அத்தியாயம் – 14
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
விரும்பிய பெண்ணின் விலகலும் கோபமும் தற்காலிகம் என்றால் தப்பித்து விடுவான் ஆண். அது சீனச் சுவரைப் போல நீண்டது எனில் நிச்சயமாக தொலைந்தான் அவன்.
தொடர்ந்த நாட்களில் சரணின் எந்த குறுஞ்செய்திக்கும் பதிலில்லை தீப்தியிடமிருந்து. அலைபேசி அழைப்புகள் எடுக்கப்படவில்லை.
விடுதிக்குப் போனால் தீப்தியைப் பார்க்கவோ பேசவோ சரண் அனுமதிக்கப்படவில்லை.
அலுவலகம் போனால் அவளே இல்லை.
அலைபேசியை அலசி தீப்தியின் நண்பி ரேணுவுக்கு போன் செய்தான் சரண்.
“ரேணு.”
“சொல்லு சரண்.”
“தீப்தி எங்கே?”
“இந்த பூமியில்தான் இருக்கா. ஏன்?”
“கட் இட் ரேணு. ஐயாம் சீரியஸ். இப்ப தீப்தி எங்க இருக்கா?”
“ஆபிஸில் இருப்பா.”
“நான் ஆபீஸ் பார்க்கிங்கில் இருந்துதான் பேசுறேன். அவ இங்க இல்லை.”
“நான் தீப்தியைப் பார்த்து ரெண்டு நாள் ஆச்சு. நான் ஊரில் இல்லை. ஏன்?? உன் பக்கத்து வீடுதானே அவ? நீ அவளைப் பாக்கலையா?”
“அவ வீட்டை விட்டு ஹாஸ்டலுக்குப் போயிட்டா,”
“ஹாஸ்டலுக்கா? ஏன்?”
“உனக்கு விஷயமே தெரியலை. எல்லாம் சொல்ல எனக்கு நேரமமில்லை. தீப்தி என் மேல கோபமா இருக்கா. போனை எடுக்க மாட்டேங்கிறா.”
“ஓ. ப்ரேக் அப்பா? என்ன ஒரு நல்ல செய்தி.”
“பிரேக் அப்பும் இல்லை. பிரேக் டவுனும் இல்லை. தீப்தி கிட்டப் பேசியாகணும். நான்…”
”விட்டுட்டுப் போறவளை எதுக்கு விரட்டிக்கிட்டுப் போற சரண்? நான் இருக்கேனே உனக்கு?”
“கட் இட் ரேணு. தீப்தி எங்கன்னு தெரிஞ்சா சொல்லு. இல்லை போனை வை. “
“நான் என் வீட்டில் தனியாதான் இருக்கேன். ஆனா தீப்தி எங்கன்னு… ஹலோ சரண்? ஹலோ?”
பட்டென்று போனை அணைத்திருந்தான் சரண். சட்டென்று எழுந்த ஒரு ஆயாசத்துடன்.
தீப்தியின் அலுவலக பார்க்கிங்கில் பைக் சகிதம் நின்று கொண்டிருந்தவனுக்கு நிலை கொள்ளவில்லை. இந்த நகரத்துக்குள் எங்கே இருக்கிறாய் என் தீப்தி?”
“சார், நீங்க ரொம்ப நேரமா இங்கியே நின்னுகிட்டு இருக்கீங்க. தீப்தி மேடம் ஆபீஸில் இல்லை. சீனியர் ஆபீஸர்ஸ் உங்களைப் பாத்தா எனக்கு வேலை போயிடும்.” பழகிய வாட்ச்மேன் தயங்கியபடியே சொன்னான்.
சரண் தன் பைக்கை எடுத்துக்கொண்டு சாலையில் கலந்தான். நகரம் மாலையைத் தொட்டு இரவுக்கு தாவிக் கொண்டிருந்தது.
இங்கே, அங்கே என்று எதுவும் இலக்கில்லாமல் பயணித்துக் கொண்டிருந்தான் சரண்.
எப்போதும் செல்லும் ரெஸ்ட்ராண்ட்டில் சென்று அமர்ந்தான். ஒரு காபி ஆர்டர் செய்தான். தீப்தி இல்லாமல் அங்கே அவனால் ஒரு நிமிடம் கூட தனியாக இருக்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்துவிட்டான்.
காபியுடன் வந்த சர்வர் வெற்று மேஜையைப் பார்த்து தலையை சொறிந்துகொண்டான்.
பழக்க தோஷம் சரணின் பைக் கடற்கரைப் பக்கம் திரும்பியது.
அதே மணல்.
அதே அலை.
ஆனால் தீப்தி இல்லை. எனவே அதே மணல், அதே அலை இல்லை.
நகரத்து விளக்குகள் எரியத் தொடங்கி இருந்தன.
