தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 20

கல்பனா சன்னாசி

அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3 அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5 அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7 அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9 அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11 அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13 அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15 அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17 அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19

டித்துப் பிடித்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தான் சரண். எக்கச்சக்க தாமதம். எப்போதும் போல.

ப்ரொபஸர் வரதராஜன் இண்ட்டகிரல் கால்குலஸை சுலபமாக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அவருக்குத் தெரியாமல் வகுப்பிற்குள் நுழைய முயன்ற சரணைக் கவனித்துவிட்டார் அவர்.

“ஏன் லேட்?”

“பஸ் கிடைக்கலை சார்.”

“நீ பைக்ல இல்ல வருவே?”

“அ அது பெட்ரோல் கிடைக்கலை சார்.”

“வாட் எ நாடு! மாணவர்களுக்கு பெட்ரோல் கிடைக்கலை. ஆசிரியர்களுக்கு அவார்ட் கிடைக்கலை. ம்.. ம்.. கெட் இன். கெட் இன்.”

வரதராஜன் புலம்ப, “வாழ்க நாடு” என்று உள்ளே நுழைந்தான் சரண்.

அவன் வழக்கமாக அமரும் கடைசி பெஞ்ச்சை கண்கள் தேட, யாரது தன் பெஞ்சில் தன் இடத்தில் தன் நண்பன் பப்லுவின் பக்கத்தில்?

தீப்தி. அடுத்த வீட்டு அழகுப் பெண்.

பார்த்ததும் மலர்ச்சியானான். ஆனந்த மலர்ச்சி.

ஆனால் நொடியிலேயே சந்தோஷம் சங்கடமாக நிறம் மாறியது.

தன் ஆஸ்தான இடத்தில் இவள் அமர்ந்துவிட்டாள். இப்போது நான் எங்கே அமர்வது?

கண்களாலேயே பப்லுவை, “ஏன் என்னிடத்தை விட்டுக் கொடுத்தாய்?” என்பது போல கேள்வி கேட்டான் சரண்.

பப்லுவும் பதிலுக்கு, “நான் என்ன செய்ய?” என்பது போல தோளை குலுக்கினான்.

நின்றுகொண்டே தடுமாறிய சரணை, “வாட் சரண்? வொய் ஆர் யூ ஸ்டாண்டிங்க்? வரதராஜன் அதட்டினார்.

“பெஞ்ச் கிடைக்கலை”, சரண் விளக்க நேர்ந்தது.

“எப்பவும் கடைசி பெஞ்சிலதான் உட்காரணுமா? கம் டு தி ப்ரன்ட் பெஞ்ச்” வரதராஜன், முன் வரிசையைக் கை காட்ட,

சரண் தீப்தியை பார்த்து ஒரு பார்வையை வீசிவிட்டு முன்னால் வந்து அமர்ந்தான். சற்று கடுப்போடு.

கால்குலஸ் பிரசங்கம் முடிந்து வரதராஜன் போனாரோ இல்லையோ, சரண் கடைசி பெஞ்சுக்கு விரைந்தான்.

“எந்திரி” என்றான் தீப்தியைப் பார்த்து.

அவளோ “நான், என் அப்பா, காலையில்…” ஏதோ சமாதானமாக, சாந்தமாக பேச முற்பட, வாய்ப்பே கொடுக்கவில்லை சரண்.

“குடி வந்ததும் வராததுமா உன் அப்பா என்னடான்னா எங்க வீட்டு மரத்தை வெட்ட சொல்றார், காலேஜ் வந்ததும் வராததுமா நீ என்னடான்னா என் இடத்தை, என் கடைசி பெஞ்ச்சை களவாடுறே?”

“இல்லை… நான்… ஸாரி…”

“ஸாரியாவது, சல்வாராவது, நீ முதல்ல என் இடத்தை விட்டு எந்திரி. எந்திரி. எந்திரி.” சரண் விரட்டினான்.

