அத்தியாயம் – 15
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
காலே இல்லாதவரைப் பார்த்ததும்தான் காலணி இல்லாதது குறையாகத் தெரியாது என்கிற விஷயம் அனைவரும் அறிந்ததே. சரணின் கதையும் அப்படித்தான் ஆகிப் போனது.
தீப்தி கோபத்துடன் தன்னுடன் பேசாமலிருப்பது சரணுக்கு துன்பத்தை தந்ததென்றால் அன்றைக்கு தீப்தி குறித்து அவன் அறிய நேர்ந்த அடுத்த விஷயம் அவனுக்கு பெருந்துயரமாக முடிந்தது.
விழித்ததும் அலைபேசி முகத்தில் விழிக்கிறவன் அன்றைக்கு அவன் மொபைலை பார்த்தானோ இல்லையோ எழுந்தவன் திரும்பவும் படுக்கையிலேயே சரிந்தான்.
தீப்தியுடன் தொடர்புக்கு வழி செய்யாத அலைபேசி இருந்தென்ன? இல்லாவிட்டால்தான் என்ன?
இந்த தீப்திக்கு என்னதான் ஆச்சு? ஆனாலும் அந்த செல்வாவுடன் அவள் சிரித்து சிரித்துப் பேசியதை நினைக்க நினைக்க சரணுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
இதை இப்படியே விடக் கூடாது. என்ன செய்யலாம்?
விடுதிக்குப் போவது வெட்டி வேலை. அவளைப் பார்க்கவே விட மாட்டார்கள்.
அலுவலகத்துக்குப் போனாலும் அதே கதைதான். அவளின் பணி நேரம் முடியும் வரை காத்திருக்க வேண்டும்! அப்படியே ஆனாலும் கூடவே அந்த தடியன் செல்வா தீப்தியை ஒட்டிக் கொண்டிருப்பான்.
தீப்தியை சந்திக்க என்ன வழி இருக்கிறது?
சரணுக்கு என்ன செய்யலாம் என்று வழி எதுவும் தோன்றவில்லை.
சலிப்புடன் எழுந்திருக்க மனமின்றி படுக்கையிலேயே கிடந்தான்.
அப்படியே கிடந்தவனை அப்படியே கிடக்க விடவில்லை அவன் அலைபேசி.
ரீங்கரித்து அவனை எடுக்க சொன்னது.
அம்மா. கீழேயிருந்து மாடியில் இருந்த அவனை அழைத்துக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா?” என்றான் சரண் சற்று அலுப்புடன்.
“பிரேக்பாஸ்ட் ரெடி. அப்பாவும் ரெடி. சாப்பிட வரலியா?”
“எனக்கு வேண்டாம்மா. அப்பாவை எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட சொல்லு.”
“ஏண்டா? ராத்திரியும் நீ சாப்பிடலை.”
“பசியில்லைம்மா.”
“வயிறு சரியில்லையா?”
“ஆ…ஆ… ஆம்மாம்மா.”
“எதாருந்தாலும் கீழே வா. கஷாயம் தரேன். குடிச்சிக்கிட்டே அப்பாவுக்கு கம்பெனி கொடு.”
“இல்லம்மா. ஐயாம் டயர்டு.”
“என்னங்க, சரண் கீழே வரலியாம். உங்களை சாப்பிட சொல்றான்.”
“அப்ப எனக்கும் வேணாம் சங்கரி. சரண் எப்போ சாபிடறானோ நானும் அப்பவே அவன் கூடவே சாப்பிட்டுக்கிறேன். தனியா சாப்பிடப் பிடிக்கலை.”
“சரண்… லைன்ல இருக்கியா? அப்பா சொன்னது காதுல விழுதா?”
நன்றாகவே சரண் காதுகளில் விழுந்தன அப்பா சொன்னது.
போர்வையை உதறிக் கட்டிலை விட்டு எழுந்தான்.
“அஞ்சு நிமிஷத்துல சாப்பிட வர்றேன். அப்பாகிட்ட சொல்லு.”
குளியலறைக்குள் நுழைந்தான். முகத்தில் வழிந்த தண்ணீரோடு தீப்தியின் ஞாபகமும் நிறைந்து வழிந்தது.
கிடைத்த டி ஷர்ட்டை மாட்டிக்கொண்டு தடதடவென்று படிகளில் இறங்கினான்.
“ஸாரி டாட். உங்களை வெயிட் பண்ண வச்சிட்டேன்.”
டைனிங் டேபிளில் அப்பாவுக்கு அருகாமை நாற்காலியில் அமர்ந்தான்.

உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை அம்மா, அப்பாவிடம் காட்டிக் கொள்ளாமல், “வாவ், பூரி உருளைக்கிழங்கா? குறைஞ்சது பத்து பூரியாவது சாப்பிடப் போறேன். அப்பா உங்களுக்கு?” என்று பூரிகளை அப்பாவின் தட்டில் அடுக்கினான்.
“எனக்கு வயாசிடுச்சிடா சரண். நீதான் நிறைய சாப்பிடணும்.” தன் தட்டில் சரண் அடுக்கிய பூரிகளை மீண்டும் சரண் தட்டிலேயே எடுத்து வைத்தார் அப்பா.
“அம்மா, என்னதான் சொல்லு. உன் சமையல் பக்கத்துல 5 ஸ்டார் ஹோட்டல் செஃப் கூட நிக்க முடியாது.”
தன் பாராட்டு கொஞ்சம் ஓவரோ. படு செயற்கையாகத் தெரிகிறதோ? அம்மா, அப்பா தன் கவலை உணர்வுகளை கண்டுபிடித்து விடுவார்களோ?
“இன்னும் கொஞ்சம் கிழங்கு வச்சிக்க” சரணுக்குப் பரிமாறிய அம்மாவும், பேசாமல் பூரியைக் கொறித்துக் கொண்டிருந்த அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சொன்னானே ஒழிய சரண் அதிகம் சாப்பிடாமல், பேருக்கு சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டான்.
“சரண், உடனே மாடிக்கு போயிடாதே. உங்கிட்டப் பேசணும்”, கைக்கழுவிக்கொண்டே சொன்னார் அப்பா.
ஹாலில் அப்பாவும் சரணும் மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.
“காபி”, என்று வந்தாள் அம்மா.
காபி கோப்பையை கையில் எடுத்த சரண், பருகாமல் கோப்பையை வெறித்தான்.
அது தீப்தி அவனுக்குப் பரிசாக கொடுத்தது.
“என்னடா சரண் நடக்குது?” என்றார் அப்பா சடாரென்று.
“நத்திங்ப்பா. ஒண்ணுமில்லை.” இயல்பாக பதிலளிக்க சரண் ரொம்பவே சிரமப்பட்டான்.
“ஒண்ணுமில்லாமதான் நாலு நாளா சரியா சாப்பிடாம, சரியா தூங்காம எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கியா?”
சரண் அமைதி காத்தான்.
“தீப்தி எப்டி இருக்கா?” அப்பா கேட்டதும், அதற்கும் பதில் பேசாமல் சரணிடம் மௌனமே நிலவியது.
“தீப்தியால பிரச்சனையா? இல்லை, தீப்தியே ப்ரச்சனையா?” அப்பாவின் அடுத்தக் கேள்வி அவன் நெஞ்சை ஊடுருவிய அம்புதான்.
சந்தேகமே இல்லை சரணுக்கு.
“தீப்தி என் மேல கோபமா இருக்கா” அறிவித்தான்.
“பேசிப் பாத்தியா?”
“போனையே எடுக்க மாட்டேங்கிறா”
“நேர்ல மீட் பண்ணி டிஸ்கஸ் பண்ண வேண்டியதுதானே?”
“ட்ரை பண்ணேன். அவ வாய்ப்பே கொடுக்கலை.”
“ஓகே. நான் தீப்திக்கு கால் பண்ணி பாக்கிறேன்.”
அப்பா தன் அலைபேசியிலிருந்து தீப்தியை அழைத்தார்.
அவரே எதிர்பார்க்கவில்லை. தீப்தி தன்னை இப்படி அவமானப்படுத்துவாள் என்று.
அப்பாவின் அழைப்பே அவள் எடுக்கவே இல்லை.
இரண்டு மூன்று தடவைகள் முயற்சி செய்து பார்த்த அப்பா, “நீ ட்ரை பண்ணிப் பாரு” என்றார் சங்கரியிடம்.
சங்கரிக்கும் அதே மரியாதைதான் கிட்டியது. அவளது அலைபேசி அழைப்பும் தீப்தியால் எடுக்கப்படவில்லை.
சரணுக்கு மட்டுமல்லாமல் அவன் அப்பா, அம்மா முகங்களும் இருண்டன இப்போது.
“ஐ லாஸ்ட் ஹர் டாடி” குரல் கரகரத்தது சரணுக்கு.
அழுதுவிடுவோமோ எனத் தோன்றவே, சட்டென்று அங்கிருந்து எழுந்து மாடிக்கு வந்துவிட்டான்.
சரணை என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியாமல் அப்பாவும், அம்மாவும் திகைத்தனர். திணறினர்.
திங்கள்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.