ல” தீப்தி அப்பாவின் ஆத்திர அலறல், சரண் குடும்பத்தார் காதுகளில் அவர்கள் வீட்டுக்கு வந்தும் கூட கேட்டுக்கொண்டே இருந்தது. வெகு நேரத்துக்கு.
திங்கள்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.