அத்தியாயம் – 30 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர்

திப்பு ரஹிம்

அரேபியர்களின் கல்வி, கலாச்சாரம், விருந்தோம்பல், இவற்றையெல்லாம் கவனித்த செங்கிஸ்கானின் கூட்டங்கள் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ளத் துவங்கியது. செங்கிஸ்கானின் பேரப்பிள்ளைகள் தாங்கள் பிடித்த அந்தந்த பகுதிகளுக்கு அரசர்களாக இருந்தார்கள்.

இப்படி இருந்த சிற்றரசர்களில் சிலர் இஸ்லாத்தை தழுவினார்கள். அதை தொடர்ந்து ஆங்காங்கே இருந்த சிற்றரசர்களும் இஸ்லாத்தை தழுவ தொடங்கினர். மல மலவென்று துவங்கிய இந்த தழுவல் மலேசியா இந்தோனேஷியா வரை சென்றது.

இப்போது இஸ்லாம் மிகப்பெரிய பகுதியை ஆட்சி செய்தது. தாங்கள் செய்த கொடுமைகளுக்கு பரிகாரமாக மீண்டும் ஆங்காங்கே பள்ளிவாசல்களையும் நூலகங்களையும் உருவாக்கினார்கள்.

இப்படி சிற்றரசர்களாக ஆங்காங்கே அரசை அமைத்தவர்களில் முக்கியமான ஒருவர் தான் உஸ்மான் அல் துர்க் என்பவர். துற்கு இனத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போதைய துருக்கியில் 1299ல் ஒரு நாட்டை அமைத்து சிறப்பான மன்னராக விளங்கினார்.

இவருக்குப் பிறகு வந்தவர்கள் தலைமையை மாற்றி மாற்றி கடைசியாக 1453ல் இன்றைய துருக்கியின் தலைநகராக இருக்கக்கூடிய இஸ்தான்புல்லை தலைமையாகக் கொண்டு முதலாவது மன்னர் உஸ்மானின் பெயரைக் கொண்டு கிலாபத்தை அறிவித்தார் அன்றைய மன்னர் முஹம்மது இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் முதலில் மன்னராக பிறகு கலீஃபாவாக இருந்தார்.

அதாவது கிபி 1258ல் கடைசி அப்பாஸ்ய கலிஃபா கொல்லப்பட்டது முதல் புதிய கலீஃபா யாரும் இல்லை. செங்கிஸ்கானின் எழுச்சி அவருடைய மகன் பேரப்பிள்ளைகளின் ஆட்சி என்று கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அரபு உலகம் சொல்ல முடியாத துயரில் இருந்தது.

அவர்கள் அனைவரும் இஸ்லாத்துக்கு மாறிய பிறகு சிற்றரசர்களாக ஆட்சி நடத்தினார்கள். இடைப்பட்ட இந்த காலங்களில் கிலாபத் இல்லாமல் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிலாபத்தை அறிவித்த பிறகு சிற்றரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக கலிஃபாவின் ஆட்சிக்கு கீழ் இணைந்தனர்.

உஸ்மானிய கலீஃபா (ஒட்டோமான் கிலாஃபா) மிக நீண்ட காலம் அதாவது இரண்டாம் உலகப் போர் வரை நீடித்தது. முதலில் ஆட்சியை உருவாக்கிய உஸ்மான் என்பவரின் பெயரிலேயே இந்த ஆட்சி உஸ்மானிய பேரரசு என்று அழைக்கப்பட்டது.

நபிகளாருக்கு பிறகு முதலில் அரேபியர்கள் கையில் கிலாபத் இருந்தது. அவர்களின் தோல்விக்குப் பிறகு எப்போதும் போல் அவர்கள் வாணிபம் செய்யக் கூடியவர்களாக உலகம் முழுவதும் சென்று வந்தார்கள்.

இவர்களுக்கு அடுத்ததாக வந்த அப்பாஸியாக்கள் எனும் பாரசீகர்கள் மிக நீண்ட காலம் ஆட்சியை மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் நடத்தி வந்தார்கள்.

அவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இடைப்பட்ட மங்கோலியர்களின் காலத்தில் உலகம் கலக்கத்தோடு இருந்தது. ஒவ்வொரு நாடும் இந்தியா உள்பட செங்கிஸ்கானோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது தங்களை ‘தாக்க கூடாது’ என்று.

மூன்றாவதாக உஸ்மானிய கிலாபத் உருவானது. இப்போது அரேபியர்களும் அல்லாத பாரசீகர்களும் அல்லாத மூன்றாவது இனமாக இருந்த துர்க், மங்கோல், உஸ்பெக், இனங்களை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் இஸ்லாமிய கிலாபத்தை நடத்த துவங்கினார்கள். துற்கு மங்கோல்கள் திருமண உறவுகள் மூலம் மூன்றாவதாக தைமூர் வம்சம் தோன்றியது.

முன்னிருந்த இரண்டு கிலாபத்துகளும் கொள்கைக்காக இருந்தது. மூன்றாவதாக வந்த கிலாபத் ஆட்சியை முன்னிலைப்படுத்தி நடந்தது. ஆகவே ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டும் கொண்டார்கள்.

உஸ்மானிய கிலாபத்திலும் நிறைய கொள்கை குழப்பங்கள் அதிகமாகவே இருந்தது. அவர்களும் இரண்டாம் உலக போரின் போது ஜெர்மனியுடன் கூட்டணி வைத்து தோற்றுப் போன பிறகு நாடுகள் உடைந்தது. அரபு நாடுகள் தங்கள் பகுதிகளை தனித்தனி நாடுகளாக அறிவித்துக் கொண்டார்கள். பிறகு கிலாபத் இல்லாமல் உஸ்மானிய பேரரசு துருக்கி என்ற நாட்டோடு சுருங்கி போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *