அத்தியாயம் – 5
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
தடதடவென்று படிகளில் இறங்கி ஓடி வந்தான் சரண்.
தீப்தி அழைப்பு மணியை அழுத்தியிருந்தாள். சரண் சென்று தீப்தியை எதிர் கொள்ளும் முன் அழைப்பு மணி ஓசை கேட்டு அப்பா வந்துவிட்டிருந்தார்.
மாடியிலிருந்து வந்த சரணை ஒரு பார்வை பார்த்தபடி, “யாருன்னு நான் பார்க்கிறேன்”, என்றுவிட்டு கதவைத் திறக்க சென்றார்.
தீப்தியைப் பார்த்ததும் அப்பா என்ன சொல்லப் போகிறார் என்ற பதட்டத்துடனே இருந்தான் சரண்.
இச்சமயம் அம்மா எங்கே என்று விழிகளால் சலித்தான். அம்மா தூங்கிக் கொண்டிருக்கலாம்.
அவன் பார்வை அப்பாவிடம் மீண்டது.
கதவைத் திறந்த அப்பா, எதிர்பார்த்தபடியே ஒரு அதிர்ச்சிக்குப் போனார். “தீப்தி..” அப்பாவின் குரலில் பதட்டம். “நீ என்னம்மா இங்கே? இந்த நட்ட நடு ராத்திரியில்?”
“12 மணி தாண்டிடுச்சி அங்கிள். ஸோ குட் மார்னிங் டு யூ” பதில் சொன்ன தீப்தியிடமோ நிதானம். ஆனால் அது கொஞ்சம் செயற்கைத்தனமாகத்தான் இருந்தது.
“இன்னும் முழுசா விடியலையேம்மா? இந்த நேரத்தில் நீ என்னம்மா பண்றே எங்க வீட்டு வாசலில்?” அப்பாவின் விசாரணை தீப்திக்கு புதிதாக இருந்தது.
“அங்கிள் முதல்ல எனக்கு வழி விடுறீங்களா? இல்லை இந்தக் குளிரில், பனியில் என்னை வெளியிலேயே நிக்க வச்சி விசாரிக்கப் போறீங்களா?” தீப்தியிடம் எரிச்சல் உதயமானது.
அப்பா ஆனால் கனியவில்லை. “ஆனால் நீ இங்கே இந்த ராத்திரி நேரத்தில் வந்திருக்க கூடாது..”
“ஏம்ப்பா? ஏன்?” சரண் குறுகிட்டான்.
“நீ சின்னப் பையன். உனக்கு ஒண்ணும் தெரியாது” சரணை அடக்கிய அப்பா, “தீப்தி, நீயும் சின்னப் பொண்ணு உனக்கும் எதுவும் புரியற வயசில்லை. முதல்ல நீ உங்க வீட்டுக்குப் போ.”
“என் வீடு இதுதான்,” அறிவித்த தீப்தி, அப்பாவைத் தாண்டி வீட்டினுள் நுழைய யத்தனித்தாள்.
“நில்லு தீப்தி” சற்றே அதிகரித்த சினத்துடன் வழி மறித்தார் அப்பா. “ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு இப்டி இருட்டு நேரத்தில் பெட்டியைத் தூக்கிக்கிட்டு அடுத்த வீட்டு வாசலில் நிக்கிறது சரியில்லை.”
“என்னை உள்ளே விடாம வாசலில் நிக்க வச்சிப் பேசுறது நீங்கதான் அங்கிள். அதோட இது எனக்கு அடுத்த வீடுதானே தவிர அந்நியர் வீடில்லை. சொல்லப் போனா என்னை நேசிக்கிறவங்க நிறைய பேர் இருக்கிற வீடிது. இங்கே வர நான் ஏன் யோசிக்கணும்?” தீப்தி அதிகம் பேசினாலும் அவள் தன் மனதில் இருப்பதை அப்பட்டமாகப் பேசினாள்.
‘அந்நியர் வீடில்லை’, ‘நேசத்துக்கு உரியவர்கள் இல்லம்’ போன்ற தீப்தியின் வார்த்தைப் பிரயோகங்கள் அப்பாவை சற்றே அசைத்தன. “இருந்தாலும்..” அவர் இழுக்க, அச்சமயம் அம்மா அங்கே பிரசன்னமானாள் -ஒரு சமய சஞ்சீவியாக! அப்படித்தான் தோன்றியது, அப்பா – தீப்தி உரையாடலை கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்த சரணுக்கு.
“என்ன சத்தம் இங்கே இந்த நேரத்தில்?” படுக்கை அறையிலிருந்து வெளியே வந்த அம்மா கண்களை கசக்கிக் கொண்டு விசாரித்தவள் பார்வையில், வாசலில் பெட்டியோடு நின்று கொண்டிருந்த தீப்தி விழுந்தாள்.

அவ்வளவுதான். “தீப்தீ…” பாசக் குரலில் அழைத்தபடியே வாசலுக்கு விரைந்தவள், “உள்ளே வாம்மா. ஏன் வாசல்லியே நிக்கிறே?” இயல்பாக அப்பாவை அகற்றிவிட்டு, தீப்தியை கையைப் பிடித்து உள்ளே இழுத்து வந்தாள்.
“பெட்டியை உள்ளே எடுத்துட்டு வா” சரணுக்கு உத்தரவு பறந்தது.
“சங்கரி, சங்கரி, சொல்றதைக் கேளு. இது தப்பு” அப்பா முரண்பட்டு முனகினார்.
