ஜெஸிலா பானு
சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு என்று ஏதேதோ படித்திருப்போம். ஆனால் வாழ்க்கைப் பாடமென்று நமக்கு சொல்லித் தரப்படுவதில்லை. அப்படியே சொல்லித் தந்தாலும் நம்மால் கடைப்பிடிக்க முடியுமா? அமைதியான ஆரோக்கியமான இன்புற்ற நிலையில் நம் மனம் எப்போதுமே இருக்க வேண்டுமென்று யார் தான் விரும்பமாட்டார்கள்? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? யோசிக்கலாமா?
ஏமாற்றம், ஆற்றாமை, துரோகம், பகை, பொறாமை இப்படிப்பட்டவற்றில் நாம் சிக்கிக் கொள்ளும்போதுதான் நம் மனம் அதிக அழுத்தத்தில் இருக்கும்,
பல ஆண்டுகளாகப் பழகிய நண்பர், நம்பி நட்பு பாராட்டியவர், உங்கள் வாழ்க்கையில் பாதிக் காலம் அவருக்காகவே நீங்கள் செலவழித்திருக்கிறீர்கள். அப்படிப்பட்டவர் பலரிடம் உங்களைப் பற்றித் தவறாகப் பேசியிருக்கிறார், எள்ளி நகையாடியிருக்கிறார், புறம் பேசியிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரிய வருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்கள் துணை ஏதோவொரு விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட்டார் என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டது. எப்படி கையாள்வீர்கள்?
நெருங்கிய உறவின் நம்பிக்கைத் துரோகம். கேள்வி கேட்டும் மாற்ற முடியாத சூழல். எங்கே சென்று புகார் தர இயலும்?
’எனக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, எனக்குத்தான் தருவேன் என்று சொல்லப்பட்டிருந்ததை இன்று யாருக்கோ தருகிறார்கள்’ இந்த ஆதங்கத்தைச் சட்டையைப் பிடித்துக் கேட்கவா முடியும்?
அவர் துரோகம் செய்துவிட்டார், முதுகில் குத்திவிட்டார், ஏமாற்றிவிட்டார், வாக்கு தவறிவிட்டார்– இதையெல்லாம் புலம்புவதன் மூலமோ, வெட்டவெளிச்சமாக்குவதன் மூலமோ அவர்கள் தன் தவறை உணர்வார்களா? வெட்கப்படுவார்களா? வேதனை கொள்வார்களா? நீங்கள் உணர்வது போல் கண்டிப்பாக உணரவும் மாட்டார்கள், வருந்தவும் மாட்டார்கள், உங்கள் வேதனையைப் புரிந்து கொள்ளவும் போவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும்? மாறாதவர்களுக்காக நம் பொன்னான நேரத்தை நாம் வீணாக்க வேண்டுமா? யோசித்துப் பாருங்கள். நற்குணம் படைத்த, இரக்கமுள்ள, தாராள மனப்பான்மை உள்ள நீங்கள், தரங்கெட்ட செயலை, உங்களை நிலைகுலையச் செய்த விஷயங்களை எண்ணிக் கலங்குவதேன்?
உண்மையில் நீங்கள் என்ன செய்தால் சரியாக இருக்கும் தெரியுமா?
சரியில்லாத அல்லது தவறு நடந்த அனைத்தையும் பற்றி நீங்கள் பேசிக்கொண்டே இல்லாமல் சிந்தித்துக் கொண்டே இல்லாமல், இப்படியாகிவிட்டதே என்று எண்ணாமல், இவ்வளவு முட்டாளாக இருந்தேனா என்று கதறாமல், நான் செய்த பிழை என்ன, எனக்கு ஏன் இப்படி நேர்கிறது என்று யோசிக்காமல்… என்ன நடந்தது என்பதை முழுவதுமாக மறந்து விடுங்கள். மன்னித்துவிடுங்கள். இதைத்தான் நான் மிகவும் கடினமான பயிற்சி/ திறன் என்கிறேன். இந்தத் திறனைப் பயில்வது சொல்வது அளவுக்கு எளிதில்லை. முனைய வேண்டும். வாழ்க்கைப் பாடத்தில் ‘மன்னிப்பு’ என்ற ஆற்றல் ’முனைவர்’ பட்டத்தைப் போன்றது. காசு கொடுத்து வாங்கும் முனைவர் பட்டத்தைச் சொல்லவில்லை. உண்மையில் ஆராய்ந்து ஆழ்ந்து வாசித்துத் தெரிந்து தேர்ச்சி பெறும் முனைவர் பட்டத்தைச் சொல்கிறேன்.
சொல்வது எளிமை என்று நினைக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் உங்களையே மன்னிக்கப் போகிறீர்கள்!
