அத்தியாயம் – 4
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2அத்தியாயம் - 3
சரணின் மூடிய விழிகள் மேல் காலைச் சூரியனின் வெளிச்சக் கதிர்கள் விழுந்தன. உறக்கம் தொலைத்து வெறுமனே மூடியிருந்த தன் கண்களைத் திறந்தான் சரண்.
முந்தைய தினம் தீப்தி வீட்டில் நடந்த கலவரம் அவன் கண் முன்னே திரும்பவும் படமாக ஓடியது. என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்தானே தவிர, நிலைமை இந்த அளவுக்கு மோசமாகும் என்பது அவனே எதிர்பாராத ஒன்று.
சரணின் பெற்றோர் தீப்தி வீட்டிற்கு சென்ற ‘பெண் கேட்கும் படலம்’ களேபரமானதும் அது பற்றி தீப்தியிடம் பேச அவளை தொலைபேசியில் தொடர்பு கொண்டான் சரண். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை. தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக மீண்டும் மீண்டும் ஒலித்து தள்ளியது.
எந்தக் க்ளையண்ட் சைட்டிற்கு எந்த ஊருக்குப் போனாளோ தீப்தி? சில முறை தீப்தியின் அலைபேசிக்கு முயற்சி செய்து விட்டு சலித்துப் போனான் சரண்,
வீட்டிலும் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை அவனுக்கு.
அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார் அப்பா. “ஸாரி சரண், சொதப்பிட்டேன்ல?” என்றார் முகம் வாடிக் கிடந்தது.
“இல்லைப்பா. அதெல்லாம் இல்லை.” தந்தையின் கைகளைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டான் சரண். “அந்த ஆளுக்குதான் மூளையும் இல்லை. இதயமும் இல்லை. என்னப் பேச்சு பேசுறான்? ஒரு பொண்ணுக்கு அப்பா மாதிரியாப் பேசுறான்? வாயா அது? வார்த்தையா அது? சாக்கடை.”
“என்னன்னாலும் வயசுலப் பெரியவர் சரண். அவர்தான் அப்டீன்னா நாமளும் ஏம்ப்பா மரியாதை குறைவாப் பேசணும்?” வருத்தம் மறையாத குரலில் சொன்னாள் சரண் அம்மா.
“இப்டி சொல்லி சொல்லித்தான் என்னை சாதுவா வளத்துட்டீங்க. இல்லேன்னு வசிக்குங்க. அந்தாள் பேசுன பேச்சுக்கு அவர் நாக்கை இழுத்து வச்சி..”
“விடுப்பா சரண்.” மகனைப் பாதியில் தடுத்தார் அப்பா.
“தீப்தி அப்பா பொண்ணைப் பெத்தவர். மனசு வருத்தம் இருக்குமில்ல? ரெண்டு நாள் போகட்டும். கோபம் குறைஞ்சதும் மறுபடி பேசிப் பாக்கலாம்.”
“மறுபடியா? அந்தாள்கிட்டேயா? நெவர்” இளமையின் பிடிவாதம் சரணிடம்.
“சரி விடுங்க. இதைப் பத்தி அப்புறம் முடிவு செய்யலாம். நான் சட்டுனு ஒரு உப்புமா செஞ்சிடுறேன். முதல்ல அபாவும் பிள்ளையும் ஏதாவது சாப்பிடுங்க. காலையில் தீப்தி வீட்லேருந்து வந்ததுலேருந்து ரெண்டு பேரும் பட்டினியாவே இருக்கீங்க.”
அம்மாவுக்கே உரிய அக்கறையோடு சொலிவிட்டு அடுக்களைக்குப் போனாள் அம்மா.
இரவு கவிந்த மாலையில், அப்பா, அம்மா, மகன் மூவரும் டேபிளில் உப்புமாவை அளைந்தனர். யாருக்கும் உணவை உண்ணும் மனநிலை இல்லை. செய்த உப்புமா யாரும் சீண்டாமல் அப்படியே கிடந்தது.
“குட் நைட் ப்பா. குட் நைட் ம்மா” சம்பிரதாயமாக சொல்லிவிட்டு, மாடியில் தன் அறைக்குள் சென்று விட்டான் சரண்.
மனசு மட்டும் தீப்தியிடம் பேசினால் தேவலை என்று கெஞ்சியது. அலைபேசியில் அவள் எண்களை ஒற்றினான். ரிங் போனது. ஆனால் கால் எடுக்கப்படவில்லை. “சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்” என்று அலைபேசி அறிவுறுத்தியபடி சிறிது நேரம் கழித்து மீண்டும் தீப்தியின் அலைபேசிக்கு முயற்சி செய்தான்.
‘நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது”
எரிச்சலுடன் அலைபேசியைக் கடாசினான்.
படுக்கையில் புரண்டானே தவிர தூக்கம் பிடிக்கவில்லை. எப்படி தூக்கம் வரும்? தன் காதல் கதையை கல்யாண அத்தியாயத்தை நோக்கி நகர்த்தும் முயற்சி ஆரம்பத்திலேயே நொறுங்கிப் போனதில் தான் நொறுங்கிப் போனான் சரண்.

