அத்தியாயம் – 11
கல்பனா சன்னாசி
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அடுத்த நாள் காலை கொஞ்சம் குழப்பமாக விடிந்தது சரணுக்கு. குளிக்கும்போது தண்ணீர் படுகையில் கன்னத்து காயம் எரிந்தது. பேண்ட்டை போடும்போது வயிறும் கொஞ்சம் வலித்தது. உடல் காயங்களை விட மனதின் வேதனைதான் அவனுக்கு அதிகமாக வலித்தது.
இரவு வீட்டுக்கு வந்தபோது அம்மா, அப்பா இருவருமே விழித்திருந்தாரகள்.
“இன்னும் தூங்கலையா நீங்க?” இயல்பாக இருக்க முற்பட்டான் சரண்.
அம்மாதான் சடாரென உடைந்தாள். “இது நமக்குத் தேவையாடா?”
அம்மாவின் ஆதங்கம் சரணுக்குப் புரியாமல் இல்லை. அவள் அருகில் சென்று அமர்ந்தான்.
அவள் கைகளைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டான். “தீப்தி நமக்குத் தேவைம்மா” என்றான் மிருதுவான குரலில்.
“ஆனாலும் இந்த லாக்கப், போலீஸ் ஸ்டேஷன், தாங்க முடியலை சரண்.”
அம்மாவின் வேதனையில் நியாயம் இருப்பதை சரண் உணர்ந்தே இருந்தான். ஆனாலும் அம்மாவுக்கு என்னவென்று சமாதானம் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அப்பாவை ஏறிட்டான். அவர் எழுந்து வந்து அம்மாவிற்கு இன்னொரு பக்கம் அமர்ந்துகொண்டார்.
“பாரு சங்கரி. சரணால தீப்தியில்லாம இருக்க முடியாது. தீப்தியும் அப்படிதான். நம்ம சரண் மேல உயிரையே வச்சிருக்காம்மா அந்தப் பொண்ணு.”
“ஆனாலும் இந்த வயசான காலத்துல நீங்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் நிக்கணுமா?”
“அதனாலென்ன சங்கரி? கொலையா பண்ணிட்டோம்? இல்லை கொள்ளையடிச்சிட்டோம்னா ஸ்டேஷனுக்குப் போனோம்? என்ன சரண்?”
சரண் ஆமோதிப்பாக தலையசைத்தான். ஆனாலும் அம்மா சமாதானமாகவில்லை.
அப்பாவே தொடர்ந்தார்.

“நம்ம பையனோட மனசறிஞ்சு பெத்தவங்க நாமே ஆதரவா நிக்கலேன்னா எப்டி சங்கரி?” அப்பா ஆதுரமாக சொன்னார்.
கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே சங்கரி, “ஆனா சரண், நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணணும்?”
“என்னமோ?”
“உனக்கு எந்த ஆபத்தும் வந்துடாம நீ நடந்துப்பேன்னு..”
“நிச்சயமாம்மா” சரண் அம்மாவை தோளோடு அணைத்துக்கொண்டான். “இப்ப ரெண்டு பேரும் போய் நிம்மதியா துங்குங்க. குட் நைட்.”
அம்மாவையும் அப்பாவையும் தூங்க சொன்னானே தவிர, சரணுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. உறக்கமற்றே செலவானது அவனது அந்த இரவு,
எப்போது விடியும் என்று காத்திருந்தவன், விழித்ததும் அலைபேசியை எடுத்தான். தீப்தியை அழைக்க. ஆனால் அதற்குள் அவனுக்கு தீப்தி அனுப்பிய “குட் மார்னிங்” மெஸேஜ் அவனை வரவேற்றது.
பதிலுக்கு டெக்ஸ்ட் செய்ய எல்லாம் பொறுமை இல்லை சரணிடம். தீப்தியை போனில் அழைத்தான்.
“ஹலோ லவ்வர் பாய். குட் மார்னிங்.”
“மார்னிங் மட்டும்தான். குட்டைதான் காணோம்.”
“ஏன்? நைட் நான் உன் கனவில் வரலியா?”
“கனவே வரலை.”
“ஏண்டா?”
“தூங்கினாதானே கனவு வர?”
சரண் சொன்னதும், தீப்தியிடம் மௌனம் நிலவியது. அமைதியில் நழுவிய சில விநாடிகள் நிசப்தத்திற்குப் பிறகு தீப்தி சொன்னாள். “நானும் கூட தூங்கலை சரண்.”
“அப்ப எனக்கு கால் பண்ணிருக்கலாம்ல?”
“உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு…”
“சேம் ஹியர். நானும் உன்னை தொந்தரவு பண்ண வேணாம்னு நினைச்சேன். அதான் உனக்கு போன் பண்ணலை.”
“சரண், நாம் இப்ப மீட் பண்ணலாமா?”
“ரிகர்சல் இருக்கு தீப்தி. ஏற்கெனவே ஒத்துக்கிட்ட கான்செர்ட்.”
“சரி, நீ ரிகர்சலைப் பாரு. நான் ஆபீஸுக்குப் போறேன். மறக்காம ஈவ்னிங் ஆபீஸுக்கு வந்துடு”
“ஓகே. ஷ்யூர். ஆனா இப்ப எனக்கு ஒரு கிஸ் வேணும் உங்கிட்டேருந்து.”
“காலங்காத்தாலேயேவா?”
“உனக்காக லாக்கப்பில் எல்லாம் இருந்துருக்கேம்மா”, சரண் முடிக்கக் கூட இல்லை. மறு முனையில் இருந்து சரமாரியாக முத்த மழை பொழிந்தது.
“ஹேய்.. ஹேய்.. ஹோல்டான்… ஹோல்டான்,..” சரணே எதிர்பார்க்கவில்லை.
“இவ்ளோ கிஸ் கிடைக்கும்னா இன்னொரு தடவை லாக்கப்பில் இருக்கலாம் போல..”
“இன்னொரு தடவை இப்டி சொன்னே?” மிரட்டிய தீப்தி, “அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் என் கையில் கிடைச்சான்..?”
“பாவம். அவர் போட்டிருக்கிற காக்கி சட்டைக்காக அவரை விட்டுடலாம்.”
“ஓகே டா. ஈவ்னிங் பாக்கலாம்.”
“லவ் யூ தீப்தி.”
“லவ் யூ டூ டியர்.”
அலைபேசிகள் அணைந்தாலும், இருவரது இதயங்களிலும் அன்புத் தீ, அதற்கு ஏற்பட்ட சிக்கல்களால் அணைந்துவிடாமல் கொழுந்துவிட்டு எரிந்தது.
கன்னத்து காயத்தை தடவியபடி மாடிப்படிகளில் கீழிறங்கினான். ரிகர்ஸல் போவதாக சொல்லிவிட்டு பைக்கை எடுக்கும்போது அவனையும் அறியாமல் கண்கள் அடுத்த வீட்டை எட்டியது.
தீப்தியின் அப்பா நின்று கோண்டிருந்தார். வெட்டிப் போட வேண்டும் என்று ஆத்திரம் ஏற்பட்டது.
“என்ன அவருக்கும் என் அப்பா வயசுதான் இருக்கும்” மௌனமாக பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் சரண்.
பைக் ஆடிட்டோரியம் நோக்கி விரைந்தது.
சரண் பாடும் போது அவன் குரலில் காதல் வழக்கத்தை விட சற்று அதிக சதவீதம் வழிவதாக இசையமைப்பாளர் சொன்னார்.
அதற்கு காரணம் என் கன்னத்து காயம் என்றான் சரண். குழம்பினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். புன்னகைத்துக் கொண்டான் சரண்.
தீப்தியின் அலுவலக காம்ப்பவுண்டுக்குள் பிற வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது. சரண் பைக்கிற்கு மட்டும் சிறப்பு சலுகை. காரணம் தீப்தி மட்டுமல்ல. அவள் முதலாளியும் சரணின் விசிறி.
அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் வந்துவிட்டாள் தீப்தி. சந்தன நிற சுடிதாரில் சந்தனச் சிலை போலவே இருந்தாள்.
அவள் பில்லியனில் தொற்றியதும், “எங்கே?” என்றான் சரண். “ஏதாவது ரெஸ்ட்டாரண்ட்?”
பைக் அந்த நவீன ரெஸ்ட்டாரண்ட் வாசலில் நின்றது. அங்கங்கே குடிசை குடிசையாய் போட்டிருந்தது.
குடிசைகளக் கொன்று கட்டிடம் கட்டிவிட்டு அதற்குள் குடிசையைப் போட்டிருந்தார்கள். விசித்திர உலகம்.
காலியாக இருந்த ஒரு குடிசைக்கு கீழே அமர்ந்தார்கள் சரணும் தீப்தியும். மேஜை மேல் ஏற்கனவே மெனு கார்டு வீற்றிருந்தது. எடுத்துப் புரட்டினாள் தீப்தி.
“என்ன ஆர்டர் பண்ணலாம்?” கேட்டான் சரண்.
“சம்திங் ஃபுல். ரொம்ப பசிக்குது எனக்கு” தீப்தி சொன்னாள். கேட்டதும் அவளை உற்றுப் பார்த்தான் சரண்.
தொய்வாகத் தெரிந்தாள்.
“எவ்வளவு பட்டினி இருந்தே? ஒரு வேளை? ஒரு நாள்?” தீப்தி பேசாமல் இருந்தாள்.
“வொய் தீப்தி? இப்டி சின்னச் சின்ன சிக்கலுக்கெல்லாம் சாப்பிடாம இருந்தா..” சரணை மேலே தொடரவிடவில்லை தீப்தி.
“நீ அடி வாங்கிக்கிட்டு இருக்கும்போது நான் எப்டிடா சாப்பிட முடியும்?” தீப்தியின் விழியோரங்கள் ஈரத்தை வாங்கிக்கொண்டன.
சரண் பதில் ஏதும் சொல்லும்முன், “யுவர் ஆர்டர் ப்ளீஸ்” வெயிட்டர் வந்தார்.
“ஒன் செஸ்வான் ப்ரைட் ரைஸ். மட்டர் பனீர். ஒன் ஆலு பராத்தா..” சரண் இன்னும் தொடர,
“போதும் சரண்”, தீப்தி சொன்னதைக் காதில் வாங்கவில்லை சரண்.
“ஆலூ டிக்கி, ப்ரென்ச் ப்ரைஸ், முதலில் ஒரு ப்ளேட் வெஜ் மோமோஸ்”.
வெயிட்டர் அகன்றதும், “என் பேரை சொல்லி நீ ஒரு வெட்டு வெட்டப் போற போல?” தீப்தி கிண்டலடித்தாள்.
அவளின் உற்சாக முகம் சரணுக்கு திருப்தியைத் தந்தது.
“ஸோ… வாட் நெக்ஸ்ட்?” சூப்பை பருகியபடி சரண் கேட்க,
“கல்யாணம்.”
“வ்வாட்?” பருகிய சூப் தொண்டையில் சிக்கியது சரணுக்கு.
“ம். நாம் கல்யாணம் பண்ணிக்கலாம். எவ்ளோ சீக்கிரமோ, அவ்ளோ சீக்கிரம். நாளைக்கு முகூர்த்த நாள்னா நாளைக்கே.”
“விளையாடாதே தீப்தி.”
“காதலிச்சாதானே கடத்தல்னு உன்னைக் கைது பண்ணாங்க? கல்யாணம் செஞ்சுக்கிட்டு நான் உன் மனைவின்னா? எந்த சட்டமும் ஒண்ணும் பண்ண முடியாதுல்ல?”
“ஆனா அதுக்காக இப்டி தடால்னு கல்யாணம்னா எப்டி தீப்தி?”
“பின்னே எப்டி?”
“நாம் இன்னும் கல்யாணத்துக்கு ரெடி இல்லைடா.”
“நாமளா? இல்லை நீயா?”
“ஓகே. ஓகே. நான்தான் ரெடி இல்லை. ஆனா..”
“எதுக்கு தயங்கறே சரண்? காரணத்தை சொல்லு.”
“இப்ப் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்கப்பா சொன்னது சரின்னு ஆகிடும்.”
“என்ன சொன்னார் எங்கப்பா?”
“என்னை வேலை வெட்டி இல்லாதவன்னு சொன்னார். பொண்டாட்டியை வச்சுக் காப்பாத்த வக்கில்லாதவன்னு சொன்னார்.”
“அவர் சொல்றதெல்லாம் ஒரு கணக்கா சரண்?”
“இல்லை தீப்தி. என் ம்யூஸிக் கேரியர் கொஞ்சம் ஸ்டடி ஆன பிறகுதான், நான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்க முடியும். அதுதான் சரியும் கூட.”
“ஏண்டா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடுறே?”
“இது என் சுய மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம் தீப்தி. இதுக்கு மேல என்னை ஃபோர்ஸ் பண்ணாதே. ப்ளீஸ்.”
சரண் பேசப்பேச தீப்தியின் முகம் இறுகியது.
“நீ ரொம செல்ஃபிஷ் சரண். உன்னைப் பத்தி மட்டும் யோசிக்கிறியே? என்னைப் பத்தி யோசிச்சியா?”
தீப்தி சினந்த அந்த நேரம், “சார் பில்”, வெயிட்டர் வந்தார்.
திடுமென எழுந்த தீப்தி அவன் காலரைப் பிடித்தாள்.
“வில் யூ மேரி மீ?” என்றாள்.
வெயிட்டர், “மேடம்?”, பதறிவிட்டான்.
“சீன் க்ரியேட் பண்ணாதே தீப்தி. காம் டவுன்.” சரண் சொல்லவும்,
“போடா நீயும் உன் ம்யூசிக்கும். நீ மைக்கை கட்டிக்கிட்டு அழு. நான் அதுக்குளே வேற சூப்பரான ஒருத்தனக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, கச்சேரி பண்ண உன்னைக் கூப்டுறேன் பார்..” தடதடவென்று வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டுப் புயலெனப் பறந்தாள் தீப்தி.
வெயிட்டர் நிலவரம் புரியாமல், “சார் பில்,” எனவும், “இப்ப இது ரொம்ப முக்கியமா? காண்ட் யூ வெயிட்?” சீறினான் சரண்.
“டோண்ட் க்ரியேட் சீன் சார். காம் டவுன்.”
வெயிட்டர் சொல்ல, “போய்யா நீயும் உன் காம் டவுனும் மண்ணாங்கட்டியும்.”
“பட் பில் சார்.”
தலையில் கையை வைத்துக்கொண்டான் சரண்.
“கொடு” என்றான் நிஜமாகவே காம் டவுன் ஆகி.
திங்கள் கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
One comment
Kalpana Sanyasi
தொடரை தொடர்ந்து வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!
நன்றி! நன்றி! நன்றி!
அன்புடன் – கல்பனா சன்யாசி