’என்னது, நான் என்னையே மன்னிக்க வேண்டுமா? நான் என்ன தவறு செய்தேன், என்னை நானே மன்னித்துக் கொள்ள’ என்று நீங்கள் நினைக்கலாம். உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு என்கிறது பிரம்மசூத்திரம். அப்படியிருக்க, மற்றவர் உங்களைக் காயப்படுத்தியதற்கும் நீங்கள் பொறுப்பென்ற போது ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதற்கேற்ப உங்களின் ஏதோவொரு செயல் அந்த நிகழ்விற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதி, முதலில் நீங்களே உங்களை மன்னித்துக் கொள்ளும் பக்குவத்தைப் பெற முயற்சி செய்வோம். அதன் பிறகு மற்றவர்களை மன்னிக்கலாம். அதுதான் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
எதிர்மறையான சிந்தனையும் சுயமதிப்பீடும் உங்களுக்கு உதவாது. அவை அதிகச் சிக்கல்களை ஈர்க்கின்றன. உங்கள் சுயமரியாதையைக் குறைக்கின்றன, மேலும் உங்களை இன்னும் மோசமாக உணரவைக்கும். இந்தச் சுழற்சியை முதலில் உடைத்தெறியவேண்டும். வெறுப்பை வைத்துக் கொண்டு இருப்பது காற்றடிக்கும்போது ஒரு கை மண்ணெடுத்துத் துற்றுவதுபோலாகிவிடும், நம் மீதே புழுதியை வாரி இறைப்பதுபோலாகிவிடும்.
மன்னிப்புடன் புதிதாகத் தொடங்குங்கள்! கடந்த காலத்தில் நீங்கள் வருந்திய அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி, அனைத்திற்கும் உங்களை மன்னியுங்கள். உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த நினைத்தால், சிறந்த வாழ்க்கையை உருவாக்க விரும்பினால், முதலில் நீங்கள் உங்களை மன்னிக்க வேண்டும்.
‘அவருக்காகவே வாழ்ந்த என்னை அவர் ஏமாற்றிவிட்டார்’ என்று துவண்டுபோகாமல் அடுத்தது என்ன என்பதில் கவனம் செலுத்தினால் மனவுறுதியுடன் இருந்தால், மன்னிப்பது எளிமையாகிவிடும். நீங்கள் வார்த்தையால் ‘உன்னை மன்னித்தேன்’ என்று சொல்ல வேண்டாம். உங்கள் மனதில் அப்படி நிறுத்திக் கொண்டால் உங்களால் அந்தச் சவாலைச் சமாளிக்க இயலும் என்றுதான் சொல்கிறேன். எதையுமே ‘பிரச்சினையாக’ பார்க்காமல் ‘சவாலாக’ பார்த்துப் பழகுங்களேன். சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் பிறக்கும். மன்னிக்க வேண்டுமே என்று உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்ளாமல் அப்படியே விட்டு விடுங்கள். அதனுடன் தொடர்பில்லாமல் அப்படியொன்று நிகழாதவாறு கடந்துவிடுங்கள்.
தவறு செய்தவருடனே வாழ வேண்டியிருக்கிறதே – அந்தச் சூழ்நிலையிலும் என்னைதான் நான் மன்னித்தாக வேண்டுமா என்று கேட்டால். ஆம், நீங்கள் உங்களை மன்னிக்காதபோது, எதிர்மறை உணர்ச்சிகளால் நிரப்பப்படுகிறீர்கள். அது நீங்கள் சுற்றியுள்ள உலகத்தைச் சிதைக்கிறது. மன்னித்துவிட்டால் வருத்தம், குற்ற உணர்வு மற்றும் அவமானம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட எதிர்மறை ஆற்றலை நீங்கள் மாற்றுகிறீர்கள். உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாமல் இருப்பீர்கள். உங்களுக்குக்கான நல் அதிர்வுகளையும் ஆற்றலையும் அதிகரிக்கிறீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் சிறந்த சூழ்நிலைகளை ஈர்க்கிறீர்கள்.
பத்து வருடத்திற்கு முன்பான ஒரு சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அமெரிக்காவில் 48 பெண்களைக் கொன்ற கேரி ரிட்ஜ்வேவை நீதிபதி முன்பு நிறுத்தியபோது எந்த உணர்வுமில்லாமல் ‘ஆம் கொன்றேன், எதற்கென்றெல்லாம் தெரியவில்லை நினைவில் இல்லை’ என்றபோது அந்தப் பெண்களின் உறவினர்கள் அவனை வசை பாடிய போது அதனைக் கண்டுகொள்ளாமல் கல்லாக நின்றிருந்த கொலைகாரனை ஒரே ஒரு பெண்ணின் தந்தை மட்டும் முன் வந்து ‘ நான் உன்னை மனப்பூர்வமாக மன்னித்துவிட்டேன்’ என்று சொன்ன தருணம் மாற்றியது. ஈவு இரக்கமின்றி இருந்த அந்தக் கொலைகாரனின் கண்களிலிருந்து கண்ணீர் சொரிந்தது. அதுதான் ‘மன்னிப்பின் பலம்’.
இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர் தனது சகோதரரோடு வருடக் கணக்கில் பேசுவதில்லை, காரணமே மறக்கும் அளவிற்கு வருடங்களாகிவிட்டது என்று என்னிடம் முறையிட்டார். நானும் அவரிடம், சகோதரர் அவருக்குச் செய்த மன வலியை வைத்திருக்காமல் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அதற்காக அவர் ஒரு வாரம் பயிற்சியாகத் தினமும் தன் சகோதரரை எண்ணி அவர் செய்த காரியத்தை மறந்து, அதனை மனப்பூர்வமாக மன்னிப்பதாக மனதுக்குள் நினைத்துக் கொண்டே வந்தார். ஒரு வாரம் முடியும் முன்பே பல வருடங்கள் தொடர்பில் இல்லாத சகோதரர் இவருக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார். கடிதத்தை மறுபடியும் மறுபடியும் வாசித்துவிட்டு எப்படி இது நிகழ்ந்தது என்று அவருக்கு மிகுந்த ஆச்சர்யம். இது எப்படி நிகழ்ந்தது என்று தொடர்ந்து ‘நலம் வாழ’ கட்டுரையை வாசிப்பவர்களுக்கு விளங்கியிருக்கும். இதுதான் மன்னிப்பின் வலிமை.
”என்னடா இது புது உருட்டா இருக்கே!?” என்று நீங்கள் அதிருப்தியடைவது தெரிகிறது. ஆனால் வருந்தினால் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறதா? இல்லை. துன்பம் தீர்வு தருமென்றால் அதே நிலையில் இருக்கலாம். கவலை எதையுமே மாற்றப் போவதில்லை என்றால் அப்படியே விட்டுவிட்டு அடுத்து என்ன என்று சிந்திப்பதிலும், நம்மை நாமே திசைத் திருப்புவதிலும் அக்கறை செலுத்தலாமே.
உங்களை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருங்கள். மன்னித்து விடுவோமா, உங்கள் மனம் இரங்கி…?
நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
19 comments
Prabhavathy SenthilAuthor
அருமை jezeela….வாழ்த்துகள்
kumarAuthor
சிறப்பு. நல்லதொரு கட்டுரை. மறப்போம்… மன்னிப்போம், முதலில் நம்மை மன்னித்துவிட்டு துரோகம் புரிந்தவரைப் பற்றிச் சிந்திக்காமல் பயணிப்போம், முடிந்தால் இணைந்தும் இல்லையேல் நம் பாதையிலும் பயணிப்போம். (தொடர்ச்சி அடுத்த கருத்தில்)
Mohaideen BatchaAuthor
வாழ்வில் அன்றாடம் தேவைப்படும் பேசுபொருள், வருத்தப்படாமல் மன்னித்துப் பழக அழகிய பாடம் சொல்லும் கட்டூரை. மகிழ்ச்சி தொடர்க.
kumarAuthor
நானெல்லாம் அப்படித்தான் ஒருத்தரோடு பயணித்தேன். அவரைத் தேடிச் சென்றும் குடும்பமே ஒதுங்கிப் போனபோது நானும் ஒதுங்கிட்டேன். இப்ப பாலாஜி அண்ணன் பாணியில் யாவரும் நலம். வாழ்த்துகள்.
Sasi S KumarAuthor
நன்று… மன்னித்தல் குறித்த கட்டுரை
REYAZUDEEN AmirjonAuthor
Thanks madam Some people don’t know about value of forgiveness What can we do? madam
SaitAuthor
இது நீங்கள் எழுதியதா இல்லை ஏதேனும் கட்டுரைகளை நிறைய படித்து எழுதுகிறீர்களா எப்படி நீங்கள் மட்டும் எது இருந்தால் என்னுடைய பாராட்டுக்கள்
saitAuthor
கட்டுரை வெகுசிறப்பாக வந்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். எதையுமே பிரச்சனையாகப் பார்க்காமல் சவாலாகப் பார்க்கவேண்டும் என்ற கருத்து சிறப்பு. கட்டுரை எளிமையாகவும் அதே சமயம் மிகச்சரியான திசையிலும் செல்கிறது. வாழ்த்துக்கள்.
முத்து மணிAuthor
அறிந்து கொண்டோம்.. மன்னித்தோம்.. இனி அமைதி என்பதெல்லாம் கட்டுரைக்கும் கதைகளுக்கும் சரி வரும். சில ஏமாற்றங்கள், தவறுகள், துரோகங்கள் எத்தனை வருடமானாலும் மனதில் நிலைத்து நிற்கும். அதற்காக எதிர்ப்பு சண்டை எல்லாம் இருக்காது… ஆனால் மனம் ????
SadayanAuthor
அருமை. Living together என்பது போல, நம் சமுதாயத்தில் தற்போது living in conflict. எனக்குத் தெரிந்து கணவன் மனைவி இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல் ஒரே வீட்டில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கட்டுரையை அனுப்புகிறேன். வாழ்த்துகள்
Shankar MahadevanAuthor
மன்னிப்பு – இதன் சக்தி அதிகம். மனதை அமைதி படுத்தும். பிறரால் அமைதி இழக்க முடியாது…அதற்கான மூலம் நம்மிடமிருந்து ஏதாவது ஓரிடத்தில் துவங்கியிருக்கும். மறந்து மன்னித்து மகிழ்வான வாழ்விற்கு வழி வகுப்போம். அருமையான ஆழமான பதிவு. யாவும் நலம்!!
JAZEELA BANUAuthor
மிக்க நன்றி பிரபாவதி. நன்றி குமார். யாவரும் நலம் என்று சும்மா சொன்னால் போதாது, மன்னிக்கும்போது சகிப்புதன்மை ஏற்படும். எதையுமே எளிதாக கடந்துவிட முடியும். மற்றவரின் இருப்பு நம்மை பாதிக்காது.
JAZEELA BANUAuthor
மிக்க நன்றி முஹைதீன் பாஷா. மிக்க நன்றி தோழர் சசிகுமார். REYAZUDEEN Amirjon மற்றவர்கள் மதிக்க வேண்டுமென்பதற்காக அல்லது பொருட்படுத்த மன்னிப்பதில்லை. உங்கள் நலனுக்காக மன்னியுங்கள். அதில் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டீர்கள்.
JAZEELA BANUAuthor
Rajaram மிகவும் சரி. எனக்கு அந்தப் பிரச்சனையுண்டு. இப்போதெல்லாம் நேரில் கண்டாலும் கண்ணில் பில்டர் மாட்டி கொள்கிறேன். பிழைக் கடந்து பார்க்க முடிகிறது. Nagore Rumi உங்கள் அன்பான வார்த்தைகள் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி ஐயா.
JAZEELA BANUAuthor
Sait பயிற்சி எடுத்து கொள்ளும் மாணவி நான். உங்களைப் போல்தான் நானும், எனக்குத் தெரிந்ததை பகிர்கிறேன். முத்து மணி, காலம் காயத்தை ஆற்றிவிடும். மறத்தல் மன்னித்தல் உங்களுக்கு ஆறுதல் தரும். உங்களை ஆசுவாசப்படுத்தும்.
JAZEELA BANUAuthor
பால்கரசு 100% உண்மை. மன்னித்துவிட்டுவிட்டால்தான் காலமும் நல்ல பதிலை நமக்கு தரும். Sadayan நன்றி பகிருங்கள். கட்டுரை ஒருவரை மாற்றுமென்றால் மகிழ்ச்சிதான்.
பால்கரசுAuthor
எதுவும் நமக்கு நிகழாத போது இதுபோன்ற கட்டுரைகள் சிறந்ததாக தோன்றும். அதுவே நமக்கு நடக்கும்போது அதன் வலி புரியம். மன்னிப்பு என்பது மனிதனால் முடியாத விசயம் அதை காலமும் சூழலும் எளிதில் சாத்தியப்படுத்திவிடும். காலம் மிகச் சிறந்த ஆசான். காலத்தின் கையில் விட்டு விட்டு கடந்து செல்லும்போது மனம் லேசாகும்.
Nagore RumiAuthor
மறந்து விடுவோம், ஆனால்! மன்னிப்பதற்கான பயிற்சிதான் கொஞ்சம் கடுமையாக இருக்கும். சம்பந்தப்பட்ட நபர்களை காணாதவரை அந்த சிந்தனையே வராது. நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும்போது தம்மையே அறியாமல் கவனம் சிதறுகிறது. சிறப்பான கட்டுரை பயிற்சி எடுப்போம்.
பருத்தி இக்பால்Author
ஆம் ! உண்மைதான். உலகில் மன்னிப்பே சிறந்த மருந்து மறப்போம் ! மன்னிப்போம். சிறந்து வாழ்வோம்.