“எந்திரி அஞ்சலி. எந்திரி அஞ்சலி..” மொத்த வகுப்பும் சேர்ந்துகொண்டு கிண்டலடித்தது,

“நான் அஞ்சலி இல்லை. தீப்தி.”

“எந்திரி தீப்தி. எந்திரி தீப்தி” கிண்டல் தொடர்ந்தது.

வேறு வழியின்றி எழுந்த தீப்தி, சரண நோக்கி ஒரு கோபப் பார்வையை வீசிவிட்டு வகுப்பின் முன் பக்கம் விரைந்தாள்.

ஒரு மூக்கு கண்ணாடி அணிந்த ஒல்லிப் பெண் அருகே இடம் இருக்க அங்கே சென்று அமர்ந்தாள்.

“ஐயாம் ஆஷா. வெல்கம் டு தி கிளாஸ் தீப்தி” ஒல்லிப் பெண் கையை நீட்டி தீப்தியை வரவேற்றாள்.

“சரண் சிம்மாசனம் அந்த கடைசி பெஞ்ச். யாருக்கும் விட்டுத் தரமாட்டான்” என்றாள் அவள், தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டே!

அடுத்த நாள் கல்லூரிக்கு கிளம்பில் கொண்டிருந்த சரணின் பைக் எதிர்கொள்ள வேண்டியிருந்தது, அதே நேரம், அதே கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த அடுத்த வீட்டு தீப்தியின் பிங்க் நிற ஸ்கூட்டியை!

“நேத்து என் சீட்ல ப்ரச்சனை பண்ணே. இப்போ ரோட்ல ப்ரச்சனை பண்றே?” தீப்தியை நோக்கி விரலை உயர்த்தினான் சரண்.

“ஆமா, காலையில கண் முழிக்கும் போதே, “அப்பா முருகா, இன்னிக்கு சரண்கிட்ட ப்ரச்சனை பண்ணணும். சான்ஸ் கொடு”ன்னு வேண்டிகிட்டேன் பாரு.”

“நீ வேண்டுனாலும் வேண்டியிருப்ப. முருகனை கேட்டாதானே தெரியும்?”

“நீயும்தான் வேண்டியிருப்பே. முதல்ல இந்த தீப்திகிட்ட மோதுற மாதிரி மோதணும். அப்புறம் காதலிச்சிடணும்னு. யார் கண்டா?”

“ஆமா, இந்தம்மா பெரிய மிஸ் யுனிவர்ஸ். லவ் பண்ணிடுவோமாம்.”

“ஆமா இவன் பெரிய மிஸ்டர் வெர்ல்டு. என்னை சொல்ல வந்துட்டான்”

“பேச்சை நிறுத்து. முதல்ல உன் ஸ்கூட்டியை நகத்து.”

“நீ முதல்ல உன் யமஹாவை நகத்து.”

“மோதுனது நீ. நீ முதல்ல பின்னாடி போ.”

“முடியாது போடா.”

“என்னது? டாவா? ஸ்கூட்டி நசுங்கிடும். பாத்துக்க.”

“எங்க? நசுக்கு பாக்கலாம்?”

“உன்னை” பற்களை நற நறத்தபடி சரண் பைக்கின் ஆக்ஸிலேட்டரை முறுக்கிய நேரம்-

“தீப்தி? என்னம்மா சத்தம்?” வீட்டுக்குள்ளிருந்து அவளின் அப்பாவின் குரல் வீதியை எட்டியது,

சட்டென சமாளித்துக்கொண்ட தீப்தி, “அது ஒண்ணுமில்லைப்பா. ஸ்கூட்டி செல்ஃப் எடுக்கலை. அதான் கிக் பண்றேன்.” உள்ளே இருக்கும் அப்பாவுக்கு பதில் சொல்லிக்கொண்டே, “போ” என்பது போல் சரணைப் பார்த்து கண்ணாலும் கையாலும் சைகை செய்தாள்.

“நான் வரவாம்மா?” மீண்டும் அப்பாவின் குரல்.

“இல்லைப்பா. ஸ்டார்ட் ஆயிடுச்சி” அப்பாவின் வீதி வரவை நிறுத்தியது தீப்தியின் குரல்.

“வில்லன் வர்றதுக்குள்ள பைக்கை எடுடா மிஸ்டர் வெர்ல்டு” அடிக்குரலில் தீப்தி அதட்ட,

“உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்” மிரட்டியபடியே பைக்கை கிளப்பினான் சரண்.

“பாக்கலாம். பாக்கலாம். போடா.”

“பாக்கலாம். பாக்கலாம். போடி.”

பைக் பறந்தது. ஸ்கூட்டியும் கிளம்பியது சற்றே சிணுங்கியபடி.

அன்றைக்கு வகுப்பில் சரணின் சிம்மாசனம் சரணுக்கே கிடைத்தது. வேறெங்கும் இடமின்றி தீப்தி அவனுக்கு முன்னாலிருந்த பெஞ்ச்சில் அமர நேரிட்டது. அவளுக்கு அருகில் வினோத்.

வினோத் அவ்வளவு நல்ல பையன் இல்லை.

கொஞ்சம் கெட்ட பையனும் கூட.

முக்கியமாக அவனுக்கும் சரணுக்கும் ஆகவே ஆகாது!

“தீப்தி” அறிமுகப்படுத்திக்கொண்டு வினோத்தைப் பார்த்து புன்னகைத்தாள்.

“வினோத்” பெயரை சொல்லிவிட்டு அவனும் சிரித்து வைத்தான்.

கால்குலஸ் கரைசலை அள்ளித் தெளித்துக் கோண்டிருந்தார் வரதராஜன்.

அன்றைக்கு என்னவோ சரணும் அதை ஆர்வமாக பருகிக் கொண்டிருந்தான். மும்முரமாக குனிந்து குனிந்து நோட்டில் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான். அதனால் அவன் அதை எதிர்பார்க்கவில்லை.

திடீரெனெ திரும்பிய தீப்தி, “என்னப் பண்றே?” சரணைப் பார்த்து முறைத்தாள்.

புரியாமல் முழித்தான் சரண்.

முறைத்தபடியே தீப்தி முன்பக்கம் திரும்பியதும், வினோத் அவளுக்குத் தெரியாமல் அவளின் போனி டெயிலைப் பிடித்து இழுத்தான்.

தீப்தி திரும்பவும் திரும்பி, திரும்பவும் சரணைத் திட்டிவிட்டு, திரும்பவும் அவனை முறைத்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.

வினோத் சாதுவாக ஒன்றும் தெரியாதது போல் தீப்தி சரணை திட்டுவதையும் அவன் விழிப்பதையும் வேடிக்கை பார்த்தான்.

சரண், “தீப்தியை எதுவும் செய்யாதே” என்பது போல் வினோத்தைப் பார்த்து விரலை உயர்த்தி அனல் பார்வை வீசி மிரட்டினான்.

ஆனால் வினோத் கண்டுகொள்ளாமல், “ஒரு முறை தீப்தியின் இந்தப் பக்கத் தோளை தட்டினான். தட்டிய கையை தட்டிவிட்டாள் தீப்தி.

அடுத்ததாக வினோத் செய்ததை சரணும் எதிர்பார்க்கவில்லை. சத்தியமாக தீப்தியும் எதிர்பார்க்கவில்லை.

வினோத், அன்று லோ-கட் ப்ளவுஸ் ஆணிந்திருந்த தீப்தியின் வெற்று முதுகை மெல்ல வருடினான். விரல்களால் அழுத்தினான். ஒரு கிள்ளலும் கிள்ளிவிட்டான் – சரண் தடுக்க தடுக்க…

சடாரென திரும்பிய தீப்தியோ, யாரும் – சரணே எதிர்பார்க்காத ஒன்றை செய்தாள்.

சரண் கன்னத்தில் அறைந்தாள். ஓங்கிப் பளாரென.

அவள் கண்களோரம் கசிந்தது. கண்களின் மையமோ சினத்தில் செக்கச் செவேல் என் சிவந்து கொதித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *