அத்தியாயம் – 9
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
மரக் கதவு மூடியிருந்தது. எட்டி உதைத்தான் சரண். தாழிடப்படாத கதவுகள் சடாரென திறந்து கொண்டன. உள்ளே நுழைந்தான்.
“தீப்தி..!” உரத்து அழைத்தான். “தீப்தி..!”
அவள் அப்பா வந்தார். “என்னடா வீட்டுக்குள வந்து கலாட்டா பண்றே? லாக்கப்ல வாங்குனது போதாதா?”
“உன்னால உடம்பதான் அடிச்சி நொறுக்க முடியும். மனசை ஒரு மண்ணும் பண்ண முடியாது. உங்கிட்ட என்னப் பேச்சு? தீப்தியைக் கூப்டு. தீப்தி..!”
“அவ இங்க வீட்ல இல்லை.”
ஒரு நொடி மௌனமான சரண். “உன்னை நம்புறதுக்கு நான் உன் பொண்டாட்டி இல்லை. நானே பாத்துக்குறேன்.”
ஹாலை அளந்த சரண் ஒட்டியிருந்த ஒரு அறையின் உள்ளே நுழைந்தான். தீப்தி இல்லை.
“சொல்றேன்ல? நிஜமாவே அவ வீட்ல இல்லை” தீப்தியின் அப்பா கத்தினார்.
“என்ன சொல்லி மிரட்னே அவளை?” கேட்டபடியே இன்னொரு அறையை சலித்தான் சரண்
.
“ஆமா. மிரட்னேன். உன் வீட்டை விட்டு அவ வெளியே வந்தாதான் நீ லாக்கப்லேருந்து, போலீஸ் அடி உதையிலேருந்து… வெளியே வருவேன்னு மிரட்னேன். அதுக்கென்ன இப்போ?”
தேடலை நிறுத்திவிட்டு தீப்தியின் அப்பாவை வெறித்தான் சரண்.
தான் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தபோது இன்ஸ்பெக்டருக்கு வந்த தொலைபேசியும், அதைக் கேட்டு அவர் தன்னை விடுவித்ததும் அவனுக்கு இப்போது புரிந்தது.
“நீயெல்லாம் ஒரு அப்பா” அவரை ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு மாடி ஏறினான் சரண்.
ஏறிய வேகத்தில் கீழே இறங்கினான்.
மாடியிலும் தீப்தி இல்லை.
“எங்கே போயிருப்பாள்?” மனதுக்குள் கவலை வண்டு குடைந்தது.

“தீப்திக்கு மட்டும் ஏதாவது ஆச்சு..?” தீப்தி அப்பாவின் முகத்துக்கு நேரே விரலை நீட்டி எச்சரித்துவிட்டு தன் வீட்டுக்குள் நுழைந்தான் சரண்.
கவலை தோய்ந்த முகங்களோடு இருந்த அம்மாவையும் அப்பாவையும் பார்க்கப் பார்க்க அவனுக்குள் வேதனை பெருகியது.
என்னால்தானே எல்லாம்? என் காதலால்தானே எல்லாம்? ஏன் இளையவர்கள் காதல் என்றால் ஒரு சில பெற்றவர்களுக்கு வலிக்கிறதோ?
தீப்தியைப் பெற்றவர்களும் என்னுடைய அப்பா, அம்மா மாதிரி புரிதல் உள்ளவர்களாக இருக்கக் கூடாதா?
உலகத்தில் எதிர்ப்பில்லாத காதலே கிடையாதா? சரணின் எண்ணங்கள் இன்னும், இன்னும் கிளைவிடும் முன், அவன் அருகில் வந்து அமர்ந்தாள் அவன் அம்மா.
“தீப்தி அவ வீட்ல இல்லியா சரண்?” தீப்தி மீதான சங்கரியின் அக்கறைக்கு சாட்சி கேட்டால் அவர் மனிதரில்லை.
“நானே அவளோட வீடு முழுக்க தேடிட்டேன்மா. அவ அங்க இல்லை.”
“போன் பண்ணிப் பாரேன் சரண்” அப்பா சொன்னார்.
தன் அலைபேசியை எடுத்தான். சுத்தமாக சார்ஜ் இல்லை.
கவனித்த அப்பா, “இந்தா, இதுல கால் பண்ணு”
தன் அலைபேசியை சரணிடம் நீட்டினார்.
அவசர அவசரமாக அதில் தீப்தியின் எண்களை ஒற்றினான்.
ரிங் போனது. ஆனால் பதில் இல்லை.
சரணின் போனை சார்ஜரில் போட்டபடியே, சரண் மறுபடி மறுபடி தீப்திக்கு முயற்சிப்பதையும், மறு முனையில் பதில் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார் சரண் அப்பா.
அவரையும் கூட தீப்தி பற்றிய கவலைத் தொற்றிக் கொண்டது. ஆனால் சரணிடம் காட்டிக்கொள்ளாமல், “உன் போன்ல இப்ப சார்ஜ் இல்லல்ல? தீப்தி போன்லியும் கூட இப்ப சார்ஜ் இல்லையோ என்னவோ?”
“ரிங் போகுதேப்பா?” சரண் கவலையுடன் சொல்ல, அதற்கு அப்பாவிடம் பதில் இல்லை.
மகளைக் காணவில்லை என்றதும் காதலனைப் பிடித்து லாக்கப்பில் வைத்து தாளிக்கிறார்கள்.
காதலியைக் காணவில்லை என்றால் அந்தக் காதலன் என்ன செய்துவிட முடியும்?
காதலியின் அப்பாவை லாக்கப்பில் தள்ள முடியுமா என்ன?
நிமிடத்துக்கு ஒரு முறை தீப்திக்கும், அவள் தோழிகளுக்கும் போன் செய்து கொண்டிருந்த சரண், நட்ட நடு ராத்திரியில் தன் அறையிலிருந்து அடுத்த வீட்டைப் பார்த்தான்.
தீப்தியின் அறை இருளாக இருந்தது.
வேதனையுடன் ஒரு வித கோபத்துடன், சரண் தன் அலைபேசியைக் கடாசிய அந்த நேரம், அவன் அலைபேசி அவசரமாக ஒலித்தது.
பாய்ந்து எடுத்தான்.
திங்கள்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.