வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
——————————————————————————————
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2 அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4 அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8 அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10 அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14 அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16 அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19 அத்தியாயம் – 20 அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22 அத்தியாயம் – 23 அத்தியாயம் – 24
அத்தியாயம் – 25 அத்தியாயம் – 26 அத்தியாயம் – 27
——————————————————————————————
அப்பாஸியா எழுச்சி
மூன்றாம் கலீஃபா உஸ்மான் ரலி அவர்கள் ஆட்சியின் போது புரட்சியாளர்கள் அதிகம் பேர் மதினாவிலே புகுந்திருந்தார்கள். அவர்களில் இரண்டு குழு இருந்தது ஒன்று ஆட்சிக்கு எதிராக கடும் போக்கை கையாள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள். இவர்களை காரிஜியாக்கள் என்று அழைப்பார்கள்.
இன்னொரு குழு “நபிகளாருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி நடத்த வேண்டும்” என்ற கொள்கை உடையவர்கள். பிற்காலத்தில் இவர்கள் ஷியா என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அலி ரலி அவர்களை முன்னிலை படுத்தியே புரட்சிகளையும், உஸ்மான் ரலி அவர்களையும் கொலை செய்திருந்தார்கள். பிறகு காரிஜியாக்களால் அலி ரலி அவர்களும் கொலை செய்யப்பட்டார்கள். இவர்களை நம்பி பயணம் மேற்கொண்டிருந்த ஹுசைன் ரலி அவர்களும் கொல்லப்பட்டார்கள்.
இந்த இரண்டு குழுக்களும் திடீரென்று கிளம்புவதும் பிறகு ஆட்சியாளர்களால் அடக்கப்படுவதும் என்று உமையாக்கள் ஆட்சியில் இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் ரலி அவர்களின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த முகமது என்பவரை முன்னிலைப்படுத்தி மீண்டும் புரட்சி வெடிக்கிறது. ஷியாக்களும் காரிஜியாக்களும் முன்னின்று புரட்சியை எடுத்துச் செல்கிறார்கள்.
உமையாக்களின் கடைசி காலகட்டங்களில் அதாவது கிபி 745திற்குப் பிறகு தான் குராசான் அதாவது இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து புரட்சி வெடிக்கிறது. அது மல மலவென்று உமையாக்களே எதிர்பார்க்காத அளவிற்கு பரவுகிறது. காரணம் மீண்டும் நபிகளாரின் குடும்பத்தார்கள் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் என்ற செய்தி தான்.
இப்படி ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி இறுதியாக தலைநகர் தமாஸ்கஸும் இவர்களின் கைகளுக்குள் வந்துவிடுகிறது. இப்படி ஒட்டுமொத்த உமையாக்கலிபகமும் வீழ்ந்து விட்டதால். ஸ்பெயினை நோக்கிச் சென்ற படைகள் திரும்பி விட்டன.
ஸ்பெயினுக்குள் இருந்த ஆளுநர் ‘படைகளின் வரவுக்கு பதிலாக உமையாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது’ என்பதை அறிந்து கொண்டு ஐரோப்பாவிற்குள் செல்லும் முடிவை கைவிட்டு மிக நீண்ட காலம் அவர்கள் ஸ்பெயினிலேயே ஆட்சியைத் தொடர்ந்து கொண்டார்கள்.
ஸ்பெயினினிலிருந்து கைக்கு எட்டும் தூரத்தில் தான் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளின் தலைமையகம் இருந்தது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக இருந்த சின்ன சின்ன நாடுகள் அனைத்துமே அந்த வட்டத்திற்குள் தான் இருந்தது. படை வந்ததும் அவற்றை கைப்பற்றுவோம் என்று நினைத்தவர்களுக்கு படை வந்து சேரவில்லை.