“எது தப்பு?” பதிலுக்கு கேட்ட அம்மா, “நேத்து தீப்தி அப்பா பேசினதுதான் தப்பு. இது.. இது.. தப்பில்லை”, காரணம் சொன்னது அம்மாவின் வார்த்தைகள். கூடவே,” ஒரு பொண்ணு மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும்” என்ற பிற்சேர்க்கை வேறு.
ஆனால் அப்பாவோ, “பாரு சங்கரி. நான் பொண்ணு இல்லை. எனக்கு ஒரு மகள் இல்லைதான். ஆனால் என் பொண்ணு நேரங்கெட்ட நேரத்தில் அடுத்த வீட்டுக்கு ஓடிப் போனால் ஒரு அப்பாவா, பெத்தவனா மனசு எப்டி வேதனைப்படும்னு எனக்குத் தெரியும்.”
“தீப்தி ஒண்ணும் எங்கேயும் ஓடிப் போகலை. நடந்துதானம்மா இங்கே வந்தே?” அம்மா அப்பாவியாக கேட்க,
“ம்.. ம்.. ம்..” தீப்தி பலமாக தலையை ஆட்டினாள்.
பெட்டியை எடுத்துக்கொண்டு வாசல் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தான் சரண். “ஓட்டம்- நடை” பற்றிய அம்மாவின் பிரஸ்தாபம் அவனிடம் ஒரு புன்னகையைத் தந்தது. கவனித்துவிட்டார் அப்பா.
“சிரிக்காதே சரண். எல்லாம் உன்னாலதான். நேத்து நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமில்ல?”
“எதுக்கு அங்கிள் பொறுமையா இருக்கணும்? சரண் கோபம் நியாயமானதுதான். அவன் அந்தாளை வெட்டிப் போடாம இருந்ததே பெரிய விஷயம். அந்தாள் பேசுனப் பேச்சுக்கு..”
“உன் அப்பா தீப்தி அவர். அந்தாளு இந்தாளுன்னு பேசுறது தப்பு.”
“உங்களுக்கு எல்லாமே தப்புதான்” முணுமுணுத்தாள் சங்கரி.
“என்னடா சரண் வேடிக்கைப் பாத்துக்கிட்டு? முதல்ல தீப்தியை மேலே கூட்டிட்டுப் போ. மத்ததை விடிஞ்சதும் பேசிக்கலாம்.”
“இது இது ரொம்ப தப்பு” துள்ளினார் அப்பா.
“எது?”
“தீப்தியை சரண் மாடிக்கு கூட்டிட்டுப் போறது?”
“ஏன்?”
“சின்னஞ்சிறுசுக. தன்னந்தனியா ஒண்ணு கிடக்க ஒண்ணு நடந்துடுச்சின்னா?” அப்பா புலம்பினார்.
தீப்தியோ, “நடந்தா நல்லதுதான் அங்கிள். என் அப்பாவுக்கு ஆப்ஷனே இல்லை. ஆனால் சரண்தான் ஒத்துக்க மாட்டேங்கிறான்” வெளிப்படையாக போட்டு உடைத்தாள் விஷயத்தை.
“ஏய்.. தீப்தி, என்னப் பேசுறே நீ?” சரணோ சங்கடமானான். முகம் முழுக்க சங்கோஜம் வந்து ஒட்டிக் கொண்டது.
நால்வர் உரையாடலில் சகஜத்தை மீட்க சங்கரி பேச்சுக்குள் நுழைந்தாள். “சரி..சரி.. தீப்தி, நீ கீழேயே எங்கூட படுத்துக்க. ஏங்க, நீங்க மேலே சரணோட ரூமில் தூங்கிக்குங்க. வாம்மா தீப்தி.”
சங்கரி அழைத்தாலும் தீப்தி நகரவில்லை.
“பசிக்குது ஆண்ட்டி. அப்பா, அம்மாகிட்ட கோச்சிக்கிட்டதால எதுவும் சாப்பிடலை நான். ரொம்ப பசிக்குது” என்றாள் மெல்லிய குரலில்.
கேட்டதும் சட்டென இளகிவிட்டது சங்கரியின் மனம்.
“வாம்மா. ரெண்டு தோசை ஊத்தி தர்றேன்” தீப்தியும், சங்கரியும் அடுக்களைக்கு அகன்றாள்.
பெண்கள் இருவரும் அங்கிருந்து அகன்றதும், அப்பாவும் மகனும் தனித்து விடப்பட்டனர்.
அப்பா களைப்புடன் சோபாவில் சரிந்தார். அருகே அமர்ந்தான் சரண். “சமாளிச்சிடலாம்ப்பா. கவலைப்படாதீங்க.”
“எப்டி சரண்? தீப்தியோட அப்பா, அம்மா முகத்தை நினைச்சாலே கலவரமா இருக்கு” நெற்றியைத் தடவின அப்பாவின் விரல்கள்.
“எல்லாம் சரியாகிடும். நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க. நான் பாத்துக்கிறேன்.”
“என் பயமே நீதான். உன் கோபம் தான்.”
“அப்பா…!”
“எனக்கு நீ ப்ராமிஸ் பண்ணு சரண். எது நடந்தாலும் நீ ஆத்திரப்படமாட்டேன்னு. எதுவும் அடிதடின்னு இறங்கிட மாட்டேன்னு.”
“சரிப்பா. ஐ ப்ராமிஸ்.”
ஆனால் அப்பாவிடம் சரண் செய்த சத்தியத்துக்கு சோதனை ஒரு சில மணி நேரங்களிலேயே அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்தது.
ஒரு சோதனை இல்லை. இரண்டு சோதனைகள்.
ஒன்று தீப்தியின் அப்பா. இரண்டாவது அவள் அம்மா.
திங்கள்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.