சரணின் பைக்கும் போக்குவரத்தில் கலந்து ஊர்ந்து கொண்டிருந்தது. அலைபேசி அழைத்தது அப்போது. தீப்தி.. தீப்தி… மனசு தள்ள, அலைபேசியை காதுக்குக் கொடுத்தான்.
“ஹலோ சரண்?” – அம்மா.
“சொல்லும்மா.”
நைட் டின்னருக்கு வீட்டுக்கு வருவியா? இல்லை தீப்தியோட எதுவும் டின்னர் பிளான் இருக்கா?”
“தீப்தியோட டின்னர் பிளான் எதுவும் இல்லைம்மா.” என்றான். தன் வருத்தத்தை மறைத்துக்கொண்டான்.
“சரி உனக்கு டின்னருக்கு என்ன செய்யட்டும்? சப்பாத்தி செய்யவா? இல்லை சாதம் வச்சிடட்டுமா?”
“ஏதாவது செய்மா. உன் இஷ்டம்”
“என் இஷ்டத்துக்கு செய்யவா நான் உனக்கு போன் பண்றேன்?”
“சரி, சப்பாத்தி செஞ்சுடுங்க.”
“நீ டிராபிக்ல இருக்கியா? ஹாரன் சத்தம் கேக்குது. பைக்கை நிறுத்திட்டுதானே பேசுறே?” அம்மாவிடம் அதிகம் பொய் சொல்ல மனசின்றி பைக்கை உடனே ஓரங்கட்டினான் சரண்.
“ஆமாம்மா. பார்க் பண்ணிட்டேன்.”
“ஓகே. குட் பாய். சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு.”
ஆயாசத்துடன் அலைபேசியை அணைத்தான் சரண். அது மறுபடியும் சிணுங்கியது. “சரண்?” ரேணுதான் அழைத்திருந்தாள்.
“இப்ப நீ எங்க இருக்கே?”
“நடுத்தெருவில்” மனசு நினைக்க, “மவுண்ட் றோடில். ஜெமினி ஃப்ளை ஓவர்கிட்ட” உதடுகள் ரேணுவுக்கு பதில் அளித்தன. “தீப்தி அங்க பிக் வெர்ல்டு மால்ல இருக்கா. ஷாப்பிங்க் செஞ்சுகிட்டு.”
“தங்க்யூ. தாங்க்யு ரேணு”.
நின்றுகொண்டிருந்த பைக் உயிர் பெற்றது. மின்னல் வேகத்தில் பிக் வெர்ல்டு ஷாப்பிங் மாலை அடைந்தது.
“எந்தக் கடையில் என்ன வாங்கிக் கொண்டிருக்கிறாய் தீப்தி?”
சரணின் கண்கள் சல்லடை ஆகின. வளாகம் முழுக்க நிறைந்திருந்த மக்களின் முகங்களை அலசின.
அவன் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருந்த தீப்தியின் முகம் சிக்கிடவில்லை. அவன் பார்வையில்.
“எப்படி கண்டுபிடிப்பேன்? “
யோசித்தபடியே தீப்தியின் எண்களை அலைபேசியில் ஒற்றினான்.
அவளின் “பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது” ரிங் டோனை எதிர்பார்த்து காதுகளை கூர்மையாக்கினான்.
வேறு ஒரு ஓசை கேட்க திரும்பியவனை தீப்தியின் உருவம் எதிர்கொண்டது.
தீப்தியின் அலைபேசிதான் சரணின் அழைப்பை ஒலித்துக் கொண்டிருந்தது. அவளோ அதை எடுக்காமல் அதன் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சரண் அழைப்பை நிறுத்தினான். தன் அலைபேசியை சில நொடிகள் வெறித்த தீப்தி, பிறகு அதை தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் முடக்கினாள்.
நிமிர்ந்தவள் முன்னால் நேரே போய் நின்றான் சரண். அவனை அந்நேரம் அங்கே எதிர்பார்த்திராததால் தீப்தி சற்று தடுமாறினாள் என்றே சொல்ல வேண்டும்.
சுதாரித்துக் கொண்டவள், “என்னை வேவு பாக்கிறியா?” என்றாள்.
“ரிங் டோனை ஏன் மாத்துனே?” என்றான் சரண் கோபமாக.
“என் இஷ்டம்” என்றாள் அவளும் காட்டமாக.
“என் பாட்டை ஏன் மாத்தினே?” என்றான் சரண் குறையாத கோபத்துடன்.
“உன்னையே மாத்திட்டேன்.”
“வ்வாட்?”
“நீ உன் பாட்டுக்கு வெற்றி தேடிக்கிட்டுப் போ. நான் பாட்டுக்கு வேற ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போறேன்.”
“விளையாடாதே தீப்தி. என்னை நீ ரொம்ப கோபப்படுத்துறே?”
“யாரு? நான்? உன்னை? நல்லா கவனி சரண். நீதான் என்னை கோபப்டுத்துறே, காயப்படுத்துறே, கவலைப்படுத்துறே எல்லாம்.”