இஸ்லாமியர்கள் ஆட்சி நடத்திய நாடுகள் இன்று வரை தங்களுக்குள் கொள்கை ரீதியாக சண்டை போட்டுக் கொண்டார்களேத் தவிர இன்னொரு நாட்டை பிடித்து அடிமை ஆக்கவில்லை. ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளை அரேபியர்கள் கைப்பற்றி இருந்தால் இவர்களுக்கும் பிற நாட்டைப் பிடித்து அடிமையாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்காது.
இந்த நான்கு நாடுகளும் இவற்றை சுற்றி இருந்த சிற்றரசுகளாலும் தான் உலகின் பல நாடுகள் அவதிப்பட்டன மேலும், எண்ணிலடங்கா பல கோடி மக்களை கொன்று குவித்த முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களும் இவர்களாலேயே நடந்தது.
******
கிபி 750ல் அப்பாஸ் ரலி அவர்களின் வாரிசுகள் ஆட்சியை துவங்கியதால் இவர்களை அப்பாஸிய கலீஃபாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் இவர்களின் ஆட்சி இருந்தது.
உமையாக்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களது தலைநகரை பாக்தாதுக்கு மாற்றிக் கொண்டார்கள். உமையாக்களின் வீழ்ச்சி என்பதை விட அரேபியர்களின் வீழ்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு பாரசீகமும் பாரசீகத்தின் வலது புறம் உள்ள நாடுகளும் தான் எழுச்சி பெற்றது.
மிக நீண்ட காலம் அப்பாஸியாக்கள் ஆட்சி இருந்தாலும் தங்களுடைய பகுதிகளை பாதுகாத்து கொள்வதே மிக சிரமமான காரியமாக அவர்களுக்கு இருந்தது. ஆளுநர்கள் கலீபாக்களுக்கு கட்டுப்படாமல் தனித்தனியாக ஆட்சி நடத்த துவங்கி விட்டார்கள்.
அவர்களுள் சில கலிஃபாக்கள் மிகச் சிறப்பான ஆட்சியையும் பல கலீபாக்கள் ஆட்சிக்கு தகுதி இல்லாமலும் தான் இருந்தார்கள். ஆகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய சிறிய நாடுகளாக தங்கள் ஆட்சி பகுதியாக அறிவித்துக் கொண்டார்கள். இந்த ஆட்சியில் பெரும்பாலும் அரேபியர்கள் இல்லாததினாலும் மாற்று கொள்கை உடையவர்கள் அதிகம் தோன்றியதாலும் பல பிரிவுகள் உண்டாயின.
அப்பாசியாக்களின் ஆட்சியில் அதிகம் கோலாச்சியது ஷியாக்களே. நிறைய பிரிவுகள் தோன்றி மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இதன் காரணத்தால் தான் குர்ஆன் மற்றும் நபிகளாரின் போதனைகளை அப்படியே பின்பற்றிய மக்களுக்கு ‘சுன்னத்துவல் ஜமாத்’ ( சன்னி) என்று அபுல் ஹசன் அஷ்அரி என்ற மார்க்க அறிஞர் பெயர் சூட்டினார்.
அப்பாஸியாக்களின் ஆட்சியில் இமாம் அபுஹனீஃபா என்ற மார்க்க அறிஞரின் தலைமையில் தான் பாக்தாத் உருவாக்கப்பட்டது. அவர்களைப் பின்பற்றிய மக்களை ஹனபியா என்று அழைக்கப்படுகிறார்கள். ஹனபி மற்றும் ஷியாக்கள் ஆட்சியில் அமர்ந்திருந்ததால் உலகம் முழுவதும் அதிகம் பரவி இருந்தார்கள். ஷியாக்கள் நபிகளாருடை அனைத்து போதனைகளுக்கும் மாற்றமாக தங்கள் கொள்கையை அமைத்துக் கொண்டார்கள். கலீஃபாக்களை ஏற்றுக்கொள்ளாமல் நபிகளார் குடும்பம் என்ற பெயரில் புதுக் கொள்கையை உருவாக்கிக் கொண்டார்கள்.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
திங்கள் கிழமை தொடரும்.
Add comment
You must be logged in to post a comment.