கீழ் தளத்தில் தங்கள் அறையில் இருந்த சரணின் அப்பா, அம்மா இருவருக்கும் கூட உறக்கம் பிடிக்கவில்லை.
தங்களைப் பற்றி தீப்தி அப்பா தவறாகப் பேசியது கூட அந்த ஆதர்ச தம்பதியினரை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் தங்கள் அருமை மகன், ஒரே மகன் சரணைப் பற்றி அந்த தீப்தியின் அப்பா மரியாதை குறைவாக அவமானப்படுத்தும் விதமாகப் பேசியதுதான் அந்தப் பாசக்கார அப்பா-அம்மாவின் மனதை மிகவும் வருத்தியது.
“சங்கரி” தன் மனைவியை அழைத்தார் அப்பா.
“ம்?”
“தூங்கிட்டியா?”
“இல்லீங்க. தூக்கம் வரலை.”
“எனக்கும் தூக்கம் பிடிக்கலைம்மா.”
“எப்டீங்க நமக்கு தூக்கம் பிடிக்கும்? நம்ம சரண் காதல் விஷயம் இப்டி சொதப்பிடுச்சே?”
“ஆனாலும் அந்த தீப்தி அப்பா. என்னப் பேச்சு பேசிட்டான்? நான் சரணை தடுத்தேனே தவிர எனக்கே அந்தாளை வெட்டிப் போடணும் போல இருந்தது.”
“உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன? விட்டா நீங்க கண்டிப்பா அந்த தீப்தி அப்பாவை நொறுக்கிப் போட்டுருப்பீங்க. நம்ம பிள்ளை காதல் விஷயமாச்சேன்னு பொறுமையா இருந்துட்டீங்க.”
“என்னப் பொறுமையா இருந்து என்ன சங்கரி. விஷயம் உடைஞ்சிடுச்சே? நொறுங்கிப் போயிடுச்சே?”
“எனக்கும் கவலையாத்தான் இருக்கு. ஆனா கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது? சிக்கல் தீந்துடுமா என்ன?” சங்கரி சலிப்புடன் சொல்லிய வண்ணம் கணவரின் பக்கம் திரும்பிப் படுத்தாள்.
கணவனின் முகத்தில் ஓடிய கவலை ரேகைகள் அவளையும் வருத்தவே செய்தன.
இரண்டொரு நொடிகள் மௌனத்திற்குப் பிறகு கணவனின் கன்னத்தை வருடிய சங்கரி, “நீங்கதானே சொல்வீங்க? கடவுள் எல்லா சிக்கலுக்கும் ஒரு தீர்வு வச்சிருப்பார். நாமதான் கொஞ்சம் பொறுமையா இருக்கணும்னு. பொறுமையா இருப்போம். அந்த ஆண்டவன் எல்லாவற்றையும் சரி செஞ்சிடுவார். கவலைப்படாம தூங்குங்க” சங்கரி மிருதுவாக சொல்லவும், அப்பாவின் வயதான கண்கள் மெதுவாக உறக்கத்தை வாங்கிக் கொண்டன. சங்கரியின் இமைகளும் ஓய்வைத் தேடின.
மேல் தளத்தில் தன் அறையில் தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்தான் சரண்.
அறைக்குள்ளிருக்கப் பிடிக்காமல் மொட்டை மாடிக்குப் படியேறினான். அவனை வரவேற்றது தீப்தி வீட்டு வெற்று மொட்டை மாடி.
நல்ல தினங்களில் பகல் நேரமானால் சரண் தன் வீட்டு மொட்டை மாடியில் தண்டால் எடுத்துக் கொண்டிருந்தால் தீப்தி அவள் வீட்டு மாடியில் ஸ்கிப்பிங்க் குதித்துக் கொண்டிருப்பாள். இரு வீட்டு மாடிகளும் காதலை உரையாடிக் கொண்டிருக்கும்.
இரவென்றாலும் கூட இவன் மவுத் ஆர்கன் வாசித்துக் கொண்டிருந்தால், அவள் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பாள் – இவனின் இசையை ரசித்துக்கொண்டே!
இப்பொழுது வெற்றாகத் தெரிந்த தீப்தி வீட்டு மொட்டை மாடி, சரண் மனதில் உறுத்திய வெறுமையை மேலும் அதிகப்படுத்தியது. அவனுக்கு தீப்தியை உடனேப் பார்க்க வேண்டும் போல இருந்தது. மாடிச் சுவரை தாண்டிக் குதித்து விடலாம் அடுத்த வீட்டுக்கு என்று சரண் யோசித்த அந்த நேரம், அவன் வீட்டு கேட்டருகே அரவம். குனிந்து கீழே பார்த்தான் சரண்.
தீப்தி அவன் வீட்டு வாசற் படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள். கையில் ஒரு மிகப் பெரிய சூட்கேஸுடன்
வெள்ளிக்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.