“ஓகே. அப்டியே இருக்கட்டும். அதுக்காக. என் என் பாட்டை மாத்துவியா நீ?” அவன் சினக் குரலை பாதியில் நிறுத்தியது அவன் தோளின் மேல் விழுந்த கைகள்.

செல்வா!
“ஹலோ சரண்.”
“நீங்க எங்கே இங்கே?”
“நான் தீப்தியோட ஷாப்பிங் வந்தேன். நீங்க எப்டி இங்கே?”
“அதை நான் கேக்கணும் உங்களை.”
சட்டென தீப்தியின் கைகளைப் பிடித்தான் சரண். அவளை செல்வாவிடமிருந்து சற்று தள்ளி இழுத்தான்.
“இந்த மொட்டைத் தலை தடியனோட ஷாப்பிங் வந்தியா நீ? இஸ் இட் ட்ரூ?” அடிக்குரலில் அதட்டினான்.
“பாத்துப் பேசு சரண். செல்வா என் கொலீக்.” சொன்ன தீப்தி.
“இப்ப என் பாய் ப்ரெண்ட்!” சேர்த்து சொன்னான்.
“இது அந்த மொட்டைத் தலை தடியனுக்குத் தெரியுமா?”
“அது உனக்குத் தேவையில்லாத விஷயம். இப்ப நான் என் ஷாப்பிங்கை கண்ட்னியூ பண்ணணும். நீ கிளம்பு.” அதற்குள் செல்வா அவர்களை நெருங்கினான்.
“எனி ப்ராப்ளம்?” என்றான் பொத்தாம் பொதுவாக பார்வை இருவரையும் அலசியது.
“நானும் உங்க ஷாப்பிங்கில் கலந்தக்கிறேன்னு தீப்திகிட்டே சொல்லிக்கிட்ருந்தான்.” என்றான் சரண், “இல்லியா தீப்தி?” என்று ஒரு செயற்கைப் புன்னகையுடன்.
தீப்தி சளைத்தவள் இல்லை,
“ஏதோ அவசர வேலைன்னு சொன்னே?” என்றாள்.
“உன்னை விட வேற என்ன வேலை எனக்கு முக்கியம் தீப்தி?” அதே செயற்கைப் புன்னகை. அளவு இந்த முறை கொஞ்சம் அதிகம்.
“ஷாப்பிங் டன். கிளம்பலாம்” என்றாள் தீப்தி.
“இன்னும் நீ சொன்ன லிஸ்ட்டில் பாதி கூட வாங்கலை தீப்தி.” சொல்லிய செல்வாவிடம் மிகுந்த சிரத்தை.
“அப்புறம் பாத்துக்கலாம்.” அறிவித்த தீப்தி, “ஓகே சரண். பை” என்றுவிட்டாள்.
முறைத்தான் சரண். “சீ யூ சரண்” சொன்ன செல்வாவை உள்ளுக்குள் வெறுத்தான். வெறுத்தவன் செல்வாவும், தீப்தியும் இருவருமாக அகலுவதைப் பார்த்து புகைந்தான். பொசுங்கினான்.
பின்னும் தொடர்ந்தான். அன்றைய தினம் போலவே!
செல்வா – தீப்தி சென்ற காரின் பின்னால் சரணின் பைக்.
கார் தீப்தியின் விடுதிக்கான சாலையில் திரும்பியது. சரண் பைக்கும் அப்படியே.
காரில் இருந்து இறங்கிய தீப்தி. செல்வாவை வாகாக அணைத்தபடி, கைகளை அதிகம் குலுக்கியபடி, அவன் தோளை அதிகமோ அதிகம் தட்டியபடி, அவனுக்கு “பை” சொன்னாள்.
சற்று தொலைவில் மரத்தடியில் சரண் தன்னைக் கவனிப்பதை அவள் உணர்ந்தே இருந்தாள். இதை சரணும் அறிந்தே இருந்தான். அவனின் கோபம் அளவுகளைக் கடந்தது.
செல்வாவின் கார் கிளம்பியது,
தீப்தி விடுதிக்குள் நுழைந்துவிட்டாள்.
தன் கோபங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை சரணுக்கு. விடுதியின் கதவுகளை உடைத்துவிடலாம்தான். தீப்தியிடம் சட்டென்று முளைத்திருக்கும் கதவுகளை?
செல்வாவின் முகத்தை நொறுக்கி விடலாம்தான். தீப்தி இப்போழுது அறிமுகப்படுத்தியிருக்கும் அலட்சியத்தை?
கேள்விகள் வண்டுகளாக இதயத்தை குடைய, நிம்மதி என்ற விஷயம் சரணை விட்டு விலகி ஓடிப் போனது.
வெள்ளிக்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
One comment
Kalpana Sanyasi
தொடரை தொடர்ந்து வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான நன்றிகள்! அன்புடன் – கல்பனா சன